2007-ல் விருதுநகரில் இளைஞர் காணாமல் போன விவகாரம்: திருப்பூரில் இறந்தவர் வழக்கை ஒருங்கிணைத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை - எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு மரபணு பரிசோதனை

By பெ.ஸ்ரீனிவாசன்

விருதுநகரில் 2007-ம் ஆண்டு காணாமல் போன இளைஞர் விவகாரம் தொடர்பாக, திருப்பூரில் 2015-ல் இறந்தவர் வழக்கை ஒருங்கிணைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சுழி வட்டத்துக்குட்பட்ட திருச்சனூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகன் செல்வராஜ் (27). இவர், 2007-ம் ஆண்டு காணாமல் போனார். வெளியூருக்கு வேலைக்கு சென்றிருக்கலாம் என வீட்டில் இருந்தவர்கள் கருதி விசாரிக்காமல் இருந்தனர். ஆனால், நீண்ட நாளாக செல்வராஜ் குறித்து எந்த தகவல்களும் இல்லை. இதையடுத்து, மகன் காணாமல்போனது குறித்து கடந்த ஆண்டு திருச்சுழி காவல் நிலையத்தில் முத்துவேல் புகார் அளித்தார்.

போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால், முத்துவேல் தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை கடந்த ஜனவரி தொடங்கி சிபிசிஐடி (விருதுநகர்) போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாநகர் வடக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் துண்டுக்காடு பகுதியிலுள்ள தனியார் மில்லின் அருகே, 2015-ம் ஆண்டு இளைஞர் ஒருவர் இறந்துகிடந்தார். மில்லின் மேற்பகுதியில் இருந்து அவர் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸார் கருதினர். வடக்கு போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.

சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எந்தவித தகவல்களும் கிடைக்காததால் கிடப்பில் போடப்பட்டதாக, சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, திருப்பூரில் உயிரிழந்த நபரின் அடையாளங்களை, செல்வராஜின் அடையாளங்களுடன் ஒப்பிட்டு பார்த்ததில், பெரும்பாலானவை ஒத்திருந்துள்ளன. அதன் பிறகு, திருப்பூர் வழக்கையும் ஒன்றிணைத்து விசாரிக்க தொடங்கியுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு திருப்பூர் வந்த சிபிசிஐடி போலீஸார், உரிய நீதிமன்ற, வருவாய்த் துறை அனுமதி பெற்று, திருப்பூர் வளம் பாலம் அருகே இடுகாட்டில் 4 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டவரின் உடலுக்குரிய எலும்புகளைத் தேடும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

புதைக்கப்பட்ட இடத்தை சரியாக அடையாளம் காண்பது தொடங்கி பல்வேறு சிக்கல்கள் இருந்தன. ஒரு வழியாக, 8 மணி நேர தேடுதலுக்குப் பிறகு, அனுமானத்தின் அடிப்படையில் 2 மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக 'இந்து தமிழ்' நாளிதழிடம் சிபிசிஐடி போலீஸார் கூறும்போது, 'ஒருவரை புதைத்த இடத்தில், ஓரிரு ஆண்டுகளில் அந்த எலும்புகளை எடுத்து வீசிவிட்டு அடுத்த உடலைப் புதைத்துவிடுகின்றனர். இந்த விவகாரத்திலும் அதே தான் நடந்துள்ளது. இருப்பினும், 2 எலும்புகள் அவருடையதாக இருக்கலாம் என்று எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு மரபணு பரிசோதனைக்காக எலும்புகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதற்கான ஆவணங்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மரபணு பரிசோதனைக்குப் பின்னரே, இந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வர முடியும்' என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

56 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்