புதுடெல்லி
மக்களவையில் கண்ணியமற்ற வகையில் பேசியதற்காக சமாஜ் வாதி கட்சி எம்.பி. ஆசம்கானுக்கு கட்சி பேதமின்றி பெண் எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மக்களவையில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மக்களவையில் நேற்று முன்தினம் முத்தலாக் தடை மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவையில் இல்லை. இதனால் மக்களவைத் தலைவர் இருக்கையில் பாஜக எம்பியும் துணை சபாநாயகருமான ரமாதேவி அமர்ந்து இருந்தார்.
அப்போது சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம் கான் பேசும் போது, “நான் உங்களை மிகவும் விரும்பு கிறேன், எல்லா நேரத்திலும் உங்கள் கண்களைப் பார்ப்பது போல் உணர்கிறேன்” என்ற வகையில் ஆட்சேபகரமாக பேசினார். இத னால் அவையில் இருந்த எம்பிக்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், ஆசம் கான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி கூச்சலிட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அவைக்கு வந்த ஓம் பிர்லா, “எம்.பி.க்கள் அவையின் கண்ணி யத்தைக் காக்கும் வகையில் பேச வேண்டும்” என்று எச்சரித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் நேற்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது மீண்டும் எழுந் தது. அப்போது ஆசம் கானின் பேச்சுக்கு கட்சி பேதமின்றி பெண் எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது பேசிய மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “ஆசம் கானின் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும். அவரது பேச்சு, ஆண் எம்.பி.க்கள் உள்பட அனைத்து எம்.பி.க்கள் மீதும் கறையாக படிந்துவிட்டது. இதைப் பார்த்துக் கொண்டு அமைதி யாக இருக்க முடியாது. அவரது பேச்சை ஏற்கவே முடியாது” என்றார்.
அப்போது பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “தான் பேசிய பேச்சுக்காக ஆசம் கான் மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது அவரை சஸ் பெண்ட் செய்யவேண்டும்” என்றார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பேசும்போது, “ஆசம் கானின் பேச்சை ஏற்க முடியாது. அவரது பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். அவர் மீது அவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
கட்சி பேதமின்றி ஆசம் கான் பேச்சுக்கு பெண் எம்.பி.க்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி உள்ளிட்டோ ரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
எம்.பி.க்களுடன் ஆலோசனை
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பல்வேறு கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லா கூட்டி னார். கூட்டத்துக்குப் பிறகு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, “சமாஜ்வாதி எம்.பி. ஆசம்கான் தான் பேசிய பேச்சுக்கு வரும் திங்கள்கிழமை நாடாளு மன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான உத்தரவு அவ ருக்கு அனுப்பப்படும். அவ்வாறு அவர் மன்னிப்புக் கேட்காவிட்டால், மக்களவைத் தலைவர் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்” என்றார். - பிடிஐ
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
க்ரைம்
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago