மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்த முதியவர் ரமேஷ் பிரஜாபதி (70) ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சையின் போது உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இவ்வாறு விரக்தியடைந்து தற்கொலை செய்துகொள்வதை சிபிஎம் ஒருபோதும் ஆதரிக்காது என்று சிபிஎம் தெரிவித்துள்ளது.
சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க சிஏஏ சட்டம் வழிவகுக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
எனினும் இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக தரப்பில் சிஏஏ சட்டத்தை ஆதரித்து நாடு முழுவதும் வீடு, வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மத்தியப் பிரதேசத்தில் சிஏஏவை எதிர்த்து ஒருவர் தீக்குளித்தார். வெள்ளி அன்று மாலை இந்தூரில் உள்ள கீதா பவன் சந்திப்பிற்கு வந்த பேருந்து ஒன்று வந்து அங்கு நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒரு முதியவர் திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது சில துண்டு பிரசுரங்களையும் வீசினார்.
அவர் ரமேஷ் பிரஜாபதி (70) சிபிஎமின் செயல்பாட்டாளராக இருந்தவர் என்றும் காவல்துறை தெரிவித்தது. மூன்று தினங்களாக இந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார். துகோகஞ்ச் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி நிர்மல் ஸ்ரீவாஸ் பிரஜாபதியின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.
இம்முடிவை ஏற்றுக்கொள்ளமுடியாது: சிபிஎம்
ரமேஷ் பிரபாதி விரக்தியில் எடுத்த இந்தமுடிவை ஆதரிக்க முடியாது என சிபிஎம் கூறியுள்ளது.
இது குறித்து அகில இந்திய கிசான் சபாவின் இணைச் செயலாளரும், சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளருமான பாடல் சரோஜ் கூறியதாவது:
''சிஏஏ குறித்து மக்களிடையே சங்கடம் நிலவுகிறது, துரதிர்ஷ்டவசமாக இது குறித்து எந்த விவாதமும் கூட நடைபெறவில்லை. மக்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்டு உள்ளது. ரமேஷ் சிஏஏ குறித்த அச்சத்தினால், அதனால் ஏற்பட்ட விரக்தியில் இந்த தீவிர நடவடிக்கையை எடுத்தார். ஆனால் சிபிஎம் இந்த வகையான செயலை ஒருபோதும் ஆதரிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது"
இவ்வாறு சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் பாடல் சரோஜ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
20 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago