அட்டைப்பட வடிவமைப்புகளுக்காகப் புகழ்பெற்ற சந்தோஷ் நாராயணன் புத்தாக்கச் சிந்தனையுடன் உருவாக்கும் ஓவியங்கள் வரவேற்பைப் பெற்றவை. சாகித்ய அகாடமி விருதைப் பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புலகை கூகுள் வரைபட பாணியில் வடிவமைத்திருக்கிறார் சந்தோஷ். பேஸ்புக்கில் இருவருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.
இளம் படைப்பாளிகளுக்கு ரூ.25,000 பரிசு
கோவையில் 2019 ஜூலை 19 முதல் 28 வரை கொடிசியா – பபாசி இணைந்து நடத்தவிருக்கும் புத்தகக்காட்சியை ஒட்டி, இளம் படைப்பாளிகளின் நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. கவிதை, புனைவு, அபுனைவு ஆகிய மூன்று பிரிவுகளில், படைப்பாளிகள் தங்கள் நூல்களை அனுப்பலாம். 2017, 2018 ஆண்டுகளில் வெளியான நூல்கள் விருதுக்குத் தகுதியானவை. 40 வயதுக்குட்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஒவ்வொரு பகுப்பிலும் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு ரூ.25,000 ரொக்கப் பரிசும், பட்டயமும் காத்திருக்கின்றன. படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 31.01.2019. விவரங்களுக்கு: 0422 222 2396
கல்லூரி மாணவியின் முதல் கவிதை நூல்
சிவகாசி தனியார் பொறியியல் கல்லூரி மாணவியான கார்த்திகாஸ்ரீ. எழுதிய ‘தமிழ் எங்கள் பெண்மைக்கு நேர்’ எனும் கவிதை நூல், நாளை (ஞாயிறு) திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 அளவில் பொதிகைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பாரதி விழாவில் வெளியிடப்படுகிறது. திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பில் செங்கல்சூளையில் வேலைபார்க்கும் முருகானந்தம் - நாகலெட்சுமி தம்பதிகளின் மூத்த மகளான இவர், பள்ளி காலத்திலிருந்தே கவிதைகள் எழுதிவருபவர். 2016-ல் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசைப் பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு.
கலை இலக்கியப் பெருமன்ற விழா
சிறந்த நாவல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், குறும்படங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 8) புதுச்சேரியில் ஜெயராம் உணவகத்தில் நடக்கிறது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸும் இணைந்து நடத்தும் இந்த விழாவில் நாவல்களுக்கான விருதுகள் அண்டனூர் சுரா, சைலபதி ஆகியோருக்கும், சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகள் ச.வீரமணி – தஞ்சை ரமேஷ், தி.உமாபதி ஆகியோருக்கும், குறும்படங்களுக்கான விருதுகள் அருண் பகத், புஷ்பநாதன் ஆறுமுகம் ஆகியோருக்கும் வழங்கப்படுகின்றன.
காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்குப் பரிசுகள்
காந்தியின் 150-வது பிறந்தாளை ஒட்டி, டி.டி.திருமலை நினைவு பரிசுகள் வழங்கும் விழா, சென்னை தியாகராய நகர் தக்கர் பாபா பள்ளியில் வெள்ளிக்கிழமை அன்று நடந்தது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு விருதுகள் வழங்கினார். பி.எஸ்.ராகவன் ஐஏஎஸ், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் சி.என்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 31-ல் 11,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொகுப்பு: மானா பாஸ்கரன், மு.முருகேஷ்
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 secs ago
விளையாட்டு
44 mins ago
தமிழகம்
13 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
4 hours ago