மயிலாப்பூர் தம்பதி கொலை வழக்கு: கொலையாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: மயிலாப்பூரில் தொழில் அதிபர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்த கொலையாளிகள், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூர், துவாரகா காலனியில் வசித்து வந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த்(60). தொழிலதிபரான இவர், குஜராத் மாநிலத்தில் ஐ.டி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி அனுராதா (55). இவர்களுக்கு சஸ்வத் என்ற மகனும், சுனந்தா என்ற மகளும் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.

இருவரையும் பார்க்க ஸ்ரீகாந்த், மனைவியுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இருவரும் சென்னை திரும்பினர். பின்னர், விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மயிலாப்பூர் வீட்டுக்கு வந்தனர். நேபாள நாட்டைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் கிருஷ்ணா என்ற பதம்லால் கிருஷ்ணா(45) காரை ஓட்டி வந்தார்.

இவர், ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் 20 ஆண்டுகளாக காவலாளியாகப் பணியாற்றி வரும் லால்சர்மாவின் மகன் என்பதால் ஸ்ரீகாந்துக்கு தேவைப்படும் போதெல்லாம் அவருக்காக கார் ஓட்டி வந்துள்ளார். இதற்கிடையே ஸ்ரீகாந்த், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது சொத்து ஒன்றை ரூ.40 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்தப் பணத்தைக் கொள்ளையடிக்க, தனது நண்பரான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரவி என்ற ரவிராய்(39) என்பவரிடம் சேர்ந்து 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ளார் கிருஷ்ணா. அதன்படி, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்ரீகாந்த்பண்ணை வீட்டில், கடந்த 3 நாட்களுக்குமுன் குழிதோண்டி தயாராக வைத்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து வீடு திரும்பிய ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா இருவரையும் கட்டையால் தாக்கியும், கழுத்தில் கத்தியால் குத்தியும் கொலை செய்து, சடலத்தை ஸ்ரீகாந்த் காரிலேயே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை வீட்டுக்கு எடுத்துச் சென்று ஒரே குழியில் போட்டு புதைத்துள்ளனர்.

சொத்து விற்ற தொகையான ரூ.40 கோடியை ஸ்ரீகாந்தின் வீட்டில் தேடியபோது பணம் அங்கு இல்லை. இதனால் அங்கிருந்த 1,000 பவுன் நகை உட்பட ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகளை சூட்கேஸில் எடுத்துக் கொண்டு ஸ்ரீகாந்தின் காரிலேயே நேபாளம் தப்பிச் செல்ல முயன்றனர். இந்நிலையில், கொள்ளையர்கள் இருவரையும் ஆந்திராவில் வைத்து அம்மாநில போலீஸார் உதவியுடன் 6 மணி நேரத்தில் சென்னை போலீஸார் கைது செய்தனர்.

கொலையாளிகள் இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மயிலாப்பூர் போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்காக விரைவில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

நேபாளம் செல்லும் தனிப்படை

கொலையாளி கிருஷ்ணாவின் தந்தை லால்சர்மா, 20 ஆண்டுகளாக ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் காவலாளியாக இருந்துள்ளார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மனைவியுடன் நேபாளத்துக்குச் சென்றுள்ளார். எனவே, மகனின் கொலைத் திட்டம் தெரிந்து நேபாளம் சென்றாரா? என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. எனவே, இதுகுறித்து விசாரிக்க சென்னை தனிப்படை போலீஸார் விரைவில் நேபாளம் செல்ல உள்ளனர்.

உடற்கூறாய்வு வீடியோவில் பதிவு

பண்ணையில் புதைக்கப்பட்டிருந்த ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி சடலங்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அமெரிக்காவிலிருந்து ஸ்ரீகாந்தின் மகன், மகள் வந்த உடன் அவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘உடற்கூறாய்வின் முதல் தகவல் அறிக்கையின்படி 2 பேரின் தலையில் அடிக்கப்பட்டு உள்ளது. இருவரது கழுத்திலும் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது. உடற்கூறாய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

கருத்துப் பேழை

12 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்