கரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாக இன்னும் மாறவில்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸ் சமூக பரவலாக மாறுவதை மத்திய அரசு தடுத்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரழந்தோர் எண்ணிக்கை 1,568 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கரோனாவுக்கு எதிரான போராட்டம் என்பது ராக்கெட் அறிவியலைப் போன்றது அல்ல. நம்முடைய வாழ்வியல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதும் கரோனாவுக்கு எதிரானதுதான். கை கழுவுதல் உள்ளிட்ட பழக்கங்கள் வைரஸ் தாக்குதல்களில் இருந்து நம்மைப்பாதுகாக்கும். வைரஸால் ஏற்பட்டபெரும்பாலான நோய்கள் இந்தியாவில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ளன.

நம் நாட்டில் கரோனா வைரஸ் என்பது சமூகப் பரவலாக இன்னமும் மாறவில்லை. அதை நாம் வெற்றிகரமாக தடுத்துள்ளோம். மக்கள் தங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை கரோனா வைரஸ் நமக்கு உணர்த்திஉள்ளது. இந்தப் பழக்கத்தை நமக்கு மறைமுகமாக சொல்லியிருக்கிறது. மறைந்திருந்து வந்த ஆசி என்று இதைச் சொல்லலாம். அடிக்கடி கை கழுவும் பழக்கம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், சுவாச உறுப்புகளை சுத்தமாக வைத்திருத்தல் என நமது பழக்கவழக்கமே மாறியிருக்கிறது.

மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீடித்திருப்பது சரியான நடவடிக்கை. பொருளாதாரம், சுகாதாரம் இரண்டையும் சமன்படுத்திச் செல்லவேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. கைகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற பழக்கங்களால் தொற்று நோய் பரவுவதைக் குறைக்க முடியும். பெரியம்மை, போலியாபோன்ற வைரஸ் நோய்களைத் தவிர மற்ற வைரஸ் நோய்கள் நாட்டிலிருந்து இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை.

சுகாதாரப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தனி கவச உடைகள், என்-95 ரக முகக் கவசங்கள் வழங்கிவருகிறோம். இதுபோன்ற உபகரணங்களை உற்பத்தி செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கரோனா வைரஸ் தொற்று சோதனையும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் அதிக அளவில் அங்கு கூடி கரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதே என்று நிருபர்கள் கேட்டனர்.

அப்போது அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அளித்த பதிலில், "ஒவ்வொரு முடிவை எடுக்கும் முன்னதாக அதனால் ஏற்படும் விளைவுகள், பிரச்சினைகள் குறித்து எடை போட்டு அதில் பிரச்சினை வராது என்று தெரிந்த பின்னரே அமல்படுத்த வேண்டும். தற்போது கரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் எண்ணிக்கை 2 மடங்காக மாறுவதற்கு 12 நாட்களுக்கு மேலாகிறது. மார்ச் 25-ம் தேதி வாக்கில் இது 3 நாளில் 2 மடங்காக மாறியது நினைவிருக்கலாம். ஊரடங்கு உத்தரவுக்குப் பின்னர் கரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைவது அதிகரித்து வருகிறது" என்றார்.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்