அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணையம் வழி பாடம் நடத்த இலவச செயலி அறிமுகம்

By ம.சுசித்ரா

வகுப்பறையில் இருக்கும் குழந்தைகளுக்கு ஐசிடி எனப்படும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் வகுப்புகள் எடுக்கும் முறையைத் திறம்பட பின்பற்றும் ஆசிரியர்கள் பலர் தமிழக அரசு மற்றும் இதர பள்ளிக்கூடங்களில் இருக்கிறார்கள். அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டு பாடம் நடத்தும் முறையை இவர்கள் பின்பற்றுகிறார்கள். ஆனால், இதே போல இணைய வழிக் கற்றல் முறை இங்கு பரவலாகவில்லை.

ஆசிரியர் ஒரு இடத்தில் இருக்க மாணவர்கள் வேறெங்கோ இருந்தாலும் கணினி அல்லது ஸ்மார்ட்போன் மூலமாக இணையத்தில் தொடர்பு கொண்டு கற்பித்தல் நடைபெறுவது என்பது பிரபலமாகவில்லை. இந்த இணைய வழிக் கற்றல் முறை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மேலைநாடுகளில் மிகப் பிரபலம். தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அதற்கான அவசியம் ஏற்பட்டதால் என்னமோ இணைய வழிக் கற்றல் முறை நம்மிடையே பரவலாகவில்லை. ஆனால், அதற்கான கட்டாயத்தை தற்போது கரோனா காலம் ஏற்படுத்திவிட்டது. இதனால் வேறு வழியின்றி பாதுகாப்பற்ற இணையவழிச் செயலிகளை அவசர அவசரமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இதற்கு மாற்றாகப் பாதுகாப்பான பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் எந்த விதத்திலும் கசியாத வகையில் புதிய கற்றல் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது சென்னையைச் சேர்ந்த ஜோஹோ மென்பொருள் நிறுவனம். 'தாய் மண்ணின் தயாரிப்பு' என்ற அறிவிப்புடன் உள்நாட்டிலேயே மென்பொருள் சாதனங்களைத் தரமாக தயாரிக்க முடியும் என்பதை நிரூபித்துவரும் நிறுவனம் இது. அதிலும் அரசுப் பள்ளிகளுக்கு முற்றிலும் இலவசமாக 'ஜோஹோ கிளாசஸ்' செயலியைக் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்த ஜோஹோ கார்ப் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணியுடன் உரையாடினோம்.

பாதுகாப்பாகப் பாடம் நடத்தலாம்!
"அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் உடனுக்குடன் தகவமைக்கப்படாமலும் பரவலாக்கப்படாமலும் இருப்பவை அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் கல்வித் துறை என்றே நினைக்கிறேன். இனியும் அப்படி இருக்கலாகாது என்பதை கரோனா கொள்ளை நோய் கற்றுக் கொடுத்து இருக்கிறது. வீடியோ கான்ஃபரன்சிங் தொழில்நுட்பம் கடந்த 30 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இப்போதுதான் நாம் அதை பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். அதிலும் பள்ளிகளை எப்போது மீண்டும் தொடங்குவது, மாணவர்களை வகுப்பறைக்கு எப்படி அழைத்து வருவது என்பது பிடிபடாமல் பதற்றத்துடன் இருக்கும் காலகட்டத்தில் ஏதோ ஒரு தொழில்நுட்ப வசதியைத் தவறுதலாகப் பயன்படுத்திச் சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதற்குத் தீர்வு காண ஜோஹோ நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே 50 மென்பொருள் சாதனங்களை நாங்கள் தயாரித்து இருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் 'ஜோஹோ கிளாசஸ்' (Zoho Classes).

பாதுகாப்பு வசதிகளுக்குத்தாம் எப்போதுமே எங்களுடைய தயாரிப்புகளில் முதலிடம் தரப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்குப் பயன்படும் வகையில் வலுவான பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய செயலிகளை நாங்கள் ஏற்கெனவே தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்தினோம். ஆகவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை ஆன்லைனில் மாணவர்களுடன் இணைப்பதற்கான 'ஜோஹோ கிளாசஸ்' செயலியை ஓராண்டுக்கு முன்பே வடிவமைத்துவிட்டோம். தற்போதைய சூழலுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இந்த செயலியைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடங்களைப் பதிவேற்றலாம், வகுப்புகளை நேரடியாக ஒளிபரப்பலாம், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின் கீழ் வீட்டுப்பாடங்களைப் பகிரலாம். மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப வீடியோக்களைக் காணலாம். சந்தேகங்களைத் தெளிவுபடுத்த ஆசிரியர்களுடன் நேரடியாக இணையலாம்.

‘ஜோஹோ கிளாசஸ்’ல் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரே செயலியில் லாக்இன் செய்கின்றனர். இதனால், அனுப்பப்படும் அல்லது பெறப்படும் எந்தவொரு விஷயத்தையும் பள்ளி முதல்வர் அல்லது நிர்வாகியால் கண்காணிக்க முடியும். பள்ளியில் இருந்து நேரடியாக அழைப்பு அனுப்பப்பட்ட பின்னரே மாணவர்கள் ஒரு குழுவில் சேர முடியும். கடந்த சில ஆண்டுகளாக அலைபேசியானது நடுத்தர, கீழ் நடுத்தர மக்கள் இடையிலும் புழங்கத் தொடங்கி இருக்கிறது. ஆகையால் இணையப் பயன்பாடும் சகஜமாகி வருகிறது. ஆனால், அதிவேக இணையச் சேவை என்பது இன்னும் பரவலாகவில்லை. இதனை மனத்தில் நிறுத்தியே ஜோஹோ கிளாசஸ் செயலி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வேகம் மிகவும் குறைவான இணையச் சேவை இருக்கும் பட்சத்திலும் இது வேலை செய்யும். அதேபோல பதிவு செய்யும் வசதியையும் இதில் இணைத்துள்ளோம். இணைய வழி நடத்தப்படும் பாடங்களைச் சேமித்து வைத்து பின்னர் இணையத் தொடர்பு இல்லாமலும் காணொலியாகக் காணலாம். இதன் மூலம் மெல்லக் கற்கும் மாணவர்கள், கவனச்சிதறல் ஏற்படும் மாணவர்கள் பலமுறை பாடத்தை ஓட்டிப் பார்த்து படித்துவிடலாம்.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஜோஹோ கிளாசஸ்-ஐ முற்றிலும் இலவசமாக வழங்கவிருக்கிறோம். மற்ற பள்ளிகளுக்கு 100 மாணவர்கள் வரை இலவசமாகும். அதற்கு மேல், ஒவ்வொரு கூடுதல் மாணவருக்கும், ஒரு ஆண்டிற்கு, பள்ளிகள் தலா ரூ.250 கூடுதலாகச் செலுத்த
வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு www.zoho.com இணையதளத்தைப் பார்க்கவும்”

இவ்வாறு ஜோஹோ கார்ப் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்