பாஜக ஆட்சிக்கு வந்ததும் சிக்கிய முதல் சர்ச்சையே மாநில ஆளுநர்கள் மாற்றப்பட்டதே என்று கூறலாம். அந்த வரிசையில் இப்போது வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் நீக்கம், புதிய சர்ச்சையை கொண்டுவந்துள்ளது.
நேற்றிரவு திடீரென சுஜாதா சிங் நீக்கப்படுகிறார். ஜெய்சங்கர் அவருக்கு பதிலாக புதிய வெளியுறவுச் செயலராக நியமிக்கப்படுகிறார்.
இந்தத் தகவல் அதிகாரபூர்வமாக வெளியான அடுத்த தருணத்திலேயே எதிர்கட்சிகளின் விமர்சனமும் வெளியாகின. சுஜாதா சிங் நீக்கத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாக விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் நளின் கோஹ்லி, "சுஜாதா சிங் நீக்கப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சிகள் இப்படி சலசலக்க தேவையில்லை. ஓர் அரசுக்கு அதன் அதிகாரங்களுக்கு உட்பட்டு எந்த ஓர் அதிகாரியையும் மாற்றவோ இல்லை பொறுப்புகளை வழங்கவோ முழு உரிமை இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் மத்திய அரசு சுஜாதா சிங்கை நீக்கிவிட்டு ஜெய்சங்கரை பணியமர்த்தியுள்ளது.
இது போன்ற நிகழ்வுகள் முந்தைய ஆட்சி காலங்களிலும் நடந்திருக்கிறது. இதில் அரசியல் சாயம் பூச வலுவான காரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது அரசின் உரிமை" என கூறியுள்ளார்.
சுஜாதா சிங் நியமனத்தில் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளதற்கு பதிலளித்த நளின் கோலி, "காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் எது கிடைத்தாலும் அதில் சர்ச்சையை தேடிப் பிடிப்பார். காங்கிரஸ் கட்சியினருக்கு ஊக்கமளிக்கும் தலைவர் இல்லை. அப்படியிருக்க அக்கட்சியினர் சர்ச்சைகளைத் தேடுவதிலேயே கவனத்தை செலுத்துவர்" என்றார்.
காங்கிரஸ் கண்டனம்:
சுஜாதாவின் பதவிக்காலம் முடிய இன்னும் 8 மாத காலம் இருக்கும்போது அவரை அதிரடியாக நீக்கியுள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மனிஷ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில், "வெளியுறவுச் செயலரை நீக்கியதற்கு, முன்னாள் அமெரிக்க துணைநிலை தூதர் தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட விதத்திற்கான எதிர்ப்பை பதிவு செய்யும் விளைவா? அமெரிக்க அதிபர் வந்துசென்ற பின்னர் சுஜாதா நீக்கப்பட்டதற்கு வேறு காரணம் இருக்கிறதா... இல்லை யதார்த்தமாக நடந்ததா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
விசா முறைகேடு வழக்கில் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டபோது, சுஜாதா சிங் தான் வெளியுறவு செயலராக இருந்தார்.
தேவையானி கைது நடவடிக்கையை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சில சலுகைகளை ரத்து செய்தது உட்பட பல கெடுபிடிகளை சுஜாதா சிங் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்திய - அமெரிக்க உறவில் பெருமளவில் பின்னடைவு ஏற்பட்டது.
இத்தகைய சூழலில் பதவிக் காலம் முடியும் முன்னரே சுஜாதா சிங் நீக்கப்பட்டு, ஜெய்சங்கர் வெளியுறவுச் செயலர் பதவியில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்தார். சீனா, சிங்கப்பூர், செக் குடியரசு நாடுகளிலும் அவர் தூதராக பணியாற்றியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தை திட்டமிட்டு செயல்படுத்துவதில் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
46 mins ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
5 hours ago