கரோனா வைரஸ் பரவலை தடுக்க இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து 2 நாட்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா, சுபாஷ் ரெட்டி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி எம்.ஆர்.ஷா கூறும்போது, "குஜராத்தில் என்ன நடக்கிறது. வைரஸ் பரவலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது" என்று கேள்வி எழுப்பினார்.
நீதிபதி அசோக் பூஷண் கூறும்போது, "கடந்த 2 வாரங்களாக டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளது. டெல்லியில் தற்போதைய நிலை குறித்து மாநில அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, "டெல்லியில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வைரஸ் பரவலை தடுக்க டெல்லி அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
அனைத்து தரப்பு விளக்கங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் டெல்லி, குஜராத் மாநில அரசுகள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. குஜராத்தில் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் திருமண விழாக்கள், ஊர்வலங்களுக்கு மாநில அரசு அனுமதி அளித்தது ஏன் என்பது புரியவில்லை. டெல்லியில் வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை யூனியன் பிரதேச அரசு முறையாகப் பின்பற்றவில்லை. பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை டெல்லி அரசுக்கு உள்ளது.
நாடு முழுவதுமே கரோனா வைரஸ் பரவல் மோசமான நிலையில் உள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் வைரஸ் பரவல் அதிகரித்து மோசமான பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்று தெரிகிறது. கரோனா நோயாளிகளுக்கு மனிதாபிமானத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனை நிர்வாகங்கள் கண்ணியத்துடன் கையாள வேண்டும்.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் 2 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago