சிறப்பு அந்தஸ்து அளிக்காததால், ஆந்திர மாநில மக்களால் பாஜக நிராகரிக்கப்பட்டுவிட்டது, விரைவில் ஒட்டுமொத்த நாட்டு மக்களால் பாஜக நிராகரிக்கப்படும் காலம் வரும் என்று தெலங்குதேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஆவேசமாகப் பேசினார்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது, சிறப்பு அந்தஸ்து, சிறப்பு நிதித்தொகுப்பு வழங்குவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகள் ஆகியும் ஆந்திர மாநிலத்துக்கு எந்தவிதமான சிறப்பு அந்தஸ்தும் வழங்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த தெலங்கு தேசம் கட்சி, பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் கொண்டு வந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் அமர்வில் கடந்த 21 நாட்களையும் தெலங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்கள் முடக்கினர். இதற்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டன.
இதற்கிடையே டெல்லியில் தெலங்குதேசம் கட்சியின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது அரசின் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் தலைநகர் அமராவதியிலிருந்து சைக்கிள் பேரணி மூலம் நியாயம் தேடி பிரச்சாரப் பயணத்தை இன்று தொடங்கினார்.
அதற்கு முன்னதாக வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் எம்.பி.க்களுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
''நாடாளுமன்றத்தை கடந்த 21 நாட்களாக நடத்தாமல், பாஜக அரசு மீண்டும், மீண்டும் ஒத்திவைத்தது. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாமல் ஓடி ஒளிந்துகொண்டது.
நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டால் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து முறையிடுவோம். ஆந்திர மாநிலத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி பாஜக துண்டாடப் பார்க்கிறது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காத காரணத்தால், ஆந்திர மக்கள் ஏற்கெனவே பாஜகவை புறந்தள்ளிவிட்டார்கள், ஏற்க மறுத்துவிட்டார்கள். விரைவில், நாடு முழுவதும் பாஜகவை மக்கள் நிராகரிப்பார்கள். அதற்கான காலம் வரும்.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது, சிறப்பு நிதி உதவி, சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படும் என்று மாநிலங்களவையில் உறுதியளிக்கப்பட்டது. அந்த வாக்குறிது நிறைவேறும் வரை நாங்கள் எங்கள் கோரிக்கையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை.
எங்களுடன் சேர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தாதது பிரிவினைவாத அரசியல் அரங்கிவிட்டதற்கான சாட்சியாகும்.
இதற்கு முன், நம்நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள் இதேபோன்ற பிரித்தாளும் சூழ்ச்சியை மக்களிடையே செய்தார்கள். இதே பணியை மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை வைத்து நடத்துகிறது.''
இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
59 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
உலகம்
5 hours ago
ஆன்மிகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago