தூத்துக்குடி அருகே வெளிநாட்டினர் தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து, மண் பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆட்டோ பயணம்
சென்னை தனியார் சுற்றுலா நிறுவனம், ஆண்டுதோறும் வெளிநாட்டினர் பங்கேற்கும் ‘ஆட்டோ சேலஞ்ச்’ என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டும் ஆட்டோ சேலஞ்ச் சுற்றுலா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாப் பயணம் கடந்த 29-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இதில், அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, ஜெர்மனி, அயர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த 26பேர் கலந்து கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி வருகை
கடந்த டிசம்பர் 28-ம் தேதி இவர்கள் அனைவரும் சென்னையில் சந்தித்தனர். அன்றைய தினம் அவர்களுக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர், 26 பேரும் 12 அணிகளாக பிரிந்து 12 ஆட்டோக்களில் தங்கள் பயணத்தை தொடங்கினர். அவர்களே ஆட்டோக்களை ஓட்டி வந்தனர்.
புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை வழியாக வியாழக்கிழமை இரவு தூத்துக்குடி வந்தனர். வெள்ளிக்கிழமை காலை, தூத்துக்குடியில் உள்ள பிரபல தேங்காய் எண்ணெய் தயாரிப்பு நிறுவனம், உப்பளங்கள் உள்ளிட்டவற்றை சுற்றிப்பார்த்தனர். மாலையில் தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர்களுடன் நட்புறவு கிரிக்கெட் விளையாடினர்.
பொங்கல் கொண்டாட்டம்
சனிக்கிழமை காலை சாயர்புரம் அருகேயுள்ள தனியார் பண்ணைத் தோட்டத்தில் கூடினர். அங்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 12 அணியினருக்கும் தனித்தனியாக பொங்கல் பானை, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன. அவர்கள் அடுப்பு மூட்டி தனித்தனியாக பொங்கல் வைத்தனர். அந்தப் பகுதியை சுற்றி கரும்பு, மஞ்சள் குலை, வாழைத்தார் மற்றும் பழங்கள் கட்டப்பட்டிருந்தன.
வேட்டி, சேலையில்…
இவர்கள் அனைவரும் தமிழர் கலாச்சாரத்துக்கு மாறினர். ஆண்கள் அனைவரும் வேட்டி கட்டி, சட்டை அணியாமல், தோளில் துண்டு மட்டும் போட்டிருந்தனர். அதுபோல பெண்கள் சேலை கட்டி தமிழ் பெண்களாக மாறியிருந்தனர்.
பொங்கல் பானை பொங்கிய போது பொங்கலோ, பொங்கல் என கோஷமிட்டதுடன், குலவை ஒலி எழுப்பி அசத்தினர். பின்னர் பொங்கலை உண்டு மகிழ்ந்தனர். சுவையாக பொங்கல் வைத்த அணிக்கு பரிசாக வாழைத்தார் வழங்கப்பட்டது. வெளிநாட்டினரின் ஆட்டம், பாட்டத்துடன் பண்ணைத் தோட்டம் களைகட்டியிருந்தது. இந்த கொண்டாட்டத்தை பார்க்க உள்ளூர் மக்கள் அங்கு திரண்டிருந்தனர்.
பண்பாட்டை விளக்க முயற்சி
இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அரவிந்த் பிரமானந்தம் கூறுகையில், நாம் வெளிநாடுகளுக்கு சென்று அவர்களது கலாசாரத்தை படித்து வருகிறோம். அவர்களும் நமது பண்பாடு, கலாசாரத்தை தெரிந்து கொள்ள, இந்த ஆட்டோ சேலஞ்ச் நிகழ்ச்சியை ஆண்டு தோறும் நடத்தி வருகிறோம்.
இங்கிருந்து, குற்றாலம் செல்லும் வெளிநாட்டினர், திங்கள்கிழமை கன்னியாகுமரி, 6-ம் தேதி திருவனந்தபுரம் செல்கின்றனர். அங்கிருந்து நாடு திரும்புகின்றனர், என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 secs ago
வாழ்வியல்
51 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
3 hours ago