புதுடெல்லி: 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் பூஸ்டர் டோஸ் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்த என்ன செய்ய வேண்டும், எது தேவை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது.
இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 2022 ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசியும், 10-ம் தேதி முதல் இணைநோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் இணை நோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த ஆவணங்கள் ஏதும் எடுத்துச் செல்ல வேண்டுமா என்பது குறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் (என்ஹெச்ஏ) தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா விளக்கியுள்ளார். கோவின் தளத்தை வழிநடத்தி உருவாக்கியவரும் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கூறுகையில், ''மத்திய அரசு வழங்கியுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ் செலுத்திக்கொள்ள இணை நோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர் தகுதியானவர்கள். இவர்கள் தடுப்பூசி செலுத்த வரும் முன் இணைநோய்கள் இருப்பது குறித்து அதிகாரபூர்வ மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று தடுப்பூசி மையத்துக்குச் செல்ல வேண்டும்.
மற்ற வகையில் 2 தடுப்பூசி செலுத்தியபோது கடைப்பிடிக்கப்பட்ட அதே வழிமுறைகள்தான் இதிலும் பின்பற்றப்படும். கோவின் தளத்தில் சென்று அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும். இரு டோஸ் ஏற்கெனவே செலுத்திய முதியோர், இணை நோய்கள் இருந்தால், அதற்குரிய சான்றிதழையும் கோவின் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தடுப்பூசி செலுத்தப்போகும்போது உடன் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும்.
45 வயதுமுதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இணை நோய்கள் இருந்தால் அவர்களுக்குச் சான்றிதழ் தேவை என்று ஏற்கெனவே விதிமுறை இருக்கிறது. அதே விதிமுறையைப் பின்பற்ற வேண்டும். நீரிழிவு நோய், சிறுநீரகம் தொடர்பான நோய், டயாலிசிஸ், சுவாசுக் குழாய் நோய், ஸ்டெம்செல் டிரான்ஸ்பிளான்ட், புற்றுநோய் உள்ளிட்ட 20 வகையான இணை நோய்கள் இருப்போர் இருக்கிறார்கள். இவர்கள் வரும்போது, அதிகாரபூர்வ மருத்துவ அதிகாரியிடம் சான்றிதழ் பெற்று வர வேண்டும்” என்று சர்மா தெரிவித்தார்.
இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் 13.75 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இவர்கள் தடுப்பூசி செலுத்த இணை நோய்கள் சான்றிதழ் கண்டிப்பாகத் தேவை என்று அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்த குறைந்தபட்ச கால இடைவெளி 9 முதல் 12 மாதங்கள் வரை வைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கால இடைவெளி குறித்து இதுவரை மத்திய அரசு தரப்பில் அதிகாரபூர்வமான அறிக்கை ஏதும் வெளியாகவில்லை.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
37 mins ago
இந்தியா
35 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
உலகம்
3 hours ago
வணிகம்
3 hours ago
சினிமா
3 hours ago