சமரம்: தமிழ்நாட்டில் ஏன் நடக்கவில்லை?

By பால்நிலவன்

த அடிப்படைவாதத்திலிருந்து கிளைத்தெழுந்து வந்தவர்களின் கையில் நாட்டின் மென்னி திருகப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த மாதிரி நேரங்களில்தான் ‘சமரம்’ போன்ற வங்க நாவல்களின் அவசியத்தை நாம் உணர முடிகிறது. இத்தனைக்கும் நாவலாசிரியர் தபோ விஜயகோஷ், கொல்கத்தாவின் 70-களைத்தான் பேசுகிறார். ஆனால், அது இன்றைக்கும் பொருந்தி நிற்கிறது.

மக்களிடையே அரசின் பொருளாதாரக் கொள்கைகள் சார்ந்து, பேசுவதற்குரிய அரிய உத்திகளை உள்ளடக்கியுள்ளது இந்நாவல். சிந்திக்கத்தக்க இளைய தலைமுறைகளிடையே நாட்டின் சிறந்த எதிர்காலம் குறித்த மிகப் பெரிய சாத்தியங்களுக்கான நம்பிக்கை ஊற்றுநீராகவும் ‘சமரம்’ அமைந்துள்ளது. நாவலின் பக்கங்கள் காலஓட்டம் எனும் காற்றில் படபடக்க.. அதில் சொல்லப்படும் சம்பவங்கள் வாசிப்பின் ஆழத்தில் வெண்திரைக் காட்சிகளாக நம் முன்னே விரிகின்றன.

நாவலின் முதல் பக்கத்திலேயே ஒரு கொலை விழுகிறது. கொல்லப்பட்டது ஓர் இளம் கம்யூனிஸ்ட் தலைவன். மக்களின் அன்றாட வாழ்க்கை நெருக்குதல்களுக்குக் காரணமான அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து முழங்கு பவன். தன்னைப் போலப் பலரும் உருவாகக் காரணகர்த்தாவாக இயங்கிக்கொண்டிருந்தவன். அவன் பெயர் தமால். அவனைக் கொன்றவர் கிளாஸ் ஃபேக்டரி முதலாளி மகன். கொலைசெய்துவிட்டு, நியாயம் பேசுபவர்களைச் சித்தரிக்கும் முதல் அத்தியாயமே 73 பக்கங்கள் வரை நீள்கிறது.

அடுத்த அத்தியாயம் அளகேசன் (அட! தமிழ்ப் பெயர்) எனும் கலைக் கல்லூரி மாணவனைப் பற்றியது. அதன் பின்னர், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இருட்டடிப்புச் செய்யப்பட்ட கடற்படை புரட்சி பற்றிய ஒரு அத்தியாயம். பிறகு, அளகேசனின் தங்கை மாணவி நந்திதா, தோழர் ஜகத் வல்லப் என இன்னும் பலரின் பார்வையிலிருந்தும், யாரை எதிர்த்து, யாரைத் திரட்டிச் சமரம் செய்ய வேண்டும் என எக்கச்சக்கமான சம்பவங்கள் நாவலில் அலையென பெருகிச் செல்கின்றன.

கல்லூரி மாணவி தோழர் நந்திதாவின் பார்வையில் தொடரும் அத்தியாயம்.. தன் அண்ணன் அளகேசனைத் தேடி தமால் வந்ததும், தன்னுடைய சில கல்லூரித் தோழிகளின் வீட்டில் அவர் நடத்தும் ரகசியக் கூட்டங்களுக்குத் தான் சென்றதும், மடைமாற்றிய வாசிப்புகளும்தான் தமாலைத் தான் நேசிப்பது யாருக்கும் (தனக்கேக்கூட) தெரியாது என நம்பிக்கொண்டிருப்பதுமாக விரிகிறது. அதை தமால் அறியும் நேரமும் நந்திதாவே உணரும் இடமும் வரத்தான் செய்கின்றன. கொல்லப்பட்ட தமால், பெருமுதலாளிகளுக்கு வேண்டுமானால் அவர்களின் தூக்கம் கெடுத்தவனாக இருக்கலாம். ஆனால், தமாலின் சொந்த வாழ்க்கையைப் பொறுத்தவரை அவனுக்கு ஒரு வீடு வாசல்கூடக் கிடையாது. கட்சி அலுவலகத்தில் ஒரு ஓரமாகத் துண்டு விரித்துத் தூங்குபவன்.

உத்திகளிலும் எழுத்து நடையிலும் சிறந்து விளங்கும் கேரளப் படைப்புகளைப் போலன்றி, அழகியல் நுட்பங்கள் ஏதுமின்றி ஆனால் உணர்வுரீதியாக, களப்பணி சார்ந்த பிரச்சினைகளின் விவாதப் பொருட்களை உள்ளீடாக வைத்து, கலவரமிக்க சம்பவங்களின் தீவிரத்தை மிகமிக மென்மையாக இந்நாவல் முன்வைக்கிறது. அதுவே, இந்நாவலின் பலமாகவும் இருக்கிறது. மாற்றங்களுக்கான நம்பிக்கையையும், அதற்கான புரிதலையும் வழங்கக்கூடிய கதையாடலாக மொழிபெயர்ப்பாளர் ரவிச்சந்திரன் அரவிந்தனின் நல்ல மொழியாக்கத்தில் வந்துள்ள ‘சமரம்’ திகழ்கிறது.

இந்நாவலின் ஊடே வங்கப் பிரிவினை, இந்தியப் பிரிவினை, பாக்.பிரிவினை, கம்யூனிசப் பிரிவினை, இந்திய - சீனா யுத்தம் என மிக முக்கியமான சரித்திர நிகழ்வுகள் வெவ்வேறு கோணங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படிக்கும்போது மனதில் கேள்வியொன்றும் எழுகின்றது.

இந்திய விடுதலைப் போரின் தமிழகத்தின் மறைக்கப்பட்ட பக்கங்கள், வேலூர் புரட்சி, நெல்லை சதி வழக்கு, ஸ்டேன்ஸ் மில் தொழிலாளிகள் படுகொலை, தஞ்சை விவசாயப் போராட்டங்கள் என்று கடந்த நூறு ஆண்டுகளில் நடந்த உணர்ச்சிமிக்க சம்பவங்கள் இலக்கியப் படைப்புகளாக பொதுவெளி வாசகனைச் சென்றடையாததற்கு என்ன காரணம்?

- பால்நிலவன்,

தொடர்புக்கு: sridharan.m@thehindutamil.co.in

சமரம், நாவல்

வங்கமூலம்:

தபோ விஜயகோஷ்,

தமிழில்:

ரவிச்சந்திரன் அரவிந்தன்

சப்னா புக் ஹவுஸ்,

கோவை-2

தொடர்புக்கு:

0422 462 99 99

விலை ரூ.200

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

ஆன்மிகம்

11 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

மேலும்