வட தமிழகத்தின் ஆற்காடு பகுதியின் பண்பாட்டுப் பதிவுகளைத் தாங்கி நிற்கும் நகரம் வேலூர். பாலாற்றின் கரையில் வளர்ந்த நாகரிகத்தைப் பறைசாற்றி நிற்கும் வேலூர், சுதந்திரப் போராட்டத்திலும் முத்திரை பதித்த நகரம். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான வேலூர் புரட்சி வரலாற்றில் முக்கியப் பதிவாகத் திகழ்கிறது.
அரசியல் ரீதியாகவும் வேலூர் பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. காங்கிரஸுக்கு எதிராக திராவிட இயக்கம் வலிமையடைந்தபோது அதில் வேலூர் மிக முக்கியப் பகுதியாக விளங்கியது. திராவிட இயக்கத் தலைவர்கள் பலரைத் தந்த பகுதி வேலூர்.
வேலூர் தொகுதியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கியுள்ளார் ஏ.சி.சண்முகம். அதிமுக கூட்டணியின் வாக்கு வங்கியையும் தாண்டி இந்தத் தொகுதியில் அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. இதன் காரணமாக கடந்த மக்களவைத் தேர்தலில் இங்கு பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட அவர் திமுக கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்தார்.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நிலவரம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் |
அதிமுக | செங்குட்டுவன் | 3,83,719 |
பாஜக | ஏ.சி.சண்முகம் | 3,24,326 |
முஸ்லிம் லீக் | அப்துல் ரஹ்மான் | 2,05,896 |
காங் | விஜய் இளஞ்செழியன் | 21,650 |
சமூக ரீதியாக குறிப்பிட்ட சமூகக் கட்டமைப்பை கொண்டிராமல், பல சமூகங்களும் வாழும் பகுதி இது. இஸ்லாமியர் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் முஸ்லிம் லீக் கூட்டணி பலத்துடன் பலமுறை களம் கண்ட தொகுதி இது.
2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக இந்தத் தொகுதியில் வன்னியர் சமூக வாக்குகள் குறிப்பிட்ட அளவு இருந்ததால் பாமக இரண்டு முறை வென்றுள்ளது. இருப்பினும் தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் தொகுதியின் சமூகக் கட்டமைப்பு மாறியுள்ளதால் இங்கு போட்டியிட பாமக ஆர்வம் காட்டவில்லை.
முந்தைய தேர்தல்கள்
ஆண்டு | வென்றவர் | 2ம் இடம் |
1971 | உலகநம்பி, திமுக | மணவாளன், ஸ்தாபன காங் |
1977 | தண்டாயுதபாணி, ஸ்தாபன காங் | அப்துல் சமது, சுயேட்சை |
1980 | அப்துல்சமது, சுயேட்சை | தண்டாயுதபாணி, ஜனதா |
1984 | ஏ.சி.சண்முகம், அதிமுக | ராமலிங்கம், திமுக |
1989 | அப்துல்சமது, காங் | அப்துல் லத்தீப், திமுக |
1991 | அக்பர் பாஷா, காங் | சண்முகம், திமுக |
1996 | சண்முகம், திமுக | அக்பர் பாஷா, காங் |
1998 | என்.டி.சண்முகம், பாமக | முகமது சாதிக், திமுக |
1999 | என்.டி. சண்முகம், பாமக | முகமது அசீப், அதிமுக |
2004 | காதர்முகைதீன், திமுக | சந்தானம், அதிமுக |
2009 | அப்துல் ரஹ்மான், திமுக | வாசு, அதிமுக |
ஆனால் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நிலைமை மாறியது. திமுக 2 தொகுதிகளிலும், அதிமுக 4 தொகுதிகளிலும் வென்றன. தனித்துப் போட்டியிட்ட பாமக அணைக்கட்டு தொகுதியில் மட்டும் 24,591 வாக்குகளைப் பெற்றது. மற்ற தொகுதிகளில் பெரிய அளவில் வாக்குகளைப் பெறவில்லை. பாஜக மற்றும் தேமுதிகவும் மிக சொற்ப வாக்குகளையே பெற்றன.
சட்டப்பேரவை தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
வேலூர் | கார்த்திகேயன், திமுக |
வாணியம்பாடி | நிலோபர், அதிமுக |
ஆம்பூர் | பாலசுப்பிரமணி, அதிமுக |
அணைக்கட்டு | நந்தகுமார், திமுக |
கே.வி.குப்பம் (எஸ்சி) | லோகநாதன், அதிமுக |
குடியாத்தம் (எஸ்சி) | ஜெயந்தி பத்மநாபன், அதிமுக |
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை எதிர்த்து திமுகவின் சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். திமுக மூத்த தலைவர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் என்பது கூடுதல் பலம். இதனால் வலிமையான இருவேட்பாளர்கள் மோதும் தொகுதியாக வேலூர் உள்ளது.
இந்த இருகூட்டணியைத் தவிர மற்ற கட்சிகளுக்குப் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லாததால் இந்த இரு அணிகளுக்கு இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. கதிர் ஆனந்தைப் பொறுத்தவரையில் திமுகவின் வலிமையான வாக்கு வங்கியுடன், இந்தத் தொகுதியில் முஸ்லிம்களின் வாக்குகள் இருப்பது கூடுதல் பலம்.
அந்தக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக என எந்தக் கட்சிக்கும் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. அதேசமயம், அதிமுகவின் வாக்கை நம்பி களமிறங்கியுள்ள ஏ.சி. சண்முகத்துக்கு சொந்த செல்வாக்கு கூடுதல் பலம். எனினும் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு இங்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இதனால் அதிமுக மற்றும் திமுகவின் தனிப்பட்ட வாக்குவங்கியே நேரடியாக மோதும் களமாக அமைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago