தரமான விதைகளே விவசாயத்தின் பேராயுதம்

By செய்திப்பிரிவு

விவசாயத்துக்கு அடிப்படைத் தேவை அல்லது மூலத் தேவை தரமான விதைகளே. விதைகள்தான் உழவுத் தொழிலின் உயிர்நாடி. அதிக விளைச்சலுக்குத் தரமான விதைகள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தரமான விதைகளைப் பயன்படுத்துவதால் மகசூலை 15% அதிகப்படுத்தலாம். எனவே, ஒவ்வொரு விவசாயியும் விதைகளின் உற்பத்தி நிலைகள் பற்றியும் தரமான விதைகளின் முக்கியத்துவம் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

விதைகளின் உற்பத்தி நிலைகள்

விதைகளின் உற்பத்தி நிலைகளில் கருவிதை, வல்லுநர் விதை, ஆதாரவிதை, சான்று விதை என நான்கு நிலைகள் உள்ளன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, கருவிதைகள் உற்பத்தி செய்யப்படும். அந்தக் கருவிதையிலிருந்து வல்லுநர் விதை கிடைக்கும். வல்லுநர் விதைகள் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உற்பத்திசெய்யப்பட்டு 100% தூய்மையுடன் தங்கநிற மஞ்சள் அட்டை பொருத்தப்பட்டிருக்கும். இந்த விதைகளைப் பயன்படுத்தி ஆதார விதை உற்பத்தி செய்யப்படும். சான்றளிப்புத் துறையில் பதிவுசெய்துவிட்டு ஆதார நிலை விதைகளை விவசாயிகளே உற்பத்திசெய்யலாம்.

ஆதார நிலை விதைக்கு வெள்ளை நிற அட்டை பொருத்தப்பட்டு இருக்கும். இவ்விதைகள் 99% இனத் தூய்மையுடன் இருக்கும். ஆதார விதைகளைப் பயன்படுத்தி சான்று விதை உற்பத்தி செய்யலாம். இவ்விதைகளின் தரத்தைப் பரிசோதித்த பின் நீல நிற அட்டை பொருத்தப்படும். இதன் இனத்தூய்மை 98% இருக்கும். விதை உற்பத்தியாளர்கள் அல்லது விவசாயிகளே உற்பத்திசெய்து விற்பனை செய்யும் விதைகளுக்கு உண்மை நிலை விதைகள் என்று அழைக்கப்படும். இந்த விதை உற்பத்தியில் விதைச் சான்றளிப்புத் துறை ஆய்வு செய்வதில்லை. ஆனாலும், விதையின் தரம் பரிசோதிக்கப்பட்டு விவசாயிகளே விதைகளின் தரத்தை அட்டையில் குறிப்பிட வேண்டும். பொதுவாக, தானிய உற்பத்திக்கு ஆதார நிலை விதை அல்லது சான்று நிலை விதைகளைப் பயன்படுத்திச் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம்.

தரமான விதைகள்

தரமான விதை என்றால் அது தனது பாரம்பரிய குணங்களிலிருந்து சிறிதும் குறையாமல் இருக்க வேண்டும். மேலும் களை, பிற ரகம், பிற பயிர் விதைகள் கலப்பில்லாமல், பூச்சி, பூஞ்சைகள் தாக்கம் இல்லாமலும், தூசிதும்பு இல்லாமலும் இருக்க வேண்டும். விதைகளை விதைத்த உடன் நன்கு முளைத்து சிறப்பாகவும் சீராகவும் வளர்ந்து அதிக மகசூல் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் இனத்தூய்மை, புறத்தூய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம் ஆகிய விதைத் தரங்கள் இந்திய அரசால் விதைச் சட்டத்தில் குறைந்தபட்ச நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நெல், மக்காச்சோளப் பயிர்களுக்கு 98% புறத்தூய்மையும், 80% முளைப்புத் திறனும், 12-13% ஈரப்பதமும் இருக்க வேண்டும். சோளம், கம்பு போன்ற பயிர்களுக்கு 98% புறத்தூய்மையும், 75% முளைப்புத் திறனும், 12% ஈரப்பதமும் இருக்க வேண்டும்.

சத்துமிகு தானியங்களான குதிரைவாலி, கேழ்வரகு, சாமை, வரகு, பனிவரகு போன்ற பயிர்களுக்கு 97% புறத்தூய்மையும், 75% முளைப்புத் திறனும், 12% ஈரப்பதமும் இருக்க வேண்டும். பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசி, தட்டைப் பயறு, துவரை போன்ற பயிர்களுக்கு 98% புறத்தூய்மையும், 75% முளைப்புத் திறனும், 12% ஈரப்பதமும் இருக்க வேண்டும். எண்ணெய் வித்துப் பயிர்களான ஆமணக்கு, சூரியகாந்தி பயிர்களுக்கு 98% புறத்தூய்மை, 70% முளைப்புத் திறனும், 8-9% ஈரப்பதமும் இருக்க வேண்டும். கடலைப் பயிருக்கு 96% புறத்தூய்மையும், 70% முளைப்புத் திறனும் 9% ஈரப்பதமும் இருக்க வேண்டும். பருத்திப் பயிருக்கு 98% புறத்தூய்மை, 65% முளைப்புத் திறனும், 10% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இவ்வாறு விதைகளின் தரம் இருந்தால் மட்டுமே விதை சான்றளிப்புத் துறையினரால் ஆதார விதைகளுக்கும் சான்று விதைகளுக்கும் சான்றட்டை பொருத்த அனுமதி அளிக்கப்படும்.

சுயதேவைக்கு ரக விதைப் பெருக்கம்

விவசாயிகள் சில நேரங்களில் தாங்கள் சாகுபடிசெய்த வயலிலிருந்து விதைகளை எடுத்து வைத்து, அடுத்த பருவத்துக்குப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு தேர்வு செய்யும் விதைகள் வீரியமாகவும் தூய விதைகளாகவும் கிடைக்க, விதைக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் செடியானது நிலத்தின் மையப் பகுதியிலிருந்து எடுக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கும் செடியானது ரக மரபியல் தூய்மையுடன் சுத்தமாகவும், நல்ல வளர்ச்சி அடைந்த மணிகள் உள்ள பயிராகவும் இருக்க வேண்டும். வளர்ச்சியடையாத, அதிகம் நோய் தாக்கப்பட்ட செடிகளிலிருந்து விதைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. தேர்ந்தெடுத்த விதைகளை நன்கு உலர்த்தி விதைகளைப் பிரிக்க வேண்டும். பின்னர், விதைநேர்த்தி செய்து தங்களின் தேவைக்காக உபயோகித்துக்கொள்ளலாம். ஆனாலும், விதைப்பதற்கு முன்னர் விதைகளின் தரத்தைப் பரிசோதனை செய்வது அவசியம்.

இதற்காகத்தான் நம் முன்னோர்கள் முளைப்பாரி என்னும் வழக்கத்தை உருவாக்கி, அது இன்றும் தொடர்கிறது. அதாவது, தாங்கள் அறுவடை செய்த விதைகளை அடுத்த பருவத்தில் விதைப்பதற்கு முன் விதைகளின் முளைப்புத் திறனைச் சோதனை செய்த பிறகே விதைப்பது தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாக இருந்திருக்கிறது.

அவ்வாறு விதைகளை நாமே பரிசோதனை செய்து பயன்படுத்தலாம் அல்லது அருகில் உள்ள விதைப் பரிசோதனைக் கூடத்தில் ரூ.30 கட்டணம் செலுத்தி விதைகளின் தரத்தைப் பரிசோதனை செய்து, தரமான விதைகளாக இருக்கும்பட்சத்தில் அவ்விதைகளைப் பயன்படுத்தலாம். விவசாயிகள் தங்கள் வயலிலிருந்து தொடர்ந்து இவ்வாறு மீண்டும் மீண்டும் விதைகளைச் சேகரித்துப் பயன்படுத்தும்போது, விதைகளின் முளைப்புத் திறனும் வீரியமும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, சாகுபடி செய்யும்போது விவசாயிகள் முடிந்தவரை தரமான விதைகளாகச் சான்று பெற்றவற்றைப் பயன்படுத்தினால் நிச்சயம் அதிக மகசூலையும் அதிக வருமானத்தையும் தரும் பேராயுதமாக அந்த விதைகள் இருக்கும்.

- ப.வேணுதேவன், உதவிப் பேராசிரியர் (விதை அறிவியல்), வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை. தொடர்புக்கு: venudevan.b@tnau.ac.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்