புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் உடல்நலக் குறைவால் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில், அவரின் உடல்நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க எய்ம்ஸ் இயக்குநர் தலைமையில் மருத்துவக் குழு அமைக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதனிடைய ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கடந்த 16-ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தியது. அமலாக்கப் பிரிவு காவல் முடிந்த நிலையில் நவம்பர் 13-ம் தேதி வரை சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதற்கிடையே சிதம்பரம் கைது செய்யப்பட்ட ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து பல முறை உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சிதம்பரத்துக்கு ஜீரணக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி சிதம்பரம் தரப்பில் அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், " 2017-ம் ஆண்டில் இருந்து எனக்குக் குடல் அழற்சி நோய் இருந்து வருகிறது. தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவுக்குச் சிகிச்சை எடுக்க ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவ நிறுவனத்துக்குச் செல்ல வேண்டும். அதற்காக குறைந்தபட்சம் 6 நாட்கள் ஜாமீன் வழங்க வேண்டும். கடுமையான அடிவயிற்று வலி கடந்த 5-ம் தேதியில் இருப்பதால், அவசரமாக மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
எனக்கு ஏற்பட்டுள்ள வயிற்று வலிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் இரு முறை சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்கவில்லை. அங்குள்ள மருத்துவர்கள் கடந்த 7-ம் தேதியும், வலி நிவாரணி மாத்திரை வழங்கியும் பலனில்லை. 22-ம் தேதி மீண்டும் மாற்று மருந்துகள், மாத்திரைகள் வழங்கியும் வலி குறையவில்லை. அடுத்தகட்டமாக ராம் மனோகர் லோகியா மருத்துவமனையிலும் சிகிச்சையும், மருத்துவப் பரிசோதனையும் எடுத்தோம்.
அதில் வயிற்றுப்புண் அதிகமாகிவிட்டதால், உடனடியாக சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். உடல்நலக் குறைவால் என் உடல் எடை கடந்த 2 மாதங்களில் 7 கிலோ குறைந்துவிட்டது" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி சுரேஷ் கெய்த் பிறப்பித்த உத்தரவில், " சிதம்பரத்துக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் தலைமையில் மருத்துவக் குழு அமைக்கப்பட வேண்டும்.
அந்த மருத்துவக் குழுவில் சிதம்பரத்துக்கு மருத்துவ சிகிச்சை அளித்த ஹைதராபாத்தைச் சேர்ந்த குடலியல் மருத்துவர் நாகேஸ்வர ரெட்டியும் இணைக்கப்பட வேண்டும். இந்தக் குழு சிதம்பரத்தின் உடல் நிலையைத் தீவிரமாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். நாளை இந்த இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் வழக்கமான ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த மனுவின் விசாரணை வரும் நவம்பர் 4-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago