கர்நாடகத்தில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை இழுக்க ரூ.100 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாஜக வலைவிரிக்கிறது என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில்,. 104 இடங்கள் பெற்ற பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்று நோக்கில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது 78 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் ஜேடிஎஸ் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோரும் ஏற்றுக்கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் நேற்று ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள். அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.
இந்நிலையில் 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமானது. ஆதலால், காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ்,ஜேடிஎஸ் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதற்கு ஏற்றார்போல் இன்று காலை நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு 78 பேரில் 66 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 12 பேரைக் காணவில்லை. அதேபோல, ஜேடிஎஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் 2 எம்எல்ஏக்களைக் காணவில்லை.
இதையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி ஊடகங்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
அவர் பேசியதாவது:
ரூ.100 கோடி, அமைச்சர் பதவி
மாநிலத்தில் பெரும்பான்மை உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். அதற்கான முயற்சியில் ஆளுநரைச் சந்தித்துள்ளோம். ஆனால், மணிப்பூர், கோவாவில் பெரும்பான்மை இல்லாமல், பாஜக ஆட்சிஅமைத்தது. அதேபோன்ற முயற்சிகளை பாஜக இங்கும் செய்ய முயல்கிறது. இதற்காக எங்கள் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறுகிறார்கள்.
ரூ.100 கோடி கறுப்புப் பணம் எங்கிருந்து வந்தது?. ஏழைகளுக்கு சேவை செய்கிறவர்களுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது. வருமானவரித்துறையினர் எங்கு சென்றார்கள்?.
கரும்புள்ளி
பாஜக, காங்கிரஸ் ஆகிய இருதரப்பில் இருந்தும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை சாதாரண வார்த்தையாகக் கூறவில்லை. கடந்த 2004,2005-ம் ஆண்டு பாஜக பக்கம் சென்ற எனது முடிவால், என் தந்தையின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய கரும்புள்ளி விழுந்துவிட்டது. இப்போது அந்த கரும்புள்ளியை நீக்க கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஆதலால், நான் காங்கிரஸ் பக்கம் தான் செல்கிறேன்.
பாஜக நடத்தும் அஸ்வமேத யாகத்தின் யாத்திரை வடக்கில் இருந்தில் தொடங்கியது, தற்போது கர்நாடகவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்த அஸ்வமேத யாத்திரையின் பயணம் கர்நாடகத் தீர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பாஜவுக்கு எச்சரிக்கை
பாஜகவில் இருந்து வெளியேறத் தயாராக இருக்கும் எம்எல்ஏக்கள் எங்களுடன் வாருங்கள். நீங்கள் எங்கள் அணியில் இருந்து எம்எல்ஏக்களை பிரிக்க நினைத்தால், அதேபோன்றதே நான் உங்களுக்கு பதிலுக்கு செய்து, இரு மடங்கு எம்எல்ஏக்களை இழுப்போம். குதிரை பேரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் எந்தவகையான முடிவையும் எடுக்காதீர்கள் என ஆளுநரிடமும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.
கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் என்னைச் சந்தித்தாரா? யார் அந்த ஜவடேகர். அந்த ஜென்டில்மேன் யார். எனக்கு யாரையும் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு என்னை அவர் சந்தித்தார் என்பது பொய்யான செய்தி.
மீண்டும் நாங்கள் ஆளுநரைச் சந்திப்போம். நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் கொடுத்திருப்பதால், ஆட்சியை நடத்திச் செல்வதில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது எனத் தெரிவிப்போம்.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
14 hours ago