அவர்களுக்கு ஒரு மறுவாழ்வு: அமில வீச்சால் பாதிக்கப்பட்டோருக்கு வேலை வழங்கும் உணவகம்

By ஒமர் ரஷித்

அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது ஷீரோஸ் ஹேங் அவுட்.

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் இருக்கிறது ஷீரோஸ் ஹேங் அவுட் கஃபே. இங்கு பணிபுரியும் பெண்கள் அனைவரும் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள். தங்கள் சுயத்தை இழந்து முடங்கிக் கிடந்தவர்களுக்கு நம்பிக்கை விதைத்து வாய்ப்பு வழங்கியிருப்பதே இந்த உணவகத்தின் சிறப்பு.

ஆரம்ப நாட்களில் இந்த உணவகத்துக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், இப்போது நிலைமை வேறாக இருக்கிறது. கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீட்டு விழாக்கள், கலந்துரையாடல்கள் இந்த உணவகத்தை அலங்கரிக்கின்றன.

இங்குள்ள உணவு வகைகள் சிறப்பாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். உணவகத்தின் உள் அலங்காரங்கள் பெண்கள் பிரச்சினைகளை மையப்படுத்தியும் அமில வீச்சு பாதிப்புகளை மையப்படுத்தியும் அமைந்துள்ளது.

சானவ் ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் நடத்தும் இந்த உணவகத்துக்கு மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை நேரடியாக உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு வேலை பார்க்கும் பெண்கள் சிலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

2011-ம் ஆண்டு அக்டோபர் 22-ஐ தனது உயிர் உள்ளவரை மறக்க முடியாது என்கிறார் குந்தி. ஆம் அன்றைய தினம் பணியை முடித்து வெளியேவந்த அவர் மீது அவரது கணவர் ஆசிட் வீசியிருக்கிறார். குடிப்பழக்கம் கொண்ட அவர், குந்திக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்துள்ளார். கணவரின் சந்தேகத்தால் அமில வீச்சுக்கு உள்ளானபிறகு அவர் தனது வாழ்க்கையையே இழந்துவிட்டதாகவே நினைத்திருக்கிறார். வேலை கேட்ட இடத்தில் எல்லாம் அவரது தோற்றத்தைப் பார்த்தே வேலைதர மறுத்திருக்கின்றனர். அப்போதுதான அவருக்கு ஷீரோஸ் ஹேங் அவுட் கஃபேயில் வேலை கிடைத்தது.

இப்போது குந்தி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். "இந்தப் பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எங்களை காரில் அழைத்துவந்து திரும்பவும் காரிலேயே விடுதியில் இறக்கிவிடுகிறார்கள். பணி சூழல் மிகவும் இனிமையாக இருக்கிறது. பணியும் கடினமாக இல்லை. இங்கு கிடைக்கும் வருமானம் எனக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. இங்கு வருபவர்கள் எங்களைக் கவுரவமாக நடத்துகின்றனர்" என்றார்.

அவரைப் போலவே இன்னும் நிறையப் பெண்கள் ஷீரோஸால் பலனடைந்துள்ளனர். பதேபூரைச் சேர்ந்த ப்ரீத்தி, "அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தாலும் துன்புறுத்தப்படுகின்றனர். ஒரு பெண் அமில வீச்சுக்கு உள்ளானால் ஏதாவது தவற்றின் காரணமாகவே அவ்வாறு அவள் அந்த நிலைக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. எனது நடத்தையாலேயே தாக்குதல் நடந்திருக்கும் என சந்தேகிக்கின்றனர். ஆனால், ஷீரோஸ் அத்தகைய சமூகப் பார்வையை எதிர்கொள்ளும் நம்பிக்கையைத் தருகிறது" என்றார்.

அவர் மேலும் கூறும்போது, "அமில விற்பனையை முறைப்படுத்த வேண்டும். யார் வேண்டுமானால் எளிதில் வாங்கிக் கொள்ளும் வகையில்தான் அமில விற்பனை நடைபெறுகிறது. வெறும் 15 ரூபாயில் ஒருவருடையை வாழ்க்கையையே சீரழித்துவிடுகிறது அமிலம்" என்ற முக்கிய கருத்தை முன்வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்