‘என் மகனைக் கொன்றுவிடாதீர்கள்’: தீவிரவாதிகளிடம் கெஞ்சிய போலீஸ்காரரின் தாய்

By பீர்சதா ஆஷிக்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று 3 போலீஸாரை வீட்டில் இருந்து கடத்திச் சென்று தீவிரவாதிகள் கொலை செய்தனர். போலீஸாரை கடத்திச் செல்லும் முன் அவர்களின் குடும்பத்தினர் தீவிரவாதிகளின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதும் ஈவு இரக்கமின்றிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அதில் குறிப்பிட்ட சிறப்பு போலீஸ் அதிகாரிகள் ராஜினாமா செய்து ஆன்லைனில் ராஜினாமா கடிதத்தை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் போலீஸாரைக் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்திருந்தனர். ஆனால், யாரும் ராஜினாமா செய்யவில்லை.

இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில் உள்ள கப்ரான் கிராமத்தில் உள்ள 3 போலீஸாரின் வீட்டுக்கு நேற்று அதிகாலை தீவிரவாதிகள் சென்றனர். வீட்டில் இருந்த 3 போலீஸாரைக் கடத்திச் சென்று தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து புதரில் வீசிவிட்டுச் சென்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் நியூயார்க்கில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடத்த இருந்த பேச்சு திடீரென ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், தீவிரவாதிகள் 3 போலீஸாரையும் கடத்திச் சென்றபோது, வீட்டில் இருந்த பெண்கள் தீவிரவாதிகள் காலில் விழுந்து கெஞ்சியும், கண்ணீர் விட்டும் அழுதுள்ளனர். வேலையை ராஜினாமா செய்யக் கூறிவிடுகிறோம் என்று மன்றாடியுள்ளனர். யாரையும் கொலை செய்ய மாட்டோம் என்று கூறிவிட்டுச் சென்ற தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்தனர் என்று போலீஸாரின் குடும்பத்தினர் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.

இதில் கப்ரான் கிராமத்தைச் சேர்ந்த போலீஸார் நிசார் அகமது தோபி. இவர் அதிகாலையில் மசூதிக்குச் சென்று தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சிலநிமிடங்களில் தீவிரவாதிகள் அவரைக் கடத்திச் சென்றனர். அது குறித்து நிசாரின் 70 வயது தாய் சாயிதா பேகம் கூறுகையில், ''என் மகன் காலைத் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு அப்போதுதான் வந்திருந்தான். திடீரென்று துப்பாக்கியுடன் ராணுவ உடையில், 5 அல்லது 6 பேர் உள்ளே நுழைந்தனர். என்னுடைய மகன் குறித்து என்னிடம் விசாரித்துக்கொண்டிருந்த போது அவன் வந்துவிட்டான். உடனே அவனைப் பிடித்து இழுத்துச் சென்றனர்.

வீட்டில் இருந்த குழந்தைகள் இருவரும் பயந்து அறையில் ஒளிந்துகொண்டனர். நான் அந்தத் தீவிரவாதிகளிடம் என் மகன் வேலையை ராஜினாமா செய்துவிடுவான், நாங்கள் தீர்மானம் செய்துவிட்டோம், இன்றே கடிதத்தை அளித்துவிடுவான். அவனை விட்டுவிடுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டுக் கெஞ்சினேன்.

எனக்கு இவன் ஒரே மகன். இவனை விட்டுவிடுங்கள் என்று கண்ணீர் விட்டுக் கெஞ்சினேன். ஆனால்,தீவிரவாதிகள் நாங்கள் கொலை செய்யமாட்டோம் என்று கூறி அழைத்துச் சென்றனர். ஆனால், பிணமாகத்தான் என் மகன் எங்களுக்குக் கிடைத்தான்'' என்று கண்ணீர் விட்டு அழுதார்.

பாடாகுந்த் கிராமத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி குல்வந்த் சிங். இவரையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்தனர்.

குல்வந்த் சிங்கின் தாய் புஷ்பா தேவி கூறுகையில், ''நான் காலை உணவுக்காக ரொட்டி செய்து கொண்டிருந்தேன். அப்போது வீட்டுக்குள் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த பலர் என் மகனைத் தேடினர். அவன் அறையில் இருந்தான், என் கண்முன்னே எனது மகனை இழுத்துச் சென்றார்கள். நான் அவர்களிடம் மன்றாடியும் அவனை விடவில்லை. என் மகனை விரைவில் விட்டுவிடுவோம் என்று கூறி அழைத்துச் சென்றார்கள். ஆனால், கொன்றுவிட்டார்கள். எதற்காக என் மகனைக் கொன்றார்கள்'' என்று கதறினார்.

தீவிரவாதிகள் குல்வந்த் சிங்கை கடத்திச் செல்லும் போது, அவரின் தந்தை தூப்சிங், குல்வந்த் மனைவி ஆகியோர் ஜம்முவில் இருந்தனர்.

அதே கிராமத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் பிர்தோஸ் குச்சே. இவரையும்  தீவிரவாதிகள் கடத்திக் கொலை செய்தனர். வீட்டின் குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்த பிர்தோஸ் குச்சேவை தீவிரவாதிகள் வெளியே இழுத்து வந்து கடத்திச் சென்றனர். அப்போது, வீட்டில் இருந்த குடும்பத்தினர் அனைவரும் தடுத்து, மன்றாடியபோது, அதை பொருட்படுத்தாமல் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்