ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று செல்ல இருக்கும் மத்திய அமைச்சர்கள் குழுவுக்கு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறக் கோரியும், நகரங்களில் வசிக்கும் மக்களைச் சந்தித்துவிட்டுத் திரும்பிவிடாமல், கிராமங்களுக்கும் சென்று அடித்தட்டு மக்களைச் சந்தித்துப் பேசி திட்டங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின் மத்திய அரசின் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துக் கூற 38 மத்திய அமைச்சர்கள் 60 இடங்களுக்கு இன்று முதல் பயணம் மேற்கொள்கின்றனர்.
38 மத்திய அமைச்சர்களும் ஜம்மு காஷ்மீர் சென்று பல்வேறு தரப்பட்ட மக்களையும் அடுத்த ஒருவாரத்துக்குச் சந்திக்க உள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்கள் வரும் 24-ம் தேதி வரை பல்வேறு நகரங்களுக்கும், கடைக்கோடி கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்திக்க உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள இருக்கும் மத்திய அமைச்சர்கள் 38 பேருடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தி, பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து மக்களைச் சந்திக்கும்போது எடுத்துக் கூற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக மத்திய அரசு வடிவமைத்துள்ள, அறிமுகப்படுத்தியுள்ள அனைத்துத் திட்டங்கள் குறித்தும் மக்களுக்குக் கூறவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் செல்லும் அமைச்சர்கள் நகர்ப்புறத்து மக்களை மட்டும் சந்தித்துவிட்டுத் திரும்பிவிடாமல் அனைத்து கிராமப்புறத்துக்கும் சென்று மக்களுடன் உரையாட வேண்டும். மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை அவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துக் கூறி, அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ரேசாய் மாவட்டத்தில் உள்ள கத்தாரா முதல் பந்தால் வரை வரும் 19-ம் தேதி முதல் பயணம் மேற்கொள்கிறார். ஸ்ரீநகர் முழுவதும் பியூஷ் கோயல் பயணித்து மக்களைச் சந்திக்கிறார்.
உள்துறை இணையமைச்சர் ஜி கிஷன் ரெட்டி 22-ம் தேதி முதல் கந்தர்பால், மணிகாம் வரையிலும், சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 24-ம் தேதி பாரமுல்லா மாவட்டத்திலும் பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 20-ம் தேதி உதம்பூரில் மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும், 21-ம் தேதி ஜம்முவில் கிரண் ரிஜிஜுவும் பயணிக்கின்றனர். தோடா மாவட்டத்துக்கு மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், ஸ்ரீநகரில் ஸ்ரீபட் நாயக்கும் செல்கின்றனர்.
இவர்கள் தவிர மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், கிரிராஜ் சிங், பிரகலாத் ஜோஷி, ரமேஷ் பொக்ரியால், ஜிதேந்திரசிங் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்ல உள்ளனர்.
அமைச்சர்கள் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர். சுப்பிரமணியம் அனைத்து நிர்வாகிகள், செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
32 mins ago
தமிழகம்
1 min ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
5 hours ago