வெறுப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்; ஆனால் ஒருவரை நேசிப்பதற்கு ஒரு காரணம் போதும். பிறரை நேசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் இயற்கை படைத்த நறுமணங்களில் ஒன்றுதான் காதல்.
பூமியில் தொடங்கி வானகத்துக்கும் உடலில் தொடங்கி ஆத்மாவுக்கும் பரவக்கூடிய நறுமணமாகக் காதலும் நேசமுமே அரிய திரவியங்களாக இன்னமும் பூமியில் உள்ளன. அப்படிப்பட்ட நறுமண உணர்வான காதலைப் பற்றிக் காதலர் தினமாகக் கொண்டாடப்படும் இத்தினத்தில் கவிஞர்களும் மேதைகளும் அறிஞர்களும் பாடிய, பேசிய மொழிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. நேசத்தின் நறுமணத்தைப் பகிர்ந்துகொள்ளலாம்.
காதலர்களின் வசந்தகாலம் வந்துவிட்டதால், இந்தப் புழுதிக் குவளை ஒரு தோட்டமாக மாறலாம் சொர்க்கத்துக்கான அறிக்கை வந்துவிட்டதால் ஆத்மாவின் பறவை உயரப் பறக்கத் தொடங்கலாம். கடல் முத்துக்களால் நிறையும் உப்புக் கழிமுகம் சுவர்க்க நதியாகும் வெறும் கல் மாணிக்கமாகும் உடல் முழுமையாக ஆத்மாவாகும்.
- ஜலாலுதீன் ரூமி
ஆழமான உறவொன்றில், உங்களுக்கும் இன்னொருவருக்கும் இடையிலான எல்லைக்கோடு இருக்காது. நீங்கள்தான் அவள், அவள்தான் நீங்கள். உங்கள் துயரம் அவளது துயரம். உங்களது துயரம் குறித்த உங்களுடைய புரிதல் நீங்கள் நேசிப்பவரின் துயரத்தைக் குறைப்பதற்கு உதவும். துயரம், சந்தோஷம் இரண்டுமே தனித்த விவகாரங்களாக இருக்காது. நீங்கள் நேசிப்பவருக்கு என்ன நடக்கிறதோ அது உங்களுக்கும் நிகழ்கிறது. உங்களுக்கு நிகழ்வது உங்களை நேசிப்பவருக்கும் நிகழ்கிறது.
- திக் நாட் ஹான்
ஒரு உண்மையான காதலர், நேசிக்கப் படுபவரும்தான். காதலரும் காதலிக்கப்படுபவரும் இரு வேறு நபர்களல்ல. இரண்டுமே மாறக்கூடிய பதங்கள்தாம். உரிமை அல்லது ஒப்புக்கொடுக்கும் அகந்தையை அகற்றும் தெய்விக நிலையால் அவனும் அவளும் அங்கே நெகிழ்ந்திருப்பவர்கள். அங்கே உங்களை நீங்கள் அடிமையாக ஒப்புக்கொடுக்கவில்லை, ஒரு உறுதிமொழியாக உங்களையே அளிக்கிறீர்கள்.
- நித்ய சைதன்ய யதி
நிலவு எனது உடலுக்குள் பிரகாசிக்கிறது, எனது குருட்டுக் கண்களால் அதைப் பார்க்க முடியாது. நிலவு எனக்குள் தான் இருக்கிறது, சூரியனும்தான். நித்தியத்தின் நிறுத்தாத மத்தள ஒலி என்னுள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது எனது செவிட்டுக் காதுகளால் அதைக் கேட்க முடியாது.
- கபீர் தாசர்
நேசம் வெறுப்போ பொறாமையோ லட்சியமோ தோல்வி பயத்தைக் கொண்டிருக்கும் போட்டி மனப்பான்மையோ அல்ல. நேசம் இருக்குமிடத்தில் அந்தரங்கம் இருக்கிறது; அந்தரங்கமில்லாமலும் இருக்கிறது. அங்கே பொருள் உண்டு; பொருளற்றதும் உண்டு. அது ஒரு மலரின் நறுமணத்தைப் போல; ஒருவர் அல்லது பலர் அதை முகர முடியும். அதன் நறுமணம் தான் அவசியமே தவிர, அது யாருக்குச் சொந்தமானதென்பதில் எதுவும் இல்லை.
- ஜே. கிருஷ்ணமூர்த்தி
அந்தப் பொன்னில்தான் எத்தனை தனிமை இரவுகளின் நிலவு ஆதாம் முதலில் கண்ட நிலவு அல்ல நெடிய நூற்றாண்டுகளாகத் தொடரும் மனிதனின் பார்வை புராதன ஆற்றாமையுடன் அவளை நிறைத்துள்ளது அவளைப் பார் அவள் உன் கண்ணாடி.
- ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்
காதல் அடைதல் உயிரியற்கை - அது
கட்டில் அகப்படும் தன்மையதோ - அடி
சாதல் அடைவதும் காதலிலே - ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்று கண்டாய்.
- பாரதிதாசன்
எண்ணற்ற வடிவங்களில் எண்ணிக்கையற்ற முறைகள் ஜென்ம ஜென்மங்களாக யுகம்தோறும் காலாதீதமாக நான் உன்னை நேசித்திருக்கிறவன்போல. எனக் கட்டுண்ட இதயமோ ஆரமெனப் பாடல்களை உருவாக்கியபடியே உள்ளது நீ எடுத்த எத்தனையோ அவதாரங்கள் அந்தப் பாடல்களைத் தமது கழுத்தில் அணிந்துகொள்கின்றன ஜென்ம ஜென்மங்களாக யுகம்யுகமாகக் காலாதீதமாக.
- ரவீந்திரநாத் தாகூர்
வந்தமரும் காகத்தோடு வீட்டை நேசி. நீங்கள் ஒருவரை நேசித்தால் அவருடன் தொடர்புடைய அனைத்தையும் நேசிப்பீர்கள்.
- சீனப் பழமொழி
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
வலைஞர் பக்கம்
5 mins ago
சினிமா
10 mins ago
சினிமா
15 mins ago
இந்தியா
23 mins ago
க்ரைம்
20 mins ago
இந்தியா
26 mins ago
தமிழகம்
48 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago