ஹரித்வார் கும்பமேளாவுக்கு வந்த 30 சாதுக்களுக்கு கரோனா தொற்று 

By ஏஎன்ஐ

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் நடந்து வரும் கும்பமேளாவுக்குப் புனித நீராடல் வைபவத்துக்கு வந்த 30 சாதுக்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு கும்பமேளா திருவிழாவை 30 நாட்கள் மட்டும் நடத்திக்கொள்ள அகாதாக்கள் முடிவு செய்தனர். ஆனால், நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கும்பமேளாவில் கடந்த வாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், மடாதிபதிகள் கூடி புனித நீராடினர்.

கடந்த 14-ம் தேதி மட்டும் ஹரித்வாரில் 43 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக, உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.

உத்தரகாண்ட் சுகாதாரத் துறையினர், போலீஸார் எனப் பலரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை வலியுறுத்தியும், பெரும்பாலானோர் கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் புனித நீராடினர் .

கடந்த 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கும்பமேளாவுக்கு வந்திருந்த 2.35 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்தது. இதில் முதல் கட்டமாக 2,171 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த பாதிப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் அச்சம் இருப்பதாக மாநில சுகாதாரத் துறையினர் எச்சரித்தனர்.

மேலும், மத்தியப் பிரதேச மகா நிர்வானி அஹாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கரோனா தொற்றால் கடந்த 13-ம் தேதி உயிரிழந்தார். கரோனா தடுப்பு விதிகளை மதிக்காமல் கும்பமேளாவுக்குத் தொடர்ந்து பக்தர்கள் வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, 13 அகாதாக்களின் அமைப்பான நிரஞ்சனி அகாதா, நாளையுடன் (ஏப்ரல் 17) கும்பமேளாவை முடித்துக்கொள்வதாக திடீரென நேற்று அறிவித்ததது. கரோனா வைரஸ் பரவல் ஹரித்வாரில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் கூடுவது ஏற்புடையதல்ல எனக் கூறியுள்ளது.

இந்நிலையில் கும்பமேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹரித்வார் தலைமை மருத்துவ அதிகாரி எஸ்.கே.ஜா கூறுகையில், “ஹரித்வாரில் கும்பமேளாவுக்கு வந்த சாதுக்களில் 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து இந்திய அகாதா பரிஷத் தலைவர் மகந்த் நரேந்திர கிரியும் கரோனாவில் பாதிக்கப்பட்டு, ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எங்களின் மருத்துவக் குழுக்கள் சாதுக்களுக்கும், அகாதாக்களுக்கும் தொடர்ந்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி வருகிறது. நாளையிலிருந்து பரிசோதனை தீவிரப்படுத்தப்படும்.

ஹரித்வாருக்கு வந்து சென்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா அறிகுறிகள் ஏதும் இருந்தால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். ஹரித்வாரில் கரோனா நோயாளிகள் மோசமான நிலையில் இருந்தால், அவர்கள் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் பணிகள் நடக்கின்றன” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்