கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆழப்புலா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 3 நாட்களாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது மழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பும் நிலையில் இருக்கின்றன. மிகப்பெரிய இடுக்கி அணை மட்டும் நிரம்பவில்லை.
ஆனால், இடுக்கி மாவட்டத்தின் வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புத்துறை, கரிங்குள் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் மிகக்கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் பெய்துவரும் மிகக் கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிவிட்டதால், படிப்படியாக தண்ணீரை சுரங்கப்பாதை வழியாக வைகை அணைக்கு வெளியேற்றுங்கள் என்று தமிழக அரசுக்கு கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யார் அணை நிரம்பியுள்ளது. இதனையடுத்து அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மற்றொரு முக்கிய அணையான அருவிக்கரா அணையும் நிரம்பியதையடுத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு:
நன்கு உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு முகமாக நகர்ந்து, தற்போது வடமேற்கிலும் அதை அடுத்துள்ள அரபிக்கடலின் வடகிழக்குப் பகுதியிலும் நிலைகொண்டுள்ளது.
பருவமழை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சாதாரண நிலைக்கருகே உள்ளது தொடர்ந்து சுழற்சியில் உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு கேரளாவிலும், மாஹேவிலும் பரவலானது முதல் கனத்தமழையும், தனிப்பட்ட சில பகுதிகளில் மிக மிக கனத்த மழையும் பொழியும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிகமிக கனத்த மழை வரை ஆங்காங்கே பொழியும்.
கர்நாடகாவின் தெற்கு உள் பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே பலத்த மழை முதல் மிகபலத்த மழை அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளிலும் தெற்கு உள் பகுதிகளிலும் மிகமிக கனமழை பெய்யக்கூடும்
கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆழப்புலா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோலவே கொல்லம், பத்தம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
34 mins ago
கருத்துப் பேழை
30 mins ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
14 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago