மகாராஷ்டிராவில் ஒரே ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பல்வேறு வகை பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தெர்மாகோல் பயன்பாட்டுக்கு அம்மாநில அரசு நேற்று முதல் தடை விதித்துள்ளது. தடையை மீறினால் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தடை குறித்து மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பொறுப்புடன் பயன்படுத்துவதை மேம்படுத்த விரும்புகிறோம். எனவேதான் சேகரிக்க, ஒழுங்குபடுத்த முடியாத மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்தோம். என்றாலும் மாற்றுப் பொருட்கள் முழுமையாக சந்தைக்கு வரும் வரை சில விதிவிலக்குகளும் அளித்துள்ளோம்.
அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இந்த முயற்சி வெற்றிபெறும். மக்கள் சிரமமின்றி புதிய பழக்கத்துக்கு மாறுவதை உறுதி செய்வதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளோம். தடை செய்யப்படாத சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இவை தெருக்களில் வீசப்படாமல் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்யவே இந்த வரி விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மாநில சுற்றுச்சூழல் துறை அமைச் சர் ராம்தாஸ் கடம் கூறும்போது, “பணமதிப்பு நீக்கம் போன்று ஒரே நாளில் இத்தடை அமல்படுத்தப்படவில்லை. போதிய அவகாசம் தரப்பட்டுள்ளது. கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து வருகின்றன. இந்தப் பிரச்சினை மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகுக்கே உரியது” என்றார்.
அபராதம், சிறை தண்டனை
இதுதொடர்பான அறிவிப்பு 3 மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு என பல்வேறு தடைகளை கடந்து இந்த நடைமுறை நேற்று அமலுக்கு வந்தது. தடையை மீறி பிளாஸ் டிக் பயன்படுத்துவோருக்கு ரூ.5000 முதல் 25,000 வரை அபராதம் விதிக்கப்பட்டும். தடையை முதல் முறை யாக மீறுவோருக்கு ரூ.5000, இரண் டாம் முறையாக மீறுவோருக்கு 10,000, மூன்றாம் முறையாக மீறுவோருக்கு ரூ.25,000 அபராதம் மற்றும் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது. பால், மருந்துகள், ஏற்றுமதி பொருட்கள், தோட்டப் பயிர்கள் ஆகியவற்றுக்கான பிளாஸ்டிக் உறைகள், பாக்கெட்டுகளுக்கு மட்டும் இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
யுவ சேனா தலைவர் ஆதித்ய தாக்கரே, பிளாஸ்டிக் தடையை வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “மக்களுக்கு தொடக்கத்தில் சிரமங்கள் ஏற்பட்டாலும் காலப்போக்கில் அவை சரியாகும். நமது வருங்கால தலைமுறையின் தலையெழுத்தை இந்த முடிவு மாற்றியமைக்கும். ஒட்டுமொத்த உலகுக் கும் ஓர் உதாரணமாக இருக்கும். மும்பையில் மழைநீர் வடிகால்களில் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் தேங்கியதே கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்துக்கு காரணம்” என்றார்.
மும்பை மாநகராட்சி
பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த மும்பை மாநகராட்சி 249 ஆய்வாளர்களை நியமித்துள்ளது. ‘ஸ்பாட் பைன்’ முறையில் இவர்கள் அபராதம் விதிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி சார்பில் பொது மக்களுக்காக கடந்த மாதம் ஹெல்ப் லைன் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மக்களிடமிருந்து நேரடியாக 142 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி சேகரித்துள்ளது. அங்கீகாரம் பெற்ற மறுசுழற்சி நிறுவனங்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் நேரடியாக விற்பனை செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை, நாக்பூர், நாசிக் உள்ளிட்ட நகரங்களில் அதிகாரிகள், நேற்று ஆய்வு நடத்தி அபராதம் வசூல் செய்தனர். முதல் நாளிலேயே பல லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்ட தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
13 mins ago
சினிமா
16 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
14 mins ago
சினிமா
32 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
26 mins ago
சினிமா
37 mins ago
சினிமா
40 mins ago
வலைஞர் பக்கம்
44 mins ago
சினிமா
49 mins ago