இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவரும் தருணத்தில், 36 ஆண்டுகளுக்கு முன்பு உலகக் கோப்பையை வென்ற கேப்டன் கபில்தேவ் அதன் நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.
கிரிக்கெட் வர்ணனையாளர் நிகில் நாஷ் எழுதிய ‘மிராக்கிள் மென்’ என்ற புத்தக வெளியீட்டில் பங்கேற்ற கபில்தேவ் உள்பட முன்னாள் சாம்பியன்கள் பலரும் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அப்போது பலம் வாய்ந்த அணியாகத் திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து இந்தியா மோதியது. அந்த அணி தோற்பதற்கு முக்கியக் காரணமாக விவியன் ரிச்சர்ட்ஸ் தூக்கி அடித்த பந்தை ரிவஸ்ர்ஸ் முறையில் ஓடி கபில்தேவ் பிடித்த கேட்ச் அமைந்தது. அந்த கேட்சை கபில் எப்படி எடுத்தார்?
“பந்தை பின்னோக்கி ஓடிப் பிடிக்கும்போது, பந்தைப் பக்கவாட்டில் பிடிக்க வேண்டுமென்று பயிற்சியாளர்கள் சொல்லியிருந்தனர். அந்த அடிப்படையில்தான் பின்னோக்கி ஓடிச் சென்று பந்தைப் பிடித்தேன். இப்போது இருப்பதுபோல அந்நாட்களில் ஃபீல்டிங்க்குக்கான பயிற்சிகள் தீவிரமாக இருந்த தில்லை” என்று குறிப்பிட்டார் கபில் தேவ். உலகக் கோப்பையில் சிறந்த கேட்ச்சாக கபில்தேவ் பிடித்த அந்த கேட்ச் இன்றும் ஆராதிக்கப்படுகிறது.
ரிச்சர்ட்ஸ் கேட்ச் கொடுத்து அவுட்டான ஓவரை மதன்லால்தான் வீசினார். அந்த ஓவரை வீசுவதற்கு முன்பு கேப்டன் கபிலிடம் பந்தைப் பறித்து தான் ஓவர் வீசுகிறேன் என மதன்லால் கூறியதாக ஒரு கதை எப்போதும் கூறப்படுவதுண்டு.
அது பற்றி மதன்லாலிடம் கேட்டபோது, “ஒரு கேப்டனிடமிருந்து அப்படியெல்லாம் பந்தைப் பறித்துவிட முடியாது. அப்படிப் பந்தை நான் பறிக்கவில்லை. என்னைவிட கபில் மூத்தவர் என்பதையும் தாண்டி கபில்தேவ் சிறந்த ஆல்ரவுண்டரும்கூட” எனச் சிரித்துகொண்டே கூறினார் மதன்லால்.
அரையிறுதிப் போட்டியில் ஒரு லோ-பாலால் அவுட் ஆன இயன் போத்தம் குறித்து பவுலிங் வீசிய கீர்த்தி ஆசாத்திடம் கேட்கப்பட்டது. “அந்தப் பந்தை நான் திட்டமிட்டெல்லாம் வீசவில்லை. அந்தப் பந்து போத்தத்தை வீழ்த்தியது. அவ்வளவுதான்.” என்றார்.
1983 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக கபில்தேவ் விளாசி 175 ரன் குவித்த ஆட்டம் பிபிசி வேலை நிறுத்தம் காரணமாக பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுவது உண்டு. ஆனால், அப்படி எந்த வேலை நிறுத்தமும் நடைபெறவில்லை என்கிறார் நூல் ஆசிரியர் நிகில் நாஷ். “இந்தியா - ஜிம்பாப்வே போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாததற்கு பிபிசியில் நடந்ததாகச் சொல்லப்பட்ட வேலை நிறுத்தம் காரணமல்ல.
போட்டி நடந்த ஜூன் 18 அன்று பிபிசி தொலைக்காட்சி இங்கிலாந்து- பாகிஸ்தான் போட்டியையும் ஆஸ்திரேலியா- மேற்கிந்தியத் தீவு அணிகள் மோதிய விளையாட்டையும் பதிவுசெய்ய முடிவு செய்ததே காரணம்” என்றார்.
அப்போது இடைமறித்த கபில்தேவ், “அன்று எந்தப் போட்டியுமே நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. பதிவுசெய்யப் பட்ட இரண்டு போட்டிகள் ஒளிப்பதிவுசெய்யப்பட்டு பின்னரே டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டன" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
சினிமா
15 mins ago
இந்தியா
55 mins ago
வர்த்தக உலகம்
1 hour ago
ஆன்மிகம்
21 mins ago
இந்தியா
31 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago