எதுவுமே என் கையில் இல்லை; மக்களே தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்: பிரதமர் பேச்சு குறித்து காங்கிரஸ் கிண்டல்

By பிடிஐ

எதுவுமே என் கையில் இல்லை. மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடியின் பேச்சில் ஒன்றும் இல்லை. வெறும் பேச்சு மட்டும்தான் என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகிறார்கள். தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. அதை விரைவில் தீர்க்கக் கோரி மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்தச் சூழலில் பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை தீர்க்கப்படும். லாக்டவுனை கடைசிக்கட்ட நடவடிக்கையாக மாநில அரசுகள் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அஜய் மக்கான்

பிரதமர் மோடியின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் கிண்டல் செய்துள்ளனர். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறுகையில், “நாட்டில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த என்ன செய்வது, ஆக்சிஜன் சப்ளையை அதிகரிப்பது, ரெம்டெசிவிர், டோசிலிஜும்பாக் மருந்துகள் சப்ளையை அதிகப்படுத்துவது, தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்குவது குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்த்தோம்.

ஆனால், பிரதமர் மோடியோ அனைத்துப் பொறுப்புகளையும், தேசத்தைக் காப்பாற்றுவதையும் என்ஜிஓ மீதும், இளைஞர்கள் மீதும் சுமத்திவிட்டு அவர் நழுவுகிறார். அதுமட்டுமல்லாமல் எந்தச் சூழல் ஏற்பட்டாலும் லாக்டவுனை மட்டும் கொண்டுவராதீர்கள் என மாநிலங்களுக்கு ஆலோசனை கூறுகிறார். பிரதமர் பேச்சில் ஒன்றுமில்லை, பேச்சு மட்டும்தான்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பிரதமர் மோடி 8.45 மணிக்குப் பேசிய பேச்சின் சாராம்சம் என்னவென்றால் எதுவுமே என் கையில் இல்லை. மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மணிஷ் திவாரி ட்விட்டரில் கூறுகையில், “பிரதமர் மோடியின் அடிப்படை விஷயம், இளைஞர்களை நீங்களே உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதுவரை பாதுகாப்பாக இருந்தால், நாம் மீண்டும் சில விழாக்களில் அல்லது மகா உத்சவத்தில் சந்திப்போம். கடவுள் துணையிருப்பாராக” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பிரதமர் மோடியின் சுருக்கம் என்பது, நீங்களே உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். போட்டோவுக்கு நான், பிரச்சினைகளைச் சந்திப்பது நீங்கள். சிறிய கேள்விக்கு கூறுங்கள். கரோனா 2-வது அலைக்கு ஏன் மத்திய அரசு தயாராகவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “லாக்டவுன் கரோனாவைத் தடுக்க கருவியல்ல என்பதை மோடி ஒப்புக்கொண்டுவிட்டார். கடந்த ஆண்டு தான் கொண்டுவந்த லாக்டவுன் தவறு என்பதை உணர்ந்துவிட்டார்.

லாக்டவுன் பேரழிவுக்கான ஒப்புதல். கரோனா அலையைத் தடுக்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மாநில அரசுகள் மீது பொறுப்பைச் சுமத்திவிட்டார். கும்பமேளாவில் நடந்த சம்பவம் குறித்துப் பேசவில்லை. உலகிலேயே தடுப்பூசி செலுத்துதலில் இந்தியா குறைவாக இருக்கிறது. அதுபற்றிப் பேசவில்லை.

டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் மோசமான சூழல் நிலவ மத்திய அரசுதான் பொறுப்பு. கரோனா வைரஸுக்கு எதிரான போரில் முழுமையாகத் தயாராக வேண்டும். ஆனால், மத்திய அரசு ஆக்சிஜனை ஏற்றுமதி செய்கிறது” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்