மும்பையில் பாந்த்ரா பகுதியில் மாநகராட்சியின் அனுமதியின்றி நடிகை கங்கணா ரணாவத்தின் வீட்டில் கட்டப்பட்டிருந்த பகுதிகளை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மண் அள்ளும் வாகனங்கள் மூலம் இடித்து நடவடிக்கை எடுத்தனர்.
நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த நடிகை கங்கணா ரணாவத் மும்பையைப் பற்றியும், மகாராஷ்டிரா மாநிலம் குறித்தும் அவதூறாகப் பேசினார். மும்பையை மினி பாகிஸ்தான் என்று கூறியதற்கு கங்கணா மன்னிப்புக் கோர வேண்டும். அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரித்தார்.
இதனால் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கணா ரணாவத்துக்கும் இடையே ட்விட்டரில் கடுமையாக வாக்குவாதம் நடந்தது.
மேலும், நடிகை கங்கணா ரணாவத்தின் பேச்சுக்கு மகாராஷ்டிர அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் எதிர்ப்புக் கிளம்பியது. மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலரும் கண்டித்தனா்.
இதனால் நடிகை கங்கணா ரணாவத்துக்கும், மகாராாஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கும் இடையிலான மோதல் வெடித்தது.
இந்தச் சூழலில், நடிகை கங்கணா ரணாவத்துக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி அவர் சார்ந்த இமாச்சலப்பிரதேச அரசு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.
கங்கணா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்கள் விமர்சித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல், மகாராஷ்டிராவை அவதூறாகப் பேசிய ஒருவருக்கு பாஜக அரசு ஆதரவு தெரிவிக்கிறது என்றும் சிவசேனா விமர்சித்திருந்தது.
இந்தச் சூழலில் மும்பை மாநகராட்சி சார்பில் ஒரு குழுவினர், பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கணா ரணாவத் வீட்டில் நேற்று முன்தினம் ஆய்வு நடத்தி நேற்று நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். அந்த நோட்டீஸில், “வீட்டில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறை அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.
வீட்டின் மாடிப்படி அருகே கழிப்பறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ளதா என்பது குறித்து 24 மணிநேரத்தில் கங்கணா ரணாவத் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கங்கணா ரணாவத் தரப்பில் எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அளித்த கெடு முடிந்ததையடுத்து, இன்று காலை மண் அள்ளும் எந்திரத்தின் உதவியுடன் கங்கணா வீட்டில் அனுமதியின்றி செய்யப்பட்டிருந்த மாற்றங்களை இடித்து அதிகாரிகள் அகற்றினர். இதனால் பாந்த்ரா பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தன்னுடைய வீட்டை இடித்ததற்கு நடிகை கங்கணா ரணாவத் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும், தனது வீட்டை இடித்தது சட்டவிரோதம். இதைத் தடை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி நடிகை கங்கணா ரணாவத் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
ஜோதிடம்
21 mins ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
உலகம்
3 hours ago