பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம் 21-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு மிக முக்கியமான திட்டம்: பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம், 21ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு மிக முக்கியமான திட்டமாகப் பார்க்கப்படுகிறது என அவர் கூறினார்.

மேற்கு ரயில்வேயில் ரேவாரி-மதார் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக சரக்கு வழித்தடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இரட்டை அடுக்கு கன்டெய்னர்கள் ரயில்களைத் தொடங்கி வைத்ததன் மூலம் இந்த ரயில்களை இயக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது

மேற்கு ரயில்வேயின் பிரத்தியேக சரக்கு வழித்தடத்தில் 306 கி.மீ நீளமுள்ள ரேவார் - மதார் இடையே சரக்கு ரயில் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த வழித்தடத்தில் மிக நீண்ட இரட்டை அடுக்கு கன்டெய்னர் ரயிலையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா ஆளுநர்கள், முதல்வர்கள் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், கஜேந்திர சிங் செகாவத், அர்ஜூன் ராம் மெஹ்வல், கைலாஷ் சவுத்திரி, ராவ் இந்தர்ஜித் சிங், ரத்தன் லால் கத்தாரியா, கிருஷன் பால் குர்ஜார் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டின் கட்டமைப்பை நவீனமயமாக்க வேண்டும் என்ற மிகப் பெரிய அர்ப்பணிப்பு, இன்று புதிய உத்வேகம் பெற்றுள்ளது. நாட்டை நவீனமயமாக்க விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பண பரிமாற்றம் செய்தது, விமான நிலை விரைப்பாதையில் தேசிய போக்குவரத்து அட்டை அறிமுகம் செய்தது, ராஜ்கோட்டில் எய்ம்ஸ் தொடங்கியது, ஐஐஎம் சம்பல்பூர் தொடங்கியது, 6 நகரங்களில் சிறிய நவீன வீடு திட்டங்களைத் தொடங்கியது, தேசிய அணுகால அளவுகோல், பாரதிய நிர்தேஷக் திராவியா, தேசிய சுற்றுச்சூழல் தரநிலை ஆய்வகம், கொச்சி-மங்களூர் இடையே குழாய்வழி இயற்கை எரிவாயுத் திட்டம், 100வது கிசான் ரயில், கிழக்கு ரயில்வேயில் பிரத்தியேக சரக்கு ரயில் போக்குவரத்து போன்ற திட்டங்களை, மத்திய அரசு கடந்த 12 நாட்களில் மேற்கொண்டதை அவர் பட்டியலிட்டார். நாட்டை நவீனமயமாக்க, கொரோனா தொற்று காலத்திலும், பல திட்டங்கள் தொடங்கப்பட்டன என அவர் கூறினார்.

இந்தியாவில் தயாரான கோவிட் தடுப்பூசிக்கு சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது, மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் கூறினார். பிரத்தியேக சரக்கு ரயில் வழித்தடம், 21ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு மிக முக்கியமான திட்டமாகப் பார்க்கப்படுகிறது என அவர் கூறினார்.

நியூ பாபூர் - நியூ குர்ஜா வழித்தடம் தொடங்கப்பட்டதிலிருந்து, அந்தப் பாதையில் சரக்கு ரயிலின் சராசரி வேகம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என அவர் கூறினார்.

ஹரியாணாவின் நியூ அடேலியிலிருந்து, ராஜஸ்தானின் நியூ கிசான்கன்ஞ் வரை இரட்டை அடுக்கு கன்டெய்னர் சரக்கு ரயில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதன் மூலம், இந்த வசதி உடைய சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த சாதனைக்காக, ரயில்வே பொறியாளர்கள் குழுவை அவர் பாராட்டினார். இந்த பிரத்தியேக சரக்கு ரயில் போக்குவரத்து வழித்தடமானது, ராஜஸ்தான் விவசாயிகள், தொழில்முனைவோர், வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகளையும், நம்பிக்கையையும் கொண்டு வரும் என அவர் கூறினார். இந்த பிரத்தியேக சரக்கு வழித்தடம், நவீன சரக்கு போக்குவரத்துக்கான வழிமட்டும் அல்ல, நாட்டின் துரித வளர்ச்சிக்கான பாதையும் ஆகும். புதிய வளர்ச்சி மையங்கள் உருவாவதற்கான அடிப்படையை இந்த வழித்தடம் அமைக்கும், நாட்டின் பல நகரங்களில் வளர்ச்சியை அதிகரிக்கும் என அவர் கூறினார்.


நாட்டின் பல பகுதிகளின் பலம் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை கிழக்கு ரயில்வேயின் சரக்குப் போக்குவரத்து வழித்தடம் காட்டத் தொடங்கியுள்ளது என பிரதமர் கூறினார். மேற்கு ரயில்வேயின் சரக்கு வழித்தடம், ஹரியாணாவிலும், ராஜஸ்தானிலும் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களை எளிதாக்கும். மகேந்திரகர், ஜெய்ப்பூர், ஆஜ்மிர், சிகார் போன்ற நகரங்களுக்கு புதிய சக்தியை அளிக்கும். இந்த மாநிலங்களில் உள்ள உற்பத்தி ஆலைகளும், தொழில்முனைவோரும் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு தங்கள் உற்பத்திப் பொருட்களை குறைந்த செலவில் விரைவாக கொண்டு செல்ல முடியும். குஜராத், மகாராஷ்டிரா துறைமுகங்களுக்கு குறைந்த செலவில் விரைவாகச் செல்வது, இப்பகுதியில் புதிய முதலீடுகளை ஊக்குவிக்கும்.

