டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை ஆட்டோ டிரைவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 4 நாட்களில் அவர் தாக்குதலுக்கு ஆளாவது இது இரண்டாவது முறையாகும்.
வடமேற்கு டெல்லி மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ராக்கி பித்லான் போட்டியிடுகிறார். இந்நிலையில் அர்விந்த் கேஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை, திறந்த ஜீப்பில் வந்து தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். டெல்லி சுல்தான்புரியில் அவர் பிரச்சாரம் செய்தபோது, தொண்டர்களுடன் நின்றிருந்த லாலி என்ற ஆட்டோ டிரைவர், ஜீப்பில் ஏறி கேஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்தார். மாலையை கேஜ்ரிவால் தலைகுனிந்து ஏற்கும்போதே, திடீரென அவரது கன்னத்தில் அறைந்தார் லாலி. இதை சற்றும் எதிர்பார்க்காத தொண்டர்கள் லாலி மீது பாய்ந்தனர். அவரை அடித்து உதைத்தனர். இதற்கு பாரதிய ஜனதா கட்சியே காரணம் என விமர்சித்தனர்.
பின்னர் கேஜ்ரிவால் தலையிட்டதை தொடர்ந்து லாலியை தொண்டர்கள் விடுவித்தனர். இதையடுத்து அவர் காவல்நிலையத்தில் ஒப்படைக் கப்பட்டார். டெல்லி அமன்விஹார் பகுதியைச் சேர்ந்த லாலி (38) மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிரதமர் ஆவதற்காக சிலர் இதுபோல் ஏன் வன்முறையில் இறங்குகின்றனர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இத்தகைய தாக்குதல்களுக்கு பயந்து நாங்கள் அமைதியாக இருந்து விடுவோம் என்று நினைத்தால் அது தவறு. எங்களின் கடைசி மூச்சு வரை போராடுவோம்” என்றார்.
தொடர்ந்து இச்சம்பவத்தால் மனம் வருந்திய கேஜ்ரிவால், தாம் காந்தி சமாதிக்கு செல்ல விரும்புவதாகக் கூறினார். தொண்டர்களுடன் ராஜ்காட் வந்த அவர், அங்கு மவுனமாக பிரார்த்தனை செய்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே ஆட்டோ டிரைவர் லாலி அறைந்ததில் கேஜ்ரிவாலின் கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும் அவரது கண்ணாடி கீழே விழுந்ததாகவும் ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கேஜ்ரிவால் பின்னர் தனது வலைதளப் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நான் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து சற்று நினைத்துப் பார்த்தேன். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அவர்கள் என்ன விரும்புகின்றனர்? என்ன சாதிக்க நினைக்கின்றனர்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த நான்கு நாட்களில் கேஜ்ரிவால் மீது நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு டெல்லி தட்சிணபுரியில் கேஜ்ரிவால் திறந்த ஜீப்பில் பிரச்சாரம் செய்தபோது, அப்துல் வாஹித் எனும் 19 வயது இளைஞர், கேஜ்ரிவாலின் முகத்தில் குத்தினார்.
கடந்த 28-ம் தேதி கேஜ்ரிவால் ஹரியாணாவில் பிரச்சாரம் செய்தபோதும் ஒருவரால் கழுத்தில் தாக்கப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கேஜ்ரிவால் மீது நீல மை மற்றும் முட்டை வீசப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
தமிழகம்
36 mins ago
வணிகம்
51 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago