புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் மூன்றாவது ஆண்டாக புத்தகத் திருவிழா பிப்ரவரி-15 அன்று தொடங்கி 24-ம் தேதி வரை பத்து நாட்கள் புதுகை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது. தினந்தோறும் காலையில் புத்தகத் திருவிழாவுக்கு வரும் குழந்தைகளுக்கென கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் செய்முறைகள், விளையாட்டுகள், மந்திரமா தந்திரமா என குழந்தைகளை மையமிட்டுப் பல நிகழ்வுகளைத் திட்டமிட்டிருக்கிறார்கள். ‘சென்ற ஆண்டு 30 ஆயிரம் குழந்தைகள் புத்தகத் திருவிழாவுக்கு வந்திருந்தார்கள். இந்த ஆண்டு 1 லட்சம் குழந்தைகள் இதில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளோம்’ என்கின்றனர் வரவேற்புக் குழுவினர். ஒவ்வொரு நாளும் அதிக புத்தகங்களை வாங்கும் குழந்தைக்கு ‘புத்தக வாசகர் விருது’ வழங்கப்படவிருக்கிறது.
தத்துவ அறிஞரின் நூற்றாண்டுக் கருத்தரங்கம்
இந்திய தத்துவ வரலாற்றில் பொருள் முதல்வாதத்துக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு என்று எடுத்துக்காட்டியவர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா. அவரது நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில், பாரதி புத்தகாலயமும் பச்சையப்பன் கல்லூரியின் மெய்யியல் துறையும் இணைந்து இன்று (பிப்ரவரி - 16) சென்னை பச்சையப்பன் கல்லூரியிலுள்ள நார்டன் அரங்கில் முழுநாள் கருத்தரங்கத்தை நடத்துகின்றன. இக்கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் என்.சேட்டு, அருணன், வீ.சீனிவாசன், அ.கருணானந்தம் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டு கருத்துரையாற்றுகின்றனர்.
விழுப்புரத்தின் பதிப்புமுகம்
விழுப்புரத்திலிருந்து கடந்த 40 ஆண்டுகளாக முத்து பதிப்பகத்தை நடத்திவந்த மு.லெட்சுமணன் பிப்ரவரி-8 அன்று காலமானார். பாரதிதாசனைப் பற்றி அவரது மகன் மன்னர்மன்னன் எழுதிய ‘கருப்புக்குயிலின் நெருப்புக்குரல்’ வாழ்க்கை வரலாற்று நூல், முத்து பதிப்பகத்தின் முக்கிய வெளியீடுகளில் ஒன்று. இவர் வெளியிட்டுள்ள நூல்களில் தமிழ்நாடு அரசின் பரிசினை 31 நூல்களும், புதுவை அரசின் பரிசினை 17 நூல்களும் பெற்றுள்ளன. புதுவை மற்றும் தமிழகத்தைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட கவிஞர்களின் முதல் நூலைப் பதிப்பித்தவர் மு.லெட்சுமணன்.
நெல்லையில் ‘சஞ்சாரம்’
சாகித்ய அகாடமி விருதுபெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இலக்கிய அமைப்புகளும் வாசகர் வட்டங்களும் தொடர்ந்து பாராட்டு விழாக்களை நடத்திவருகின்றன. சமீபத்தில் திருநெல்வேலியில் தமுகஎச நடத்திய பாராட்டு விழா எஸ்.ரா.வுக்கு மட்டுமின்றி அவர் எழுதிய ‘சஞ்சாரம்’ நாவலுக்கும் பெருமைசேர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது. அந்த விழாவில் கலந்துகொண்டு எஸ்.ராவுக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டியவர், நாதஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாசலத்தின் துணைவியார் ராமலட்சுமி அம்மாள். 96 வயதில் சக்கர நாற்காலியில் வந்திருந்தார். விழாவில் கலந்துகொண்ட நாதஸ்வரக் கலைஞர்கள் ராமலட்சுமி அம்மாளின் காலில் விழுந்து வாழ்த்துகள் பெற்றபோது அரங்கமே நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது. நாதஸ்வரக் கலைஞர்களின் பெருமைகளையும், அவலங்களையும் சொல்லும் ‘சஞ்சாரம்’ நாவலுக்கு இதைவிடவும் எப்படி பெருமைசேர்க்க முடியும்?
தொகுப்பு: மானா பாஸ்கரன், மு.முருகேஷ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
55 mins ago
தமிழகம்
40 mins ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
38 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
2 hours ago