ராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் அடைமழை பெய்து எங்கு நோக்கினும் வெள்ளக்காடாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
1959 அல்லது 1960 நவம்பர் மாதம் என நினைவு. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம். வீடு மற்றும் உடமைகளை இழந்த மக்கள் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வெள்ளச் சேதங்களைப் பார்வையிட அன்றைய முதலமைச்சராக இருந்த காமராஜர் எங்கள் பகுதிக்கும் வந்திருந்தார்.
குடியிருப்புப் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், அவர் தனது வேட்டியைத் தூக்கி மடித்துக் கட்டிக்கொண்டு, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய பகுதிக்குள் சென்று மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிகழ்வு இன்னும் எனது நினைவில் பசுமையாக நிற்கிறது.
காமராஜர் போன்று எந்த முதல்வரும் மழை வெள்ள நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களை நேருக்கு நேர் சந்தித்து ஆறுதல் கூறியதாக நினைவில்லை. எளிமை, நேர்மை இவற்றுடன், ஊழல் கறை ஏதும் இல்லாது வாழ்ந்த தன்னலமற்ற அரசியல்வாதி காமராஜர். அத்தகைய நேர்மையாளர் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என்பது பெருமையே.
- சசிபாலன்,‘தி இந்து’ இணையதளம் வழியாக…