துர்க்கைதான் ஆதிபராசக்தியாய் அனைத்தும் கைவரச் செய்பவள். பொதுவாகவே நவராத்திரியில் துர்க்கை வழிபாடு செய்து பல நற்பலன்களைப் பெறுவது பக்தர்களின் வழக்கம். இதற்கு பட்டீஸ்வரம் துர்க்கையை வழிபடலாம்.
தலபுராணம்
முன்னொரு காலத்தில் பார்வதி தேவி, ஞானம் பெறுவதற்காக சிவனை நோக்கித் தவம் இயற்றத் தொடங்கினாள். காமதேனுவின் நான்கு மகள்களில் முதல் மகளான பட்டி, உதவிகள் புரிவதற்காக இங்கு வந்து உதித்தாள்.
களிமண்ணில் அழகான சிவலிங்கத்தை உருவாக்கினாள் பட்டி. பின்னர் தனது கொம்புகளினால் மண்ணைத் தோண்டி குளம் அமைத்தாள். ஈசனுக்கு பார்வதி அபிஷேகம் செய்ய ஏதுவாக புனித நதிகளான கங்கையையும், காவிரியையும் தனது ஆத்ம பலத்தால் இக்குளத்துக்கு வரவழைத்தாள்.
தானே பால் சுரந்து பாலாபிஷேகத்துக்கும் வழி வகுத்தாள் பட்டி. இதனால் மனம் மகிழ்ந்த ஈசன், பட்டீஸ்வரன் என்ற பெயர் ஏற்று இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கத் தொடங்கினான். அதுமுதல் பட்டீஸ்வரம் என்றே இவ்வூருக்குப் பெயர். இவ்வூரில்தான் துர்க்கை அருள்பாலித்து வருகிறாள்.
சாந்த சொரூபிணி
ஆறடி உயரத்தில், அழகாக புடவை கட்டி, எலுமிச்சை மற்றும் ரோஜா மாலை அணிந்து காட்சி அளிக்கிறாள் . மூன்று கண்களைக் கொண்டவள். எட்டுக் கரங்களுடன், எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்து, நிமிர்ந்து நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள். எட்டு கரங்களில் ஒன்றை அபயஹஸ்தமாகவும், மற்றொன்றை இடை மீது வைத்து கம்பீரமாகவும் காட்சி அளிக்கிறாள்.
பிற ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு சாந்தமாக போர் முடித்த கோலத்தில் காணக் கிடைக்கிறாள். இடப்பக்கம் நோக்கியுள்ள வாகன சிம்மத்தின் ரூபிணியாக விளங்குகிறாள். துர்க்கை இங்கு சாந்த சொரூபிணியாக இருப்பதை அவளது புன்னகை தவழும் முகமும், வலப்புறம் திரும்பியுள்ள சிம்ம வாகன முகமும் நிரூபிக்கிறது. பக்தர்களை வரவேற்கும் கோலத்தில் வெற்றி வாகை சூடிய நிலையில் இருக்கிறாள்.
பிரம்மஹத்தியை நீக்கியவர்
பொதுவாகவே துர்க்கை தீமைகளையும் பாவங்களையும் அழித்து வெற்றியை அளிப்பவள். ரேணுகா தேவியின் புதல்வரான, சத்திரிய குலத்தை அழிக்கும் குறிக்கோளைக் கொண்டு, பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பட்ட பரசுராமர் துர்க்கையை வணங்கி தேவர் உலகம் சென்றார் என்கிறது புராணம்.
ராவணனை வதம் செய்த ராமரும், கர்ணனை வதம் செய்த அர்ச்சுனனும் கொன்ற பாவம் தீர துர்க்கை பூஜை செய்தனர். துர்க்கை, பெண்பால் தெய்வம் என்றாலும், மரண பயம் நீக்குபவள். பாவத்தை அழிப்பதில் சிவ அம்சத்தையும், வெற்றியை அளித்து வாழ வைப்பதில் விஷ்ணு அம்சத்தையும், பக்தர்களின் தேவைகளைப் புதிதாகப் படைப்பதில் பிரம்ம அம்சத்தையும் கொண்டவள்.
இதனால் மந்திர ஜபமாக துர்க்கையைப் பூஜித்தால் முப்பத்து முக்கோடி தேவர்களை ஆராதித்த பலன் கிடைக்கும்.
உகந்த காலம்
துர்க்கையைப் பூஜிக்க உகந்த காலம் ராகு காலம். ராகு தோஷம் நீங்க இந்த ஆராதனை நடைபெறுவதால், ராகுவின் அதி தேவதையான துர்க்கையை ராகு காலத்திலேயே விளக்கேற்றித் துதிக்க வேண்டும். இவள் கண்ணனுக்கு மூத்தவள் என்பதால், விஷ்ணுவின் அவதாரங்களின் பிறந்த திதிகளான அஷ்டமி, நவமி ஆகியவையும் இவளுக்கு உகந்தவையே.
மேலும் அவளுக்கே உரித்தான அமாவாசை, பவுர்ணமி திதிகள் மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளும் இவளை ஆராதிப்பதற்குச் சிறந்த நாட்களாகும். வீர செளந்தர்ய தேவியாக வீற்றிருக்கிறாள் இந்தப் பட்டீஸ்வரம் துர்க்கை!
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago