‘கிராமப்புற வளர்ச்சி‘ என்ற பாபுஜியின் கனவை நனவாக்க வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து விவாதிப்பதைவிட வேறு எதுவும் இந்திய ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்ற முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் இன்று (மார்ச் 11) பஞ்சாயத்து பிரதிநிகளுக்கான மகாசம்மேளனம் நடைபெற்றது அதில் நாடுமுழுவதிலிருந்தும் வந்திருந்த பஞ்சாயத்து பிரதிநிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "குஜராத் மாநிலம் பாபுஜி (மகாத்மா காந்தி) மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் பூமி. பாபுஜி எப்போதும் கிராமப்புற வளர்ச்சி, கிராமங்களின் தற்சார்பு பற்றியே பேசி வந்தார். தற்போது நாம் சுதந்திரப் பெருவிழாவை கொண்டாடி வரும் வேளையில், ‘கிராமப்புற வளர்ச்சி‘ என்ற பாபுஜியின் கனவை நனவாக்க வேண்டும். கரோனா பெருந்தொற்றுப் பாதிப்பை கட்டுப்பாடாகவும், சிறந்த முறையிலும் எதிர்கொண்டதில் குஜராத்தின் பஞ்சாயத்து கிராமங்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது" என்றார்.

தொடர்ந்து, குஜராத்தில் ஆண் பிரதிநிதிகளைவிட, பெண் பஞ்சாயத்து பிரதிநிதிகள் அதிக அளவில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து விவாதிப்பதைவிட வேறு எதுவும் இந்திய ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றிவிட முடியாது என பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து, சிறிய அளவிலான மிகவும் அடிப்படையான திட்டங்கள் மூலம் கிராமப்புற வளர்ச்சியை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்து பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு பிரதமர் அறிவுரை வழங்கினார்.

அதில், "பள்ளியின் நிறுவன தினம் அல்லது பிறந்த நாளை கொண்டாடுங்கள். அதன் மூலம் பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளை தூய்மைப்படுத்துவதுடன், பள்ளிகளில் நல்லொழுக்க செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள். ஆகஸ்ட் 23 வரை சுதந்திர பெருவிழாவை நாடு கொண்டாட இருக்கிறது. இந்த வேளையில் கிராமப்புறங்களில் 75 காலை நேர பேரணிகளை நடத்துங்கள்.

இந்த காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த கிராம மக்களும், ஒருங்கிணைந்து கிராமத்தின் முழுமையான வளர்ச்சிக் குறித்து சிந்திக்க வேண்டும். இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் விதமாக, 75 மரக்கன்றுகளை நட்டு கிராமங்களில் சிறு சிறு காடுகளை உருவாக்கலாம். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 75 விவசாயிகள், இயற்கை விவசாயத்தை பின்பற்ற வேண்டும். ரசாயன உரங்களால் ஏற்படும் நச்சு பாதிப்பிலிருந்து பூமித்தாயை விடுவிக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்ய கோடைக்காலங்களில் உதவிகரமாக இருக்க ஏதுவாக மழைநீரை சேமிக்க 75 பண்ணைக் குட்டைகளை அமைக்கலாம்.

கோமாரி பாதிப்பிலிருந்து அனைத்து கால்நடைகளை பாதுகாக்க தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யுங்கள். ஊராட்சி மன்றங்கள் மற்றும் தெருவிளக்குகளில் எல்இடி பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கும் நடைமுறையைப் பின்பற்றுங்கள்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை கிராமங்களில் திரட்டி, மக்களை ஒன்று கூட்டி கிராமங்களில் பிறந்த நாளை கொண்டாடுவதுடன் அந்த மக்களின் நலனுக்கான அம்சங்கள் பற்றி விவாதிக்கலாம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களில் ஒருவராவது தினந்தோறும் ஒரு முறையாவது உள்ளூர் பள்ளிக் கூடத்திற்கு சென்று 15 நிமிடங்களாவது அங்கிருந்து அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்தை முழுமையாக கண்காணிப்பதுடன், பள்ளியின் கல்வித்தரம் மற்றும் தூய்மையைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது சேவை மையங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்வது குறித்து பஞ்சாயத்து உறுப்பினர்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளுக்காக மக்கள் பெரிய நகரங்களை நோக்கி செல்வதைத் தடுக்கலாம்.

மாணவர்கள் யாரும் பள்ளிப்படிப்பை கைவிடாமலிருப்பதையும், குழந்தைகளின் தகுதிக்கு ஏற்ப அவர்கள் பள்ளிக்கூடம் அல்லது அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்படுவதை பஞ்சாயத்து உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக எனக்கு நீங்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும்" என்றார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி பிரதமருக்கு உறுதியளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

க்ரைம்

46 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்