கேரளாவில் 22 அணைகள் திறப்பால் ஆறுகளில் வெள்ளம்;பேய் மழைக்கு 20 பேர் பலி: இடுக்கி அணை திறப்பு

By பிடிஐ

கேரளாவில் பெய்துவரும் பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளார். மாநிலத்தில் 22 அணைகள் நிரம்பித் திறக்கப்பட்டுள்ளன. இதனால், பெரும்பாலான மாவட்டங்களில் ஓடும் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகி இருப்பதாக மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது.

இடுக்கி மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் இறந்துள்ளனர். தேவிகுளம் தாலுகாவில் உள்ள அடிமாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர், இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இருவர் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். இடுக்கி தாலுகாவிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் ஆனால், அவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை.

மலப்புரம் மாவட்டத்தில் 5 பேரும், கண்ணூரில் 2 பேரும், வயநாடு மாவட்டத்தில் ஒருவரும் நிலச்சரிவு மற்றும் மழைக்குப் பலியாகியுள்ளனர். மேலும் வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் 3 பேரைக் காணவில்லை.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடமலையார் அணையில் இருந்து 600 கனஅடி நீர் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், பெரியாற்றில் வெள்ளம் ஓடுகிறது. மேலும், இடுக்கி அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 2,403 அடியில் 2,398 அடியை எட்டிவிட்டதால், அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு நகருக்கும், மத்திய மற்றும் வடக்கு கேரளப் பகுதிக்கும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். கனமழை காரணமாக இடுக்கி, கொல்லம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இடுக்கி அணை திறப்பு

ஆசியாவில் மிகப்பெரிய வளைவு அணையான இடுக்கி அணை தனது முழுக்கொள்ளளவை எட்டும்தருவாயில் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணை திறக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளில் முதல் முறையாக செருதோனி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணையின் நீர்மட்டம் 2,403 அடியாகும், இப்போது, அணையில் 2,399 அடி நீர் இருப்பதால், அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறை

கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால், ஆறுகளில் வெள்ளம் ஆபத்தான கட்டத்தை தாண்டிச் செல்கிறது. வரலாற்றில் முதல்முறையாக 22 அணைகள் நிரம்பும் தருவாயில் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், குட்டநாடு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆதலால், வரும் 11-ம் தேதி நடக்க இருந்த நேருக்கோப்பைக்கான படகுப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

மாநிலத்தில் மீட்புப்பணிக்காக ராணுவம், கடற்படை, கடலோர பாதுகாப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட கோரப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், மிகப்பெரிய அளவுக்குச்சேதம் ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கக் கடற்படை ஹெலிகாப்டர் உதவிக் கோரப்பட்டுள்ளது.

இதில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. வெள்ளச் சேதங்கள் குறித்து விரைவில் மத்திய அரசிடம் தெரிவிப்போம்.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதற்கிடையே பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கொச்சி சர்வதேச விமானநிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியதால், விமானங்கள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்