மேற்கத்திய மருந்துகள் - மறுக்க முடியாத சில உண்மைகள்

By பி.ஏ.கிருஷ்ணன்

சுஷில் குமார் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்.) என்னுடன் வேலை பார்த்தவர். நீரிழிவு நோயால் துன்பப்பட்டுக்கொண்டிருந்தவர், பாபா ராம்தேவ் சொன்னார் என்று சுரைக்காய்ச் சாற்றைத் தினமும் குடித்துக்கொண்டிருந்தார். ராம்தேவ் சொல்லாதது, சில சமயம் சுரைக்காய் சாறு விஷமாக ஆகக் கூடும் என்பது. ஒரு நாள், சாறு குடித்த சில மணி நேரங்களில் நண்பர் மரணத்தைச் சந்தித்தார். இந்தியா முழுவதும் பேசப்பட்ட மரணம் அது. அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள்கூட இந்திய மருத்துவ முறைகளின் மீது எவ்வளவு மாளாத, அறிவுபூர்வமற்ற பற்று கொண்டுள்ளனர் என்பதற்கு ஓர் உதாரணம் இது.

நான் இவ்வாறு சொல்வதால், பழைய மருத்துவ முறைகளையோ அவை பரிந்துரைக்கும் மருந்துகளையோ முழுவதுமாக நிராகரிக்கிறேன் என்று அர்த்தமல்ல. நமது பாரம்பரிய மருந்துகள், மருத்துவ முறைகள் சிறந்தவை. அதேசமயம், அவற்றால் தீதற்ற நன்மை மட்டுமே விளையும் என்ற முன்முடிவோடு அவற்றை அணுகுவது அறிவுபூர்வமான செயலாகாது. நமது மூதாதையர்கள் தந்தவை என்பதால் அவை கடவுளர் நிலையினை அடைந்துவிட்டன, அவற்றைக் கேள்விகளுக்கு உட்படுத்தக் கூடாது என்று கருதுவது அபாயகரமானது. மேற்கத்திய மருத்துவ முறையின்படி, ஒரு மருந்து மக்களைச் சென்றடைவதற்கு முன்னால் என்னென்ன சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனவோ அதே சோதனைகளுக்கு இந்திய மருத்துவ முறைப்படி பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் உட்படுத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

மேற்கத்திய மருத்துவ முறை என்றால் என்ன?

மேற்கத்திய மருத்துவ முறைகளும் மருந்துகளும் அறிவியல் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டவை. அறிவியல் அணுகுமுறைஎன்றால் என்ன என்பதை எனக்கு இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞரான நர்லீகரைச் சந்தித்தபோது தெளிவாக விளக்கினார். கோட்பாடு, சோதனை, கண்டறிதல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடு இந்த அணுகுமுறை. இது படைப்பின் முழு ரகசியங்களையும் நமக்குக் காட்டும் திசையை நோக்கிச் செல்லும், முடிவே இல்லாத சுழற்படிக்கட்டு போன்றது. பயணத்தின்போது இடர்களும் சறுக்கல்களும் ஏற்படலாம். இந்தப் பாதை முழுவதும், தவறான சோதனைகள், பிழையான கண்டறிதல்கள் போன்றவற்றின் எச்சங்கள் சிதறிக்கிடக்கின்றன என்பதை ஒப்புக்கொள்பவர்களின் முதல் வரிசையில் விஞ்ஞானிகள் இருப்பார்கள்.

உதாரணமாக, ரத்தம் உடலினுள் கடல் நீரைப் போல விரிவதும் சுருங்குவதுமாக இருக்கும் என்று மேற்கில் நினைத்த காலம் ஒன்று இருந்தது.முன்னோடிகளில் ஒருவரான கேலன் அவ்வாறுதான் நினைத்தார். கல்லீரல் ரத்தத்தை உற்பத்தி செய்கிறது, அதைத் திசுக்கள் உண்கின்றன என்று அவர் சொன்னார். ரத்த ஓட்டம் என்றால் என்ன என்பதை முதலில் உணர்ந்தவர் இபின் அன் நஃபீஸ் என்ற பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்திய விஞ்ஞானி. ஆனால், பல சோதனைகள் செய்து ரத்தம் எவ்வாறு உடலில் ஓடுகிறது என்பதை நமக்குக் காட்டியவர் ஹார்வி. கேலன் சொன்னதெல்லாம் சரி என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்தச் சுதந்திரம் அவர்களுக்கு இருந்ததால்தான் மேற்கத்திய அறிவியலும் மருத்துவமும் முன்னேற முடிந்தது.

வரலாற்றைப் புதைக்க முடியாது

மேற்கத்திய மருந்துகளைப் பற்றிக் குறை கூறுபவர்கள், அதனால் உலகுக்கு ஏற்பட்ட நன்மைகளைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். பென்சிலின் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், இன்று உலகில் இருப்பவர்களில் 75% உயிரோடு இருக்க மாட்டார்கள். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியக் குடிமகனின் சராசரி ஆயுள்காலம் சுமார் 22 வயதுதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று சுமார் 66 வயது என்றால் அதற்கு முக்கியமான காரணம், மேற்கத்திய மருந்துகள். அம்மையும் ப்ளேக்கும் போலியோவும் முழுவதுமாக மறைந்துவிட்டன. காலரா, காசநோய் என்றாலே மரணம்தான் என்ற நிலை மாறிப் பல நாட்கள் ஆகிவிட்டன. தலைவலிக்கு உடனே நிவாரணம் ஆஸ்பிரினும் பாரஸடமாலும் தருகின்றன. வலியே தெரியாமல் அறுவைச் சிகிச்சை நடக்கிறது. இன்சுலின், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குப் பேருதவிசெய்கிறது. மனநோயாளிகளுக்கு தோரஸைன் ஒரு வரம் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கர்ப்பத்தடை மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டது பெண் விடுதலைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று.

இந்த வெற்றிகளுக்குக் காரணம், மேற்கத்திய மருந்துகள் கடும் சோதனைகளுக்குப் பிறகே மக்களைச் சென்றடைகின்றன என்பதுதான். ஒரு புது மருந்து, கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து சந்தையை அடைவதற்கு 12 ஆண்டுகள் எடுக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளில் 5,000-ல் ஒன்றே எல்லாச் சோதனைகளையும் கடந்து சந்தையை அடைகிறது. அடைந்த மருந்துகளும் சில சமயங்களில் திரும்பப் பெறப்பட்டு மறுசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பெரு நிறுவனங்கள் செய்யும் தகிடுதத்தங்களையும் மீறி உயிர் காப்பாற்றும் மருந்துகள் பல மக்களைச் சென்றடைந்திருக்கின்றன.

இத்தகைய சோதனைகளைப் பாரம்பரிய மருந்துகள் கடந்துவந்திருக்கின்றனவா என்ற கேள்விக்கு, இல்லை என்பதுதான் பதில். அஸ்வகந்தா மூலிகையின் பயன்களைப் பற்றி பல ஆய்வுகள் நடந்துவிட்டன. ஆனால், இதுவரை உருப்படியான ஒரு மருந்துகூட வரவில்லை. மேற்கத்திய வழிமுறைகளை ஏன் கடைப்பிடிக்க வேண்டும், எங்களுக்கு என்று தனி வழிமுறை இருக்கிறதே என்று ஓர் ஆயுர்வேத மருத்துவர் கேட்கலாம். தவறேயில்லை. ஆனால், எந்த வழிமுறை இருந்தாலும் அது வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஏன் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்குச் சரியான பதில் மருத்துவர்தான் சொல்ல வேண்டும். சதி, சூழ்ச்சி என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள முயற்சி செய்யக் கூடாது.

இது நாட்டுப் பற்று சார்ந்ததல்ல. மனித உயிர் சார்ந்தது. உடல்நலம் சார்ந்தது.

பி.ஏ. கிருஷ்ணன், எழுத்தாளர் - தொடர்புக்கு: tigerclaw@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

32 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்