தொடர்மழை எதிரொலி: தேன்கனிக்கோட்டை வனச்சரக நீர்நிலைகளில் குளித்து மகிழ கூட்டம் கூட்டமாக வரும் யானைகள்

By ஜோதி ரவிசுகுமார்

ஓசூர்: நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை காலக்கட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அனைத்து ஏரிகளும், தண்ணீர் தொட்டிகளும் மழை நீரால் நிரம்பி வழிகின்றன. இந்த மழை நீரால் நிரம்பியுள்ள நீர் நிலைகளில் குளித்து மகிழ யானைகள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கி உள்ளன.

ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஜவளகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இந்த வனச்சரகங்களில் கடந்த 20 ஆண்டுகளாக கோடைகாலத்தில் கடுமையான வறட்சியும், அதைத் தொடர்ந்து தென் மேற்கு பருவமழை காலகட்டத்தில் மழை குறைவாகவும் பெய்வது வழக்கமான நிகழ்வாக இருந்து வந்தது. இதனால் நீர் நிலைகளை நாடி யானைகள் கிராமங்களுக்கு வருவதை தடுக்கும் வகையில் வனவிலங்குகளின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இங்குள்ள 7 வனச்சரகங்களிலும் தலா 10 குடிநீர் தொட்டிகளை தனியார் நிறுவனம் மற்றும் தொண்டு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் வனத்துறையினர் அமைத்துள்ளனர்.

இந்த தண்ணீர் தொட்டிகளில் ஆண்டுதோறும் டிராக்டர் மூலமாக தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபடுவது வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. நடப்பு கோடைகாலத்தின் ஆரம்பத்தில் கடும் வெயில் காரணமாக வனச்சரகங்களில் வறட்சி ஏற்படும் நிலை உருவானது. இதை தவிர்க்க வனத்தில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வனவிலங்குகளின் தாகம் தணிக்கும் பணியில் வனத்துறையினர் மேற்கொண்டனர்.

இதனிடையே, இந்த வனத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் டிராக்டர் மூலமாக தண்ணீர் நிரம்பும் பணியில் பொதுமக்களும் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், வனத்தில் உள்ள தொட்டிகளில் டிராக்டர்களில் தண்ணீர் நிரப்புவதற்கு அவசியமில்லாத வகையில் நடப்பாண்டு கோடைக்காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வனச்சரகங்களில் அதிகனமழை பெய்து, முதல் முறையாக ஓசூர் வனக்கோட்டம் காப்புக்காடுகளில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் எல்லாம் வேகமாக நிரம்பி வழிந்தது. அதைத் தொடர்ந்து நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை காலகட்டத்திலும் இந்த வனச்சரகங்களில் தொடர்ந்து பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இரண்டாவது முறையாக ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன.

இந்த நீர் நிலைகளில் குளித்து மகிழ யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் நிலைகளை நாடி வரத்தொடங்கி உள்ளன. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் கூறியதாவது, ”தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் தென்மேற்கு பருவ மழை காலகட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக இங்குள்ள உள்ள சாமி ஏரி, மல்லேகவுண்டன் ஏரி, பிலிநீர் குட்டை ஏரி உட்பட 13 பெரிய ஏரிகளும், 12 தொட்டிகளும் மற்றும் 20-க்கும் மேற்பட்ட சிறிய நீர் குட்டைகளும் மழை நீரால் நிரம்பியுள்ளன.

இந்த நீர்நிலைகளை நாடி வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன. குறிப்பாக நேற்று காலை குள்ளஹட்டி காப்புக்காட்டில் உள்ள மல்லேகவுண்டன் ஏரியில் 12 யானைகள் கூட்டமாக வந்து நீண்ட நேரமாக ஏரியில் குளித்து மகிழ்ந்தன. அதேபோல மழை நீரால் நிரம்பியுள்ள சாமி ஏரி உள்ளிட்ட ஏரிகளை நாடியும் வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கி உள்ளன.

வனச்சரகத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளதால், வனவிலங்குகள் குடிநீர் தேவைக்காக வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களை நாடிச் செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

15 mins ago

இந்தியா

44 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்