புதுடெல்லி: மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை இலங்கை சென்றடைந்தார். அங்கு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் அமைச்சர், பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்கிறார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாட்கள் பயணமாக மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு சென்றுள்ளார். முன்னதாக, மாலத்தீவு சென்றிருந்த அவர் நேற்று மாலையில் இலங்கை சென்றடைந்தார். இன்று தொடர்ந்து அவர் இலங்கைத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அரசுக்கு எதிராக உள்நாட்டு குழப்பம் நிலவி வரும் நிலையில், உணவு, மருந்துகள் மற்றம் பிற அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இலங்கைக்கு கடனாக வழங்கியது.
வெளியுறவுத் துறை அமைச்சரின் இலங்கைப் பயண நோக்கம் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதை முதன்மையாகக் கொண்டிருந்தாலும், இலங்கையின் முக்கியத் தலைவர்களுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிம்ஸ்டெக் (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) அமைப்பில், இந்தியா இலங்கை தவிர வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. கடுமையான பொருளாதார நெடுக்கடியைச் சந்தித்துவரும் இலங்கை தனது தலைமையில் இந்த உச்சிமாநாட்டை நடத்துகிறது. இதில், மார்ச் 30-ம் தேதி நடக்கும் பிம்ஸ்டெக் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்றுப் பேசுகிறார். இது பிம்ஸ்டெக் உறுப்புநாடுகளுக்கிடையே பொருளாதார உறுதியளிப்பை விரிவுபடுத்தவதில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி மாதத்தின் மத்தியில் இருந்து பணப்பரிமாற்றம், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் இறக்குமதிக்கு கடன் வழங்குதல் போன்ற வடிவங்களில் இலங்கைக்கு இந்தியா பொருளாதார நிவாரணங்களை வழங்கி உள்ளது.
இந்தியா செய்துள்ள உதவிகளை அநாட்டின் எதிர்கட்சி தலைவர்கள், பொருளாதார ஆய்வாளர்கள் பாராட்டினாலும், அத்தகைய உதவிகளுக்கு இந்தியாவின் முன்நிபந்தனைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசு தனது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனாவின் உதவியையும் நாடியுள்ளது.
முன்னதாக மாலத்தீவுக்கு இரண்டு நாள்கள் பயணம் மேற்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் யை சந்தித்தார்.
இந்தப் பயணத்தின்போது, மாலத்தீவின் சமூக - பொருளாதார மேம்பாடு மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டிற்காக இந்தியாவின் சார்பில் அங்கு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் எடுத்துரைத்தார். மேலும், அங்கு மாலத்தீவு போலீஸ் அகாடமி மற்றும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தையும் அவர் திறந்து வைத்தார். இவை இரண்டும் இந்தியாவால் கட்டப்பட்டது.
முன்னாள் அதிபரால் அங்கு இந்தியாவிறகு எதிரான பிரசாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தனது கடல்சார் அண்டை நாடுகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டிருப்பது, இங்கு சீனாவின் செல்வாக்கு பெருகி வரும் வேளையில் சாகர் கோட்பாட்டின் கீழ் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக் களத்தை வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 mins ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago