இப்படிக்கு இவர்கள்: அரசியல் சாசனத்தின் இன்றைய நிலை?

By செய்திப்பிரிவு

மக்கள் பிரதிநிதிகள் அனைவரும், ‘இந்திய அரசியல் சாசனத்துக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்றுவேன்’ என்று உறுதிமொழி எடுத்துதான் பதவியேற்கின்றனர். அரசியல் சாசனத்தை மீறும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஆளுநருக்கும் பொருந்தும். அவர் தனது அரசியல் சாசனப் பணியைச் செய்யத் தவறும்பட்சத்தில், உயர் நீதிமன்றம் தலையிட அதிகாரம் உள்ளது.

மக்கள் உண்மையான சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற 10 நாடுகளின் அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சங்களிலிருந்து இந்திய அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதனை அமல்படுத்தும் எல்லா நிலைகளிலும் நேர்மையற்றவர்கள், தகுதி இல்லாதவர்கள், கீழ் மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை இருப்பதால் அரசியல் சாசனமே அலங்கோலப்படுத்தப்படுகிறது. இந்நிலை மாறுவதெப்போது?

- சி.பிரகாஷ், முத்தரசநல்லூர்.



நீர்மேல் எழுத்து

பிப்ரவரி 6-ம் தேதி நாளிதழில், ‘அரசியல் நன்கொடைகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும்’ என்ற தலையங்கம் படித்தேன். அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை கள்தான் ஊழலின் ஊற்றுக்கண். எதையும் யாரும் இலவசமாக அளிப்பதில்லை. ஒன்றைக் கொடுத்தால் இன்னொன்று கிடைக்கும் என்பதுதான் நியதி. அதன்படி நன்கொடைகளைக் கொடுத்து தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்கள்.

அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வெளிப் படைத் தன்மை இல்லாத நிலையில், எந்த ஒரு சட்டமும் பிரயோஜனமில்லை. சட்டத்தில் பல ஓட்டைகளை வைத்துக் கொண்டு தூய்மையான லஞ்ச லாவாண்யம் இல்லாத ஆட்சி தருவேன் என்று எந்த அரசியல் கட்சி சொன்னாலும் அது நீரின் மீது எழுதிய எழுத்தைப் போன்றதுதானே?

- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.



மீண்டும் யுனெஸ்கோ கூரியர்?

ஆதி.வள்ளியப்பன் யுனெஸ்கோ கூரியர் பற்றி எழுதிய ‘நினைவில் கரைந்துபோன உலக ஜன்னல்’ கட்டுரை (11.02.17), மணவை முஸ்தபாவின் வேண்டுகோளை தமிழ்நாடு புறக்கணித்ததைப் பற்றிய சரியான நினைவூட்டல். அறிவின்மீதான ஆர்வமும் விருப்பமும் தமிழர்களுக்கும் அவர்களை ஆளும் அரசுக்கும் இல்லை என்பது ஒருபுறமிருக்க, உலகின் பிற பகுதிகளில் வாழும் இதர மொழி பேசுபவர்களும்கூட அந்தக் குற்றச்சாட்டுக்கு விதிவிலக்கல்ல. நிதிப் பற்றாக்குறையின் காரணமாக ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழ் கடந்த 2011-லேயே நிறுத்தப்பட்டுவிட்டது.

பழைய இதழ்கள் மட்டுமே தற்போது ‘யுனெஸ்கோ கூரியர்’ இணையதளத்தில் படிக்கக் கிடைக்கின்றன. தமிழில் வெளிவந்த சில இதழ்கள் ‘படிப்பகம்’ என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழின் தேவையை உணர்ந்த சீன அரசு, இதழை மீண்டும் ஆறு மொழிகளில் அச்சில் கொண்டுவரவும் இணையத்தில் வெளியிடவும் 2016 அக்டோபர் 17 அன்று ‘யுனெஸ்கோ’ அமைப்புக்கு 5.6 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி செய்துள்ளது. 2017 முதல் காலாண்டு இதழாக ‘யுனெஸ்கோ கூரியர்’ வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ந.சந்தனச்செல்வி, கரம்பயம்.



பண்ருட்டியை மறந்துட்டீங்களே?

முதல்வர் ஓ.பி.எஸ்ஸா, சசிகலாவா என்ற போட்டியில், ‘கொள்கைப் பற்றும் செயல்திறனும் மிக்கவர்’ என்று அண்ணாவால் அடையாளம் காணப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரனை மறைத்துவிட்டார்களே? அதேபாலத் தகுதி படைத்த மற்றவர்களையும் முன்னிறுத்த இயலாதது தமிழ்நாட்டின் இன்றைய தாழ்ந்த நிலையையே காட்டுகிறது. இவற்றையெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ எக்கவலையும் இல்லாமல், எஞ்சியுள்ள நாட்களில் பதவி சுகம் காண விரும்புபவர்களுக்கு அடுத்த தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்