இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கும் ‘தேவதாஸ்’ கதை தெரிந்திருக்கும். வங்க எழுத்தாளர் சரத் சந்திர சட்டோபாத்யாயா எழுதிய நாவல் அது. திரைப்படமாக இந்தியா முழுவதும் பிரபலமானது. அவர் எழுதிய மற்றொரு முக்கியமான நாவல் ‘ஸ்ரீகாந்த’. இந்த நாவல், ‘தேவதாஸ்’போலவே சரத்சந்திரரின் சுயசரிதையும் கலந்து எழுதப்பட்டது. சிறு கிராமம் ஒன்றில் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருக்கும் ஸ்ரீகாந்தனும் அவனை நகரத்துக்கு அழைத்துச்சென்று குணப்படுத்தும் ராஜலெட்சுமியும் தேவதாஸ், பார்வதிபோலவே பிரபலமான கதாபாத்திரங்கள். இந்நாவல், வங்க மொழியில் சில தடவைகள் திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது.
இளம் வயதில் வயிற்றுப் பிழைப்புக்காக பர்மா சென்ற சரத் சந்திரர் அங்கே 13 ஆண்டுகள் வாழ்ந்தார். அவருடைய கப்பல் பிரயாண அனுபவங்களும் பர்மா அனுபவங்களும் ‘ஸ்ரீகாந்த’ நாவலில் இடம்பெற்றுள்ளன. அவர் பிரயாணம் செய்த கப்பல் ரங்கூன் போய்ச் சேர நான்கு நாட்கள் எடுத்துக்கொண்டது. அப்போது ரங்கூனில் பிளேக் நோய் பரவியிருந்தது. அந்த நோய் இந்தியாவிலிருந்து வரும் ஏழைப் பிரயாணிகளால் பரவுவதாக ரங்கூன் நிர்வாகம் கருதியது. இந்தப் பிரயாணிகள் குறைந்த செலவில் கப்பலின் கீழ்த்தட்டில் பயணிப்பவர்கள். ஆகையால், நிர்வாகம் கீழ்த்தட்டுப் பயணிகளை மட்டும் ஊருக்கு வெளியே ஒரு காட்டுப் பகுதியில் இறக்கிவிட்டு அங்கு ஒரு வாரம் வைத்திருந்து அதன் பிறகே அவர்களை ஊருக்குள் வர அனுமதித்தது. கீழ்த்தட்டில் பயணித்த சரத் சந்திரரும் இந்த ஏற்பாட்டுக்குள்ளாகி அவதிப்பட்டார்.
சரத் சந்திரரின் ரங்கூன் நாட்கள் பிளேக் நோய்க்கு எதிரான போராட்டமாகவே அமைந்திருந்தது. அவரது மனைவியையும் ஒன்றரை வயது மகனையும் கொள்ளைநோய்க்குப் பறிகொடுத்தார். ஏழைகளுக்கு உதவும் நோக்கத்துடன் ஹோமியோபதியும் கற்றுக்கொண்டார் சரத் சந்திரர். ஆனால், அவரே ஒரு நோயாளியாக இருந்தார். அடிக்கடி கடுமையாக உடல்நிலை பாதிப்புக்கு ஆளான அவர், மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியா திரும்ப வேண்டியதாயிற்று.
- செ.இளவேனில்
முக்கிய செய்திகள்
வணிகம்
3 mins ago
தமிழகம்
24 mins ago
இந்தியா
10 mins ago
இந்தியா
53 mins ago
உலகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
5 hours ago