அவமானங்களை ஏற்க முடியாது!

By செய்திப்பிரிவு

சில மாதங்களுக்கு முன்பு 'தி இந்து' நாளிதழில் ' >நனவாகுமா கனவு?' என்று ஒரு கட்டுரை வெளியானது. இந்திய விளையாட்டுத் துறை ஊழல்களைக் கட்டுரையாளர் நிலன் கவலையுடன் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஒலிம்பிக் போட்டியில் இம்முறையும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இது குறித்த விரிவான ஆய்வினை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். நம்மைவிட மனித வளம், பொருள்வளம் குறைவாக உள்ள நாடுகளே அதிக பதக்கங்களை வெல்லும்போது, இந்தியாவின் வீரர்கள் சாதிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அரசியல் தலையீடு, முறைகேடுதான் ஒட்டுமொத்தப் பிரச்சினைக்கும் காரணம். இதையெல்லாம் களைய முடியாது என்றால், ஒலிம்பிக்கில் பங்கேற்பதையே இந்தியா நிறுத்திக்கொள்ளலாம். அரசியல்வாதிகளின் ஊழலுக்காக உலக அரங்கில் இந்தியா அவமானப்படுவதை ஏற்க முடியாது.

- அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை.

******

ரசனையான தொடர்

கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படும் வரலாறுகளில், போர்களும் அது தொடர்பான அரசியல் நிகழ்வுகளுமே முதன்மைப்படுத்தப்படும். ஆனால், வரலாற்றின் நுண்ணிய இழைகளாக உள்ள சிறு விவரக் குறிப்புகள்தான் வரலாற்றுடன் உணர்வுரீதியான ஒரு நெருக்கத்தை நமக்கு ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில், டிசம்பர் 2015 சென்னை வெள்ளத்தின்போது, சென்னையில் ஓடிய / ஓடும் ஆறுகளை வரைபடத்துடன் வெளியிட்டுச் சிக்கல்களை விவரித்தது இன்னமும் நினைவில் உள்ளது. இப்போது 'மெட்ராஸ் அந்த மெட்ராஸ்' தொடர் நூற்றாண்டுகளுக்கு முன்பான சென்னையின் சமூகப் பின்னணிகளைச் சுவைபடச் சொல்லிச் செல்வது ரசிக்கும்படியாக இருக்கிறது.

- நவஜீவன், மின்னஞ்சல் வழியாக.

*

ஏ.ஜி.கே. மேலும் ஒரு தகவல்

தோழர் ஏ.ஜி.கே. மறைவையொட்டி சாம்ராஜ் எழுதிய 'ஏ.ஜி.கே. - மார்க்சியத்தையும் பெரியாரியத்தை யும் இணைத்தவர்' கட்டுரையில் சில தகவல்கள் விடுபட்டிருக்கின்றன.

ஏ.ஜி.கே.யின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க குரல் கொடுத்தது பெரியாரும், ஈ.வி.கே. சம்பத்தும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியால் அன்றைய மாநிலச் செயலாளர் ஏ. பாலசுப்ரமணியன், கே. அனந்த நம்பியார், கோ. வீரையன் ஆகியோர் எடுத்த விடாமுயற்சியின் காரணமாக அப்போது குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி, ஏ.ஜி.கேயின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். சிறையிலிருந்து கோ. வீரையனுக்கு ஏ.ஜி.கே எழுதிய கடிதங்களே சான்று.

- நாகை மாலி, முன்னாள் எம்.எல்.ஏ., நாகப்பட்டினம்.

*

விழிப்புணர்வு தேவை

உ.பி. அரசு மருத்துவமனையில், பத்து மாதக் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கு லஞ்சம் கேட்டு, சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பட்ட தாமதத்தால் குழந்தை இறக்க நேரிட் டுள்ளது. மருத்துவம் மனிதநேயமுள்ள செயல் என்பதை மருத்துவத் துறையினர் மறந்துவிட்டார்களா? லஞ்சம் பெற்றவர்களால் இறந்துபோன குழந்தையின் உயிரை மீட்டுத் தர முடியுமா?

கொசு ஒழிப்பு, மது மற்றும் புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வுப் பேரணிகளை நடத்தும் அரசு, லஞ்சப் பேயை ஒழிப்பதற்கும் பேரணிகளை நடத்த வேண்டும்.

- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

*

அடர்த்தியான நேர்காணல்

வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப்பின் நேர்காணல் அடர்த்தி மிக்கவை. இந்திய சுதந்திரப் போரில் துளியும் பங்குபெறாத பாஜகவினர் தேசியம், தேசப்பற்று குறித்து வரையறை செய்வது விந்தையானது. தற்போது தலித்துகள், சிறுபான்மை வகுப்பினர்கள் மனதில் மிகப்பெரிய அச்சம் குடிகொண்டுள்ளது. பாஜக மற்றும் சங்கப் பரிவாரங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் தொடுத்துவரும் தாக்குதல்களே அதற்குக் காரணம்.

மத்திய அரசின் ஆசியுடனே இவை நடைபெற்றுவருகின்றன என்பதை பாஜக தலைவர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதிர்க்கின்ற வார்த்தைகளே உறுதிப்படுத்துகின்றன.

- பெரணமல்லூர் சேகரன், சென்னை.

*

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

34 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்