தெய்வத்தின் குரல்: யார் ஆனந்த ஆத்மா?

By செய்திப்பிரிவு

தியானத்தில் ஒருமுகப்படுவதற்குப் பெரிய இடைஞ்சல் என்ன? இந்த மனசு ஓயாமல் ஆடிக்கொண்டிருப்பதுதான். மனத்தினால்தான் எல்லா விதமான கஷ்டங்களும் உண்டாகின்றன. மனத்தில் ஏற்படும் ஆசையே அத்தனை கஷ்டங்களுக்கும் காரணம். ‘ஆசைப்படாதே’ என்று இந்த மனசை இழுத்துப் பிடித்து நிற்க வைக்க முடியவில்லை.

நாம் ‘ஒரு வஸ்துவை நினை’ என்று இந்த மனசிடம் சொன்னால், அது ஏதோ சொற்ப காலம் அதை நினைப்பதுபோல இருந்து, வேறு எங்கோ பாய்ந்து விடுகிறது. தியானம், அமைதி என்றெல்லாம் நான் உபந்நியாசத்தில் சொல்கிறபோது ஒரு க்ஷணம் உங்கள் மனம் அடங்கினாற்போல் தோன்றும், ஆனந்தமாய் இருக்கும். ஆனால், அடுத்த க்ஷணமே மனம் எங்கோ ஓடி, அமைதி குலைந்துபோகிறது.

‘பேசாமல் இரு’ என்று கட்டளை போட்டு வாயை மூடிக்கொண்டுவிட்டால், அது ஓரளவாவது பேசாதிருக்கிறது. ‘பார்க்காதே’ என்று உத்தரவு போட்டு கண்ணை மூடிக்கொண்டுவிட்டால், கண் ஓரளவாவது பார்க்காமல் இருக்கிறது. ஆனால், இந்த மனத்திடம் மட்டும் ‘நினைக்காமல் இரு’ என்று எவ்வளவுதான் முட்டிக்கொண்டாலும் அது கேட்பதில்லை. நாம், ‘நினை’ என்றால் மனம் நினைக்க வேண்டும்; ‘நினைக்காதே’ என்றால் நினைக்காமலிருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மனம் ஸ்வாதீனமாயிற்று. நமக்குச் சித்த ஸ்வாதீனம் இருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது பைத்தியங்கள் என்று சிலரைக் குறிப்பிட்டு அவர்கள் சித்த ஸ்வாதீனம் இல்லாதவர்கள் என்கிறோமே, உண்மையில் நம் எவருக்குமே சித்த ஸ்வாதீனம் இல்லைதான். பைத்தியம் வாயை அடைக்காமல் பிதற்றிக்கொண்டே இருக்கிறது என்றால், நாமும் மனத்தை அடைக்காமல் பிதற்றல் வழியில் போகத்தான் விட்டிருக்கிறோம்.

சித்த ஸ்வாதீனம் இப்படி இருக்கும்

நமக்குச் சித்த ஸ்வாதீனம் வந்துவிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா? எத்தனை வலி ஏற்பட்டாலும், ‘வலி என்று நினைக்காதே’ என்றால் மனம் வலியைப் பொருட்படுத்தாமல் இருந்துவிடும். எதிரிலே புலி வந்து உறுமினால்கூட மனத்திடம் ‘பயப்படாதே’ என்றால் அது பயப்படாமலே இருக்கும். இப்போது நாம் காரணமில்லாமல் அழுதுகொண்டிருக்கிறோம். மனசு வசப்பட்டுவிட்டாலோ அழுகைக்குக் காரணமாக எத்தனை துக்கம் வந்தாலும்கூட அது சிரித்துக் கொண்டிருக்கும். ஆத்திரமூட்டும்படி என்ன நடந்தாலும் அது கோபமே இல்லாமல் சாந்தமாயிருக்கும்.

முதலில் மனசை இப்படி அப்படிப் போகாமல், நல்ல விஷயத்தில் நினைவைச் செலுத்தும்படி செய்ய வேண்டும். எண்ணெய்யை விட்டால் அது எப்படிப் பிசிறு இல்லாமல் ஒரே இழையாக விழுகிறதோ (இதைத் ‘தைலதாரை’ என்பார்கள்) அது மாதிரி மனம் நல்ல நினைவில் ஒருமுகப்பட்டுச் செல்ல வேண்டும். ‘ஸ்வாமி, ஸ்வாமி’ என்ற நல்ல வஸ்துவை அப்படியே நினைத்துக்கொண்டிருக்கும்படி, மனத்தை அப்பியாசப்படுத்த வேண்டும். அதன்பிறகு ‘நினைக்கிறோம்’ என்பதும்போய், ஸ்வாமியிலேயே கலந்து ஸ்வாமியாகவே ஆகிவிடுவோம்.

இப்படி மனசை அடக்குவதுதான் ‘யோகம்’ என்பது.

சாவதற்குள் இந்த மனசை அடக்க ஒருவழி தேடியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி பிறப்புதான்; மறுபடி மனசின் ஓயாத ஒட்டம்தான். எனவே, இந்த ஜன்மத்திலேயே காமமும் குரோதமும் ஏற்படுவதற்கு எவ்வளவோ ஹேதுக்கள் இருக்கும்போதே இவற்றின் நடுவே மனசை அடக்க முழுப் பிரயத்தனமும் பண்ண வேண்டும். அப்படிப் பண்ணி ஜெயித்தவன்தான் ‘யுக்தன்’ என்கிற யோகி. அவன்தான் ‘ஹுகி’ உண்மையான ஆனந்த ஆத்மா என்கிறார் கிருஷ்ண பகவான்.

‘யோகமெல்லாம் ரிஷிகள் சமாச்சாரம், நமக்கு வருமா?’ என்று விட்டு விடலாகாது. மருந்து யாருக்கு வேண்டும்? வியாதி உள்ளவனுக்குத்தானே? நமக்குத்தான் மனோவியாதி – அதாவது, மனம் என்ற வியாதி – இருக்கிறது. எனவே, நாம்தான் அதை அடக்குகிற மருந்தைச் சாப்பிட வேண்டும்.

அந்தரங்கம் பகிரங்கம்

மனசை அடக்க இரண்டு சாதனங்கள் உண்டு. ஒன்று பகிரங்க சாதனம், மற்றது அந்தரங்க சாதனம். வெளிமுகமாகச் செய்வது பகிரங்க சாதனம். உள்ளுக்குள்ளேயே செய்து கொள்வது அந்தரங்க சாதனம். இரண்டும் வேண்டும். இந்த மடத்தில் வண்டிக்காரன், சமையல்காரன் இவர்கள் வெளியிலும், தீபத்தில் திரிபோட்டுத் தருகிறவன், புஷ்பம் எடுத்துக் கொடுப்பவன் இவர்கள் பூஜைக்குப் பக்கத்திலேயே அந்தரங்கமாகவும் இருக்கிறார்கள். இரண்டு வகையினரும் இருந்தால்தான் மடம் நடக்கும். அப்படியே பகிரங்க சாதனம் அந்தரங்க சாதனம் இரண்டையும் கொண்டு மனத்தை முதலில் நல்லதில் ஒருமுகப்படுத்தி, பிறகு ஒன்றையுமே நினைக்காத நிலைக்கு வர வேண்டும்.

தான தருமம் செய்து, சந்தியாவந்தனம், யாகம், பூஜை, பரோபகாரம் எல்லாம் நல்லதில் மனசைச் செலுத்தும் பகிரங்க சாதனங்கள். தியானம் என்பதே மிகச் சிறந்த அந்தரங்க நிலை. அதற்கு அநுகூலமாக இருக்கிற மற்ற அந்தரங்க சாதனங்கள் ஐந்து. அவை: அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் என்பவை. எவருக்கும், எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனசை அன்புமயமாகச் செய்துகொள்வது அஹிம்சை.

மனம், வாக்கு, காயம் மூன்றையும் உண்மையிலே ஈடுபடுத்துவது சத்தியம். அஸ்தேயம் என்றால் ‘திருடாமல் இருப்பது’ என்று அர்த்தம். அதாவது, பிறர் பொருட்களில் ஆசையே எழாதபடி வைராக்கியமாக இருப்பது. சௌசம் என்றால், தூய்மைப்படுத்திக் கொள்வது.

ஸ்நானம், மடி, ஆசாரம், ஆகாராதிகளின் சுத்தி எல்லாம் சௌசத்தில் அடங்கும். இந்திரிய நிக்ரஹம் என்பது புலன்களை அவற்றின் போக்கில் விடாமல் ஒவ்வோர் இந்திரியத்துக்கும் இவ்வளவுதான் ஆகாரம் கொடுப்பது என்று நிர்ணயமாக வைத்துக் கொள்வது. ‘கண் இதைப் பார்க்கக் கூடாது. காது இதைக் கேட்கக் கூடாது.

வாய் இதைத் தின்னக் கூடாது. இதைப் பேசக் கூடாது. உடம்பு இந்தப் பாவத்தை செய்யக் கூடாது’ என்று தடுத்து நிறுத்துவதே இந்திரிய நிக்ரஹம். சாதனை செய்வதற்காக மட்டுமே சரீரம் வேண்டும். சரீரம் உயிர் வாழ்வதற்காக இந்திரியங்களுக்கு எவ்வளவு அதிகபட்ச தீனி கொடுக்க வேண்டுமோ அவ்வளவே கொடுக்க வேண்டும்.

அந்த ஐந்தும் ‘சாமானிய தர்மங்கள்’ எனப்படும். அதாவது நமது மதத்தைச் சேர்ந்த சகல பிரிவினரும் இவற்றை அநுஷ்டிக்க வேண்டும் என்பது மநுதர்மம்.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

19 mins ago

சினிமா

35 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

47 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

45 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்