‘‘நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடுவதால், ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் முடங்கி கிடக்கின்றன’’ என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
‘நேஷனல் ஹெரால்ட்’ பத்திரிகையை காங்கிரஸ் கட்சி வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் தூண்டுதல்தான் காரணம் என்று கூறி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அவை ஒத்திவைக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜாக்ரன் செய்தி நிறுவனம் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வியாழனன்று பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் பெயரை சொல்லாமல் மறைமுகமாக கூறியதாவது:
ஒருவருடைய மனம் போன போக்கில், ஜனநாயகம் செயல்பட முடியாது. நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் மீண்டும் அமளியில் ஈடுபடுகின்றனர். இது கவலை அளிக்கிறது. தேர்தல் மற்றும் அரசுடன் மட்டும் ஜனநாயகத்தை வரையறுத்துக் கொள்ள கூடாது. ஜனநாயகத்துக்கு முன்னர் 2 முக்கிய அபாயங்கள் உள்ளன. ஒன்று மன்தந்த்ரா (ஒருவருடைய மனம் போன போக்கில் செயல்படுவது), இன்னொன்று தன்தந்த்ரா (பண பலம்). இதன்படி ஜனநாயகம் செயல்பட முடியாது.
என் மனதில் தோன்றியபடி நான் செயல்பட முடியும். ஆனால், நாடு அப்படி செயல்பட முடியுமா? ஏழைகள் தங்கள் உரிமைகள் கிடைக்காமல் தவிக்கின்றனர். சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) மட்டுமல்ல, ஏழைகளுக்கான பல்வேறு நடத்திட்ட மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் முடங்கி கிடக்கின்றன.
ஜிஎஸ்டி.க்கு என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். அதை எல்லாருடனும் கலந்தாலோசித்து இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கலாம். ஆனால், ஏழை மக்களின் கதி என்ன? நாடாளுமன்றம் செயல்பட முடியாததால் எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றன. குறிப்பாக வேலை செய்யும் ஏழைகளுக்கு போனஸ் தொகை ரூ.3,500-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தும் சட்ட மசோதா தேங்கி கிடக்கிறது.
எனவேதான் நாடாளுமன்றத்தை செயல்பட விடுங்கள் என்று கேட்கிறேன். விவாதம் நடத்தவும், பேச்சுவார்த்தை நடத்தவும், தகவல் பரிமாறவும் நாடாளுமன்றத்தை விட வேறு சிறந்த இடம் இல்லை. ஆனால், நாடாளுமன்றத்தை இல்லாத நிலையாக்கினால், பின்னர் ஜனநாயகம் என்பது கேள்விக் குறிதான். ஜனநாயகத்தின் கவுரத்தை மனதில் கொண்டு, சாதாரண ஏழை மக்களின் நலனுக்கான சட்டங்களை இயற்ற வேண்டும்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
11 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
சுற்றுலா
4 hours ago
கல்வி
4 hours ago