விவசாயிகளின் மரணம் மற்றும் தற்கொலைச் செய்திகளைப் படிக்கும்போது மனம் திக்கென்றது (ஜன.3). இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டைக் கோஸ் போன்றவற்றையா உண்ணப்போகிறோம் என்று எண்ணி உள்ளம் நடுங்குகிறது. இந்தத் தருணத்தில், விவசாய நிலமுள்ள பகுதிகளில் உள்ள பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நிலத்தடி நீர் எடுப்பதைத் தடை செய்யலாம். மேலும், இத்தகைய பகுதிகளில் உள்ள ஆறுகளில் மணல் எடுப்பதை ஒட்டுமொத்தமாகத் தடை செய்ய வேண்டும். இது போன்ற வறட்சிக் காலங்களில், விவசாயிகளின் துயர் துடைக்க “வறட்சிக் கால விவசாய நிவாரண நிதி” ஒன்றினை உருவாக்கி, பத்திரிகைகள், ஊடகங்கள் மூலம் நிதி திரட்டிட வேண்டும். இதற்கு அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது ஒருநாள் வருவாயை நிதியாக அளிக்க முன்வர வேண்டும்.
- சண்முகப்பிரியா சரவணன், போடிநாயக்கனூர்.
இது வாசிப்புப் புத்தாண்டு
டிசம்பர் 31 இரவு புத்தகங்களோடு புத்தாண்டை வரவேற்கக் கூடியிருந்தோரில் இளைய தலைமுறை அதிகமாகத் தென்பட்டது, கூடுதல் நம்பிக்கை அளித்தது. சென்னை தேனாம்பேட்டை பாரதி புத்தகாலயத்தில், இரவு பத்தே கால் மணிக்கு ஒரு தாய் புத்தகம் வாங்கி, அங்கேயே ஓர் இருக்கையில் அமர்ந்தபடி அன்போடு தன் மகனுக்கு வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தார்.
அதேபோன்று, கறுப்பு டி-ஷர்ட் அணிந்து மின்னல் தெறிக்கும் கண்க ளோடு நூல்களை வாங்கிக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் நெஞ்சைத் தொட்டனர். அதில் ஒருவரான சுப்பிரமணியன் (பொறியியல் பட்டதாரி) தனது பிரதிபலிப்புகளை இப்படிப் பகிர்ந்துகொண்டார்: “தமிழ் இந்து செய்தித்தாளை அன்றாடம் வாசிக்கிறோம்.. நடுப் பக்கக் கட்டுரை களைத் தவறாது தொடர்கிறோம்.. இன்றைய இந்த நிகழ்வை அந்த நாளேட்டுச் செய்திக் குறிப்பு மூலமே அறிந்து இங்கே வந்திருக்கிறோம்.. இந்தப் புத்தாண்டு விடியல், புதிய புத்தகங்களையும் புதிய மனிதர்களையும் எங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறது.” வருக புத்தாண்டே.. வாசிப்பின் மிடறுகளை அன்றாட நிகழ்வாக்கிக் கொடு!
- எஸ்.வி.வேணுகோபாலன், சென்னை.
ஊடகங்களின் கடமை!
அண்டை மாநில முதல்வர்கள் எல்லாம் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆட்சியாளர்களின் கருத்தை நேரடியாகப் பெற்று வெளியிடும் மரபு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அற்றுவிட்டது. 2011-ல் முதல்வராகப் பதவியேற்றபோது, ‘வாரம் ஒரு முறை பத்திரிகையாளர்களைச் சந்திப்பேன்’ என்று உறுதியளித்த ஜெயலலிதா அதை நிறைவேற்றவில்லை. அவரது மறைவுக்குப் பின்னர் முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வமும் அதே நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார். ஊடகங்கள் தங்கள் சமூகக் கடமையை இன்னும் தீவிரமாக ஆற்ற வேண்டிய காலம் இது.
- செ.முருகேசன், ஆத்தூர்.
ஆவணங்களை வெளியிடலாமே?
பிரபல தடயவியல் நிபுணர் ப.சந்திர சேகரனின், ‘ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுக்க வேண்டுமா?’ எனும் விரிவான விளக்கத்தை (ஜன.2) படித்தேன். நெருங்கிய உறவினர்கள் கோரினால்தான் விசாரணை என்பது தனிப்பட்டவர்களின் மரணத்துக்குத்தான் பொருந்தும். இவர் மக்கள் தலைவர். தமிழக மக்களுக்கும் அவரது கட்சியினருக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நாட்களில் நடந்தது என்னவென்று தெரியப்படுத்துவது அவசியம்.
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பல விஷயங்களை மக்கள் அறிந்துகொள்ளும் சட்ட உரிமை உள்ளபோது, ஏன் ஒரு முதல்வரின் அந்த 75 நாட்களை மர்மமாக வைத்துள்ளனர்? முதலில் இருந்து கடைசி வரை ஜெயலலிதா மருத்துவ மனையில்தானே இருந்தார்.. இறந்தார்?
- வெங்கடேசன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
3 mins ago
தமிழகம்
13 mins ago
இணைப்பிதழ்கள்
30 mins ago
இணைப்பிதழ்கள்
41 mins ago
தமிழகம்
52 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago