இந்தியப் பொருளாதாரத்தையும் மக்களின் அன்றாடத்தையும் கரோனா சூறை யாடிக்கொண்டிருக்கும் நேரத்தில், பயந்ததுபோலவே பணவீக்க நெருக்கடியும் சேர்ந்துகொள்கிறது. நாடு தழுவிய பொது முடக்கத்தின் காரணமாகப் பொருட்கள், சேவைகள் கிடைப்பதில் பெரும் இடையூறு ஏற்பட்டிருப்பதால் விலையேற்றம் நிகழ்ந்திருக்கிறது. தேவை குறைந்திருக்கும் நேரத்தில் இப்படி விலையேற்றம் நிகழ்வதுதான் கவலையளிக்கிறது.
‘நுகர்வோர் விலைப் பட்டிய’லைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், உணவு மற்றும் பானங்கள் வகைகளில் ஒவ்வொரு ஆண்டும் 7.3% விலையேற்றம் ஏற்படுவதைக் காண முடியும். இவற்றில் தற்போது பருப்புகள் உள்ளிட்ட புரத ஆதார உணவுப் பொருட்களின் விலை 16.7% அதிகரித்திருக்கிறது; இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலை 16.2%, பால் மற்றும் பால் பொருட்களின் விலை 8.4% அதிகரித்திருக்கிறது. உணவு வகைகளில் விலையேற்றம் இன்னும் வேகமாக இருந்திருக்கும்; ஆனால் காய்கறிகள், பழங்களின் உற்பத்தியாளர்கள் அவற்றை அவசர அவசரமாகக் குறைந்த விலைக்கு விற்றதால் விலை சற்றே மட்டுப்பட்டது. பெட்ரோல், டீசல் செலவு உட்பட போக்குவரத்துச் செலவு போன்றவற்றாலும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் 7.1% அதிகரித்திருக்கிறது. ஆகவே, உணவுப் பொருள் விலை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரியவில்லை.
ஜூன் மாதத்தில் பருவமழை நன்றாகப் பெய்திருப்பது சற்றே நம்பிக்கையைத் தருகிறது. இதேபோல் முக்கியமான வேளாண் மண்டலங்களில் போதுமான அளவு மழை பெய்தால் நல்ல விளைச்சலும், அதனால் உணவுப் பொருட்களில் விலையிறக்கமும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இருந்தும், காய்கறிகள் விலை அதிகரித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், குறைவான தேவையே இருப்பதால் பொருட்கள், சேவைகள் ஆகியவற்றை விநியோகிப்பவர்கள் தங்கள் தொழிலைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
எஃகு நிறுவனங்கள் சமீபத்தில் விலையை அதிகரிப்பதாக அறிவித்தன. இதற்கு இரும்புப் பாளங்கள் தொடர்பான விலை அதிகரிப்பும் கரோனாவும்தான் பிரதான காரணங்கள். ஆய்வு நிறுவனமான ஐ.எச்.எஸ். மார்க்கிட் நடத்திய ‘இந்தியா பிஸினஸ் அவுட்லுக்’ கணக்கெடுப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அந்த நிறுவனம் கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் கணக்கெடுப்பு நடத்திவருகிறது. முதன்முறையாக, எல்லோருக்கும் நம்பிக்கை கடுமையாகக் குறைந்திருப்பதாக ஒரு மோசமான சித்திரத்தை முன்வைக்கிறது.
கேட்பு குறைந்திருப்பதால் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அவர்களின் தயாரிப்புகள், சேவைகளின் விலையை அதிகரிக்கும் திட்டத்தில் இருப்பதாக இந்தக் கணக்கெடுப்பு பதிவுசெய்கிறது. மிகவும் இக்கட்டான கட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் இருக்கும் இந்த நிலையில், மத்திய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் மக்களின் நம்பிக்கையையும் தொழில் துறையினர், விவசாயிகள், வணிகர்கள் நம்பிக்கையையும் பெறக்கூடிய வகையில் இருப்பது அவசியம்.
முக்கிய செய்திகள்
சினிமா
45 mins ago
கருத்துப் பேழை
41 mins ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
25 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 mins ago