2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டதா? புழக்கத்தின் நிலவரம் என்ன? ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தகவல்

By பிடிஐ


நாட்டின் உயர்ந்த கரன்ஸியான 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இன்னும் அச்சடிக்கப்டுகிறதா, அதன் புழக்க நிலவரம் என்ன, எத்தனை நோட்டுகள் இருக்கின்றன என்பது குறித்து ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''2019-20 ஆம் ஆண்டோடு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 2018 மார்ச் மாதம் 33,632 லட்சம் எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

இது 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 32,910 லட்சம் நோட்டுகளாக (எண்ணிக்கையில்) குறைந்தது. 2020-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 27,398 லட்சம் எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளே புழக்கத்தில் இருக்கின்றன.

ஒட்டுமொத்த ரூபாய் எண்ணிக்கையில் ரூ.2000 நோட்டின் பங்கு கடந்த 2018 மார்ச்சில் 3.3 சதவீதம் இருந்தது. அதன்பின் 2019-ம் ஆண்டு மார்ச் முடிவில் 3 சதவீதமாகக் குறைந்தது. இது 2020 ஆம் ஆண்டு மார்ச் முடிவில் 2.4 சதவீதம் அளவாகக் குறைந்துவிட்டது.

மதிப்பின் அடிப்படையில் 2018 மார்ச் மாதம் 37.3 சதவீதம் இருந்த நிலையில், 2019 மார்ச் இறுதியில் 31.2 சதவீதமாகச் சரிந்தது. 2020 மார்ச் முடிவில் 22.60 சதவீமாகக் குறைந்துள்ளது.

அதேசமயம், ரூ.500, ரூ.200 நோட்டுகளின் புழக்கத்தின் அளவு, மதிப்பின் அளவு , எண்ணிக்கையின் அளவு கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும், 2019-20 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி சார்பில் 2 ஆயிரம் ரூபாய் அச்சடிக்க, பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முந்த்ரன் பிரைவேட் லிமிட், செக்யூரிட்டி பிரிண்டிங் அன்ட் மின்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிட் ஆகியவற்றுக்குப் புதிதாக எந்த ஆர்டரும் வழங்கவில்லை.

ரூ.500 நோட்டுகளைப் பொறுத்தவரை 2018-19இல் 1,169 கோடி எண்ணிக்கையில் அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டு, 1,147 கோடி நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இது 2019-20 ஆம் ஆண்டில் 1,463 நோட்டுகள் அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டு, 1,200 கோடி நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டன.

பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முந்த்ரன் பிரைவேட் லிமிட், செக்யூரிட்டி பிரிண்டிங் அன்ட் மின்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட் ஆகியவை மூலம் 2019-20 ஆம் ஆண்டில் ரூ.100 நோட்டுகள், 330 கோடி எண்ணிக்கையிலும், ரூ.50 நோட்டுகள் 240 கோடி எண்ணிக்கையிலும், ரூ.200 நோட்டுகள் 205 கோடி எண்ணிக்கையிலும், ரூ.10 நோட்டுகள் 147 கோடி எண்ணிக்கையிலும், ரூ.20 நோட்டுகள் 125 கோடி எண்ணிக்கையிலும் அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.

2019-20 ஆம் ஆண்டில் வங்கித்துறையில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 695 எண்ணிக்கையில் போலி ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது ரிசர்வ் வங்கியில் 4.6 சதவீதமும், பிற வங்கிகளில் 95.4 சதவீதமும் கண்டறியப்பட்டன.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கள்ளநோட்டு கண்டுபிடித்தல் ரூ.10, ரூ.50, ரூ.200, ரூ.500 ஆகியவற்றில் முறையே 144.60 சதவீதம், 28.7 சதவீதம், 151.2 சதவீதம், 37.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரூ.20, ரூ.100, ரூ.2000 ஆகியவற்றில் கள்ள நோட்டுகள் அளவு முறையே 37.7 சதவீதம், 23.7 சதவீதம், 22.1 சதவீதம் குறைந்துள்ளது.

ரூ.2000 நோட்டுகளில் கடந்த 2018-19 ஆம் ஆண்டில் 21,847 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கடந்த நிதியாண்டில் எண்ணிக்கை 17,020 ஆகக் குறைந்துள்ளது''.

இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

50 mins ago

வாழ்வியல்

41 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்