கடந்த 2013, அக்டோபர் 13-ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடல் பகுதியில், ‘எம்வி சீமேன் கார்டு ஓஹியோ’ என்ற அமெரிக்க கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. கடலோர காவல் படையினர் ஆய்வு செய்ததில் இக்கப்பலில் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக க்யூ பிரிவு போலீஸார் இந்தக் கப்பலை கைப்பற்றியதுடன் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். கப்பல் கேப்டன் டூடினிக் வேலன்டின், பிரிட்டனைச் சேர்ந்த ஐந்து பேர் உள்ளிட்ட 35 கப்பல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “அவசரகால தேவைக் காக இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் நுழைந்துள்ளனர். இதில் குற்றச்சதி இருப்பதாக கருத முடியாது. ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழும் அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது” என்று கூறி, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு முன்பு வியாழக் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, “அந்தக் கப்பல் உண்மையிலேயே இந்திய கடல் எல்லையில்தான் பிடிபட்டதா அல்லது இத்தாலி கடற்படை வழக்கைப் போல், சர்வதேச கடல் எல்லைப் பிரச்னையுடன் தொடர்புடையதா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்திய கடலோர காவல்படையினர் சோதனை மேற்கொண்டபோது, தூத்துக்குடி கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பல் பிடிபட்டது. ஆயுதங்களுடன் அவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளனர். எனவே, அவர்கள் மீதான குற்றச்சாட்டை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தவறு. எனவே, ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கின் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
இதையடுத்து, கப்பல் கேப்டன் உள்ளிட்ட 35 கப்பல் ஊழியர்களும் நான்கு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
2 hours ago