மாதவிடாய்: ஒரு பெருமிதப் பேரணி!
நாங்கள் பேசுவோம்; வாய் திறப்போம்; உலகம் அப்போதுதான் மாறும் – டெல்லியில் பிப்ரவரி 5-ல் நடந்த ‘மாதவிடாய் பெருமிதப் பேரணி’யில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பள்ளி மாணவிகள் எழுப்பிய முழக்கம் இது. 50 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். மாதவிடாய் தொடர்பாக வெளிப்படையாகப் பேசுவது மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருவதாகப் பள்ளி மாணவிகள் தெரிவித்தனர். மாதவிடாயைக் கொண்டாடுவதுடன் பெண் குழந்தைப் பிறப்பையும் கொண்டாடிய இந்நிகழ்வில், நாடகங்கள், நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. டெல்லியில் பெருமிதப் பேரணி நடந்துகொண்டிருந்த அதே நாளில், நேபாளத்திலிருந்து மனம்பதற வைக்கும் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. மாதவிடாய் காலம் என்பதற்காக ஜன்னல் இல்லாத தனிக் குடிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு பெண் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த ஆண்டில், நேபாளத்தில் தனிக் குடிசைகளில் தங்கவைக்கப்பட்ட பெண்களைப் பற்றிய இரண்டாவது துயரச் செய்தி இது.
இரண்டாம் ஆண்டில் சுயாதீனத் திரைப்பட விழா
திரையரங்கில் வெளியிடுவதற்கு வாய்ப்பில்லாத குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் மாற்று சினிமா முயற்சிகள் ‘சுயாதீன சினிமா’ எனப்படுகின்றன. அவற்றைத் திரையிடுவதற்காகவே கடந்த ஆண்டு சென்னையில் ஒரு திரைப்பட விழாவை நடத்தியது ‘தமிழ் ஸ்டுடியோ’. அவ்விழாவுக்குத் திரைப்பட ஆர்வலர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பையடுத்து, இந்த ஆண்டும் விழாவைத் தொடர்கிறது. பிப்ரவரி 8, 9, 10 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள சென்னை சுயாதீன திரைப்பட விழாவில், அரிய திரைப்படங்களின் திரையிடல்கள், பயிற்சிப் பட்டறைகள், கலந்துரையாடல்கள், உலகின் முன்னணி திரைக் கலைஞர்களுடன் விவாதங்கள் ஆகியவை நடைபெற உள்ளன. தொடர்புக்கு: 9840644916
ரோஹிங்கியாக்களுக்கு நியாயம் வேண்டும்... ஜூலியின் வேண்டுகோள்
வங்கதேசத்தின் காக்ஸ் பஸார் மாவட்டத்தில் சுமார் 7 லட்சத்து 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். முகாம்களுக்குச் சென்று, வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்த ஐநா அகதிகள் முகமையின் தூதுவர் ஏஞ்ஜலினா ஜூலி, உணர்வுபூர்வமாக ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். ‘மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் ரோஹிங்கியாக்கள் கால்நடைகளைப் போல நடத்தப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று அவர்கள் நாடற்றவர்களாகப் பக்கத்து நாடுகளில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வீடு திரும்பவே விரும்புகிறார்கள். மியான்மரில் நடக்கும் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்’ என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். ரோஹிங்கியா அகதிகளுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்காக ஐநா சார்பில் நிதி திரட்டுவதற்கான மூன்று நாள் பயணம் இது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
8 hours ago