அனைத்து உயிர்களிலும் அம்பிகை

By மு.ஜெயலட்சுமி

செப்டம்பர் 24 - நவராத்திரி ஆரம்பம்

ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளை வைத்துப் பூஜிப்பவர்களுக்குச் சகல சுகங்களையும், பாக்கியத்தையும் அளிப்பேனென்று அம்பிகைக் கூறுவதாக தேவிபுராணத்தில் உள்ளது.

அசுரர்களை அழிப்பதற்காக அம்பிகை அவதரித்தபோது தேவர்கள் அனைவரும் தங்களின் அம்சங்களை அம்பிகையிடம் சேர்த்துவிட்டு பொம்மைகள் போல் இருந்தனராம். இதை நினைவுகூரும் விதமாகவே பொம்மை கொலு பழக்கம் ஏற்பட்டது என்ற ஒரு கருத்துள்ளது. அகிலத்தில் உள்ள அத்தனை உயிர்களிலும் அம்பிகையே இருக்கிறாள்.

ஒவ்வொரு நாளும் அம்பிகைக்கு செய்யவேண்டிய அலங்காரங்கள் மற்றும் நைவேத்தியங்கள் உள்ளன.

முதல் நாள்

மது கைடபர் என்ற அரக்கர்களின் அழிவுக்குக் காரணமாக விளங்கிய தேவியை மகேஸ்வரி வடிவத்தில் அலங்கரித்துப் பூஜிக்க வேண்டும். அலங்காரத்தில் அபயம், வரதம், புத்தகம், அச்சமாலை தாங்கிய குமாரியாக அமைத்து முத்துமாலை, ரத்தினமாலை, மல்லிகை மாலை சூட்டி மகிழலாம். சக்கரைப் பொங்கல் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.

இரண்டாவது நாள்

மகிஷாசுரனை வதம் செய்யப் புறப்பட்ட தேவியை ராஜராஜேஸ்வரியாக கரும்பு வில், மலர் அம்பு, பாசங்குசம் ஏந்தியவளாக அலங்கரிப்பார்கள். தயிர்சாதம் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.

மூன்றாம் நாள்

மகிஷாசுர வதம் செய்ய தேவி, சூலத்தைக் கையிலேந்தி மகிஷத்தின் தலைமீது வீற்றிருக்கும் கோணத்தில் கல்யாணி வடிவமாக அலங்கரிப்பார்கள். வெண்பொங்கல் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.

நான்காம் நாள்

துர்க்கையை ஜெயதுர்க்கை என்றும் ரோகிணி துர்க்கை என்றும் அழைப்பர். சிம்மாசனத்தில் அமர்ந்து தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அருள்பாலிக்கும் கோலத்தில் அன்றைய தினம் வீற்றிருப்பாள். எலுமிச்சை சாதம் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.

ஐந்தாம் நாள்

துர்க்கை, கம்பன் என்ற அரசனால் அனுப்பட்டத் தூதுவனாகிய சுக்ரீவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பாவனையில் அலங்கரிப்படுகிறாள். அன்றைய தினம் புளியோதரை நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.

ஆறாம் நாள்

சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் சண்டிகார் தேவியாக அலங்கரிக்கப்பட்டு கைகளில் அக்கமாலை, கபாலம், தாமரைப் பூ, பொற்கலசம் ஆகியவற்றைக் கொண்டவளாக பிறை அணிந்த தோற்றத்தில் அருள் பாலிக்கிறாள். அன்றைய நாள் தேங்காய் சாதம் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.

ஏழாம் நாள்

கண்ட, முண்டர்கள் என்ற அசுரர்களை வதம் செய்தப்பின் பொற்பீடத்தில் அமர்ந்து வீணை வாசிக்கும் கோலத்தில் தேவி பூஜிக்கப்படுகிறாள்.

இவளை சாம்பவி என்றும் அழைப்பர். அன்றைய தினம் தேவிக்குக் கல்கண்டு சாதம் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.

எட்டாம் நாள்

ரக்தபீஜன் வரத்துக்குப் பிறகு கருணை நிறைந்தவளாக அடர்ந்த கோலத்தில் அலங்கரிக்கப்படுகிறாள்.

இந்தக் கோலத்தில் அஷ்ட சித்திகளும் படைசூழ அவள் வீற்றிருப்பது சிறப்பு. சர்க்கரைப் பொங்கல் அன்றைய நாள் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும்.

ஒன்பதாம் நாள்

தேவியின் கரங்களில் வில், பாசங்குசம், சூலம் ஏந்தியவளாக சிவசக்தி வடிவமாகிய காமேஷ்வரியாக காட்சியளிக்கிறாள். இது அரக்கர்களை அழித்தக் கோலம்.

தேவிக்கு அன்றைய நாளில் அக்கார வடிசல் நைவேத்தியத்தில் இடம்பெற வேண்டும். இப்படி ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வடிவில் தேவியை நாம் வணங்குகிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 mins ago

சினிமா

7 mins ago

சினிமா

12 mins ago

இந்தியா

20 mins ago

க்ரைம்

17 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்