ஒரே நபர் மீண்டும் மீண்டும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதன் மூலம் கறுப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதைத் தடுப்பதற்காக, வங்கியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுபவர்களின் வலது கை விரலில் செவ்வாய்க்கிழமை முதல் அழியாத மை வைக்கப்படுகிறது.
புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். மேலும் அவற்றை வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் ஒப்படைத்துவிட்டு வேறு ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம் என அறிவித்தார்.
இதன்படி, பொதுமக்கள் கடந்த 10-ம் தேதி முதல் காலாவதியான ரூபாய் நோட்டுகளை வங்கி களில் டெபாசிட் செய்து வருகின் றனர். எனினும், ஒரு நாளில் ஒரு நபர் அதிகபட்சம் ரூ.4,500 மட்டுமே மாற்றிக் கொள்ள அனுமதிக்கப் படுகிறது. அதேநேரம் தொழில் நுட்பப் பிரச்சினை காரணமாக ஏடிஎம்கள் முழு அளவில் செயல்படாததால் வங்கிகளில் கூட்டம் அலை மோதுகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலோசனை நடைபெற்றது. இதில், பஸ், ரயில், விமான நிலைய முன்பதிவு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவற்றில் வரும் 24-ம் தேதி வரை காலாவதியான ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 2-வது முறையாக நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒரு வாரம் ஆன பிறகும் வங்கிகளில் பணத்தை மாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய பொருளாதார விவகாரங்களுக் கான செயலாளர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பல இடங்களில் காலாவதியான ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற் காக குறிப்பிட்ட சிலர் ஒரே நாளில் மீண்டும் மீண்டும் வங்கிகளுக்கு செல்வது தெரியவந்துள்ளது. குறிப்பாக சில சமூகவிரோத சக்திகள் கறுப்புப் பணத்தை வெள் ளையாக மாற்றுவதற்காக, அப்பாவி மக்கள் அடங்கிய குழுக் களை ஒரே நாளில் வெவ்வேறு வங்கிக் கிளைகளுக்கு அனுப்பி வைப்பதாக புகார் வந்துள்ளது.
குறிப்பிட்ட சிலரே மீண்டும் மீண்டும் பணம் பெறுவதால் அனை வருக்கும் பணம் கிடைக்காமல் போவதுடன் வங்கிகளில் தொடர்ந்து நீண்ட வரிசை காணப் படுகிறது. எனவே, இதுபோன்ற செயலைத் தடுப்பதற்காக, காலா வதியான ரூபாய் நோட்டுகளை மாற்றுபவர்களின் கை விரலில் மை வைக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நபர் மீண்டும் மீண்டும் வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பதைத் தடுக்க முடியும்.
இதை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் வங்கி களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அனைத்து மாநகரப் பகுதிகளி லும் இந்த நடைமுறை செவ்வாய்க் கிழமை முதலே அமலுக்கு வருகிறது.
மேலும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காக, ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்ட வங்கிக் கணக்குகளை தவறாக பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே இதை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகை யில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் 1.3 லட்சம் அஞ்சலகங்களில் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்களிடம் கையிருப் பில் உள்ள குறைவான மதிப்பு கொண்ட (ரூ.100, 50, 20, 10, 5) ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யுமாறு, கோயில் அறக்கட்டளைகளுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதன்மூலம் சந்தையில் நிலவும் சில்லறை தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
டெபிட், கிரெடிட் கார்டுகள், இணையதள, செல்போன் வங்கி சேவை உள்ளிட்ட மின்னணு ரொக்கப் பரிமாற்றத்தை ஊக்குவிப் பதற்காக ஒரு தொழில்நுட்பக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கிகள், அஞ்சலகங்களில் பெறப்படும் காலாவதியான ரூபாய் நோட்டுகளை வேறு இடத்தில் சேமித்து வைப்பதற்கான செயல் திட்டத்தை வகுக்க ஒரு குழு அமைக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இதன்மூலம் புதிய ரூபாய் நோட்டுகளை போதுமான அளவு வங்கிகளில் இருப்பு வைக்க முடியும்.
வலது கை விரலில் மை:
ஒருவரே மீண்டும் மீண்டும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதைத் தடுப்பதற்காக கை விரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தேர்தலின்போது ஒருவரே பல முறை வாக்களிப்பதைத் தடுப்பதற்காக இடது கை விரலில் மை வைப்பது வழக்கம். ஒருசில மாநிலங்களில் அடுத்த சில தினங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுபவர்களின் வலது கை விரலில் மை வைக்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
இந்தியா
7 mins ago
தமிழகம்
28 mins ago
சினிமா
24 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
48 mins ago
க்ரைம்
54 mins ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago