வட மாநிலங்களில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தலில் போட்டி

By ஆர்.ஷபிமுன்னா

வட மாநிலங்களில் பணியாற்றும் தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர். திராவிடம் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்களான இவர்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட விரும்புகின்றனர்..

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகள் அரசியலில் நுழைவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இங்கு ஐஏஎஸ் அதிகாரிகளான வி.எஸ்.சந்திரலேகா, மலைச்சாமி, பி.சிவகாமி, ஐபிஎஸ் அதிகாரிகளில் ஆர்.நட்ராஜ், ஏ.எஸ்.அலெக்ஸாண்டர் என பட்டியல் தொடர்கிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏ.ஜி.மவுர்யா ஐபிஎஸ், ஆர்.ரெங்கராஜன் ஐஏஎஸ், சந்தோஷ்பாபு ஐஏஎஸ் ஆகியோர் இணைந்தனர். பாஜக.வில் இணைந்த கே.அண்ணாமலை ஐபிஎஸ், கட்சியின் துணைத் தலைவராகி உள்ளார். காங்கிரஸிலும் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் இணைந்துள்ளார். பிரதானக் கட்சியாக இருந்தும் திமுக.வில் தற்போது முதல் முறையாக ஓய்வு பெற்றவரான வி.மகாலிங்கம் ஐஆர்எஸ் இணைந்துள்ளார்.

இதுபோல், வட மாநிலங்களில் குடிமைப் பணியில் உள்ள அரசியல் ஆர்வம் கொண்ட தமிழர்களில் பெரும்பாலானவர்கள் பாஜக.வுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்களாக உள்ளனர். பாஜக.வில் கே.அண்ணாமலை ஐபிஎஸ் வருகைக்கு பின் இவர்களில் சிலருக்கும் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்காக, அவர்களுக்கு அறிமுகமான சில எம்.பி.க்கள் மூலமாக திமுக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளில் சேர விருப்பம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு இளம் ஐபிஎஸ் அதிகாரி முன்னணியில் உள்ளார். இவர் மத்திய, மாநிலங்களில் பாஜக ஆட்சியின் தவறுகளை குறிப்பிட்டு தன் பதவியை ராஜினாமா செய்ய கடிதமும் தயாராக வைத்திருக்கிறார்.

இப்பட்டியலில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள தனித்தொகுதியில் போட்டியிட ஒருவர் ஆர்வம் காட்டுகிறார். இவரது மாமனார், தமிழகத்தின் ஒரு முக்கியக் கட்சியில் மாநில நிர்வாகப் பொறுப்பில் உள்ளார்.

இடதுசாரி கட்சி தலைவர்கள் குடும்பத்தை சேர்ந்தவரும் ஐஎப்எஸ் அதிகாரியுமான ஒருவரும் அக்கட்சி சார்பில் போட்டியிட விரும்புகிறார். இவர்கள், தங்களது விருப்பம் குறித்து திமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களை டெல்லியில் சந்தித்தும் ஆலோசித்துள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் தமிழர்களான அதிகாரிகள் வட்டாரத்தினர் கூறுகையில், ‘‘சுதந்திரத்துக்கு பின் தமிழகமும் வட மாநிலங்களை போல் வளர்ச்சி பெறாமல் இருந்தது. வளர்ச்சியை காமராஜர் கையில் எடுத்தாலும் தமிழகத்தை பெரும்பாலும் முன்னேற்றியதில் திராவிட கட்சிகளின் பங்கு அதிகம். எனவே, திராவிட கொள்கைகள் அல்லாத கட்சிகள் சமூகநீதிக்கு எதிரானவை என்பதால், தமிழகத்தில் வளர இடமளிக்க கூடாது என்பது எங்கள் விருப்பம். இதனால், எங்களில் சிலரே தமிழக தேர்தலில் களம் இறங்க தயாராக உள்ளோம்’’ எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்