நவீன கட்டமைப்பு உருவாக்கம், வாழ்க்கையிலும், வணிகத்திலும் புதிய அமைப்புகளுக்கு வழிவகுக்கிறது மற்றும் இது தொடர்பான பணியின் வேகத்தை மட்டும் அதிகரிக்காமல், பொருளாதார என்ஜின்கள் பலவற்றுக்கும் சக்தி அளிக்கிறது என பிரதமர் கூறினார். இந்த சரக்கு வழித்தடம் கட்டுமானத் துறையில் மட்டும் வேலைவாய்ப்பை உருவாக்காமல், சிமென்ட், எஃகு, போக்குவரத்து துறையிலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் என அவர் கூறினார். இந்த சரக்கு வழித்தடத்தின் பயன்களை விவரித்த பிரதமர், இந்த வழித்தடம் 9 மாநிலங்கஙளில் 133 ரயில்வே நிலையங்களைக் கடந்து செல்கிறது என்றார். இந்த ரயில் நிலையங்களில், பன்நோக்கு தளவாட மையம், சரக்கு முனையம், கன்டெய்னர் கிடங்கு, கன்டெய்னர் முனையம், பார்சல் மையம் ஆகியவை இருக்கும். இவை அனைத்தும், விவசாயிகள், சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், மிகப் பெரிய உற்பத்தி நிறுவனங்களுக்குப் பயன் அளிக்கும்.

ரயில் பாதைகளை ஒப்பிட்டுப் பேசிய பிரதமர், நாட்டில் இன்று கட்டமைப்பு பணி ஒரே நேரத்தில் இரட்டைப் பாதையில் செல்கிறது என்றார். தனிநபர் வளர்ச்சி பொருத்த அளவில் வீட்டு வசதித்துறை, துப்புரவு, மின்சாரம், எல்பிஜி, சாலை மற்றும் இணையதள இணைப்பு ஆகியவற்றின் சீர்திருத்தங்களை பிரதமர் குறிப்பிட்டார். இதுபோன்ற திட்டங்களால் கோடிக்கணக்கான இந்தியர்கள் பலன் அடைந்தனர். மற்றொரு பாதையில், நாட்டின் வளர்ச்சி என்ஜின்களான தொழில்துறை, தொழில் முனைவோர் போன்றோர், நெடுஞ்சாலை, ரயில்வே, விமானப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து, துறைமுக இணைப்பு திட்டங்கள் விரைவாக அமல்படுத்தப்பட்டதால் பயன் அடைந்தனர். சரக்குப் போக்குவரத்து வழித்தடம் போல், பொருளாதார வளாகம், பாதுகாப்புத்துறை வளாகம், தொழில்நுட்பத் தொகுப்பு போன்றவை தொழில்துறைக்கு வழங்கப்படுகின்றன. இந்த தனிநபர் மற்றும் தொழில் கட்டமைப்பு, இந்தியாவை பற்றிய நல்ல தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அன்னிய செலாவணி இருப்பு அதிகரிப்பில் இது பிரதிபலிக்கிறது, இந்தியா மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என பிரதமர் கூறினார்.

இத்திட்டத்தில் ஜப்பானின் தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவிக்காக ஜப்பான் மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கத்துக்கு தனிநபர், தொழில்துறை இடையே ஒருங்கிணைப்பும், முதலீடும் தேவை என பிரதமர் வலியுறுத்தினார். முன்பு ரயில் பயணிகள் தெரிவித்த கவலைகளை நினைவு கூர்ந்த பிரதமர், சுத்தம், நேரத்தை கடைப்பிடித்தல், சேவை, டிக்கெட் வழங்குதல், வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பணிகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ரயில்நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் சுத்தம், பயோ கழிவறைகள், நவீன டிக்கெட் முறை, தேஜஸ் மற்றும் வந்தே பாரத், விஸ்தா-டோம் ரயில் பெட்டிகள் போன்ற மாதிரி ரயில்களை அவர் உதாரணங்களாகத் தெரிவித்தார். அகல ரயில் பாதை, ரயில்வே மின்மயமாக்கம் ஆகியவற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது நம்பிக்கையையும், ரயில்களின் வேகத்தையும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். அதிவேக ரயில்கள், ரயில்பாதை அமைப்பதில் நவீன தொழில்நுட்பம் ஆகியவை குறித்துப் பேசிய பிரதமர், வடகிழக்கு மாநிலங்களின் தலைநகர் ஒவ்வொன்றும் ரயில்வேயுடன் இணைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கரோனா காலத்தில், ரயில்வேத் துறையின் உன்னதமான பங்களிப்பைக் குறிப்பிட்ட பிரதமர், புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றதற்காக ரயில்வே துறையினரைப் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

5 mins ago

ஜோதிடம்

47 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